4/6/11

அடிமை இருளை அகற்ற வந்த ஆதவன் !

                  இன்றளவில் நம் இந்திய  நாட்டில் சாதிப்  பிரச்சனை 
 என்ற தீய சக்தி   நாட்டின்  வளர்ச்சிக்கு மிகப்  பெரிய பங்கமாக உள்ளது .
இந்த சாதி வெறியைக்  கொண்டே  அரசியல் தலைவர்கள் நம்மை முட்டாளாக்கிப்  பார்க்கும் அவலமும் தொடர்ந்து நடந்தேறிக்  
கொண்டே தான்  உள்ளது. இதற்கு எல்லாம்  முற்றுப்  புள்ளி வைக்கவும், தாழ்த்தப்பட்டோரை   அடிமைத் தளையிலிருந்து 
காக்கவும் பாடுபட்ட முக்கிய தலைவர் பாபா சாஹேப் என மக்களால் 
அன்புடன்  அழைக்கப்படும் டாக்டர் ,பீ. ஆர் .அம்பேத்கார் அவர்கள்.
                                                       பீம் ராவ் அம்பேத்கார் அவர்கள் 1891
ஆம் வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி   மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி ,பீமா பாய் அவர்களின் மைந்தனாகப்  பிறந்தார்.அவர் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்ததால் தனது இளம் பருவத்திலிருந்தே பல்வேறு இன்னல்களை சந்தித்தார்.அவரின் துயரமும், துன்பங்களும்  அவரை ஒடுக்கவில்லை மாறாக தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை  உயர்த்த வேண்டும் என்ற உத்வேகத்தையே கொடுத்தது.
                      
                  அம்பேத்கார் இளம் பருவம் முதலே சிறந்த அறிவாளராக இருந்தார், அவருடைய திறமையையும் ,கல்வித்திறனையும் கண்ட அந்நாளைய பரோடா மன்னர் அவரது கல்விச்  செலவுகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு அவர் கொலம்பியா பல்கலையில் கல்வி கற்க உதவி செய்தார். அங்கு அவர்  “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கான  முதுகலைப் பட்டத்தை 1915  இல் பெற்றார். மேலும் பொருளாதார முதுகலைப்   பட்டத்திற்காக   "கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகமும் நிதியும்" என்ற கட்டுரையை சமர்ப்பித்தார் . பின், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.
                             
               இவ்வாறாக  பொருளாதாரத்தில் மேதையாக  திகழ்ந்த  அம்பேத்கார்
தாழ்த்தபட்ட மக்களின் நலனையும்  மறந்து விடவில்லை .அவர்களுக்காக பல்வேறு கருத்துகளை முன்னிலைப்  படுத்தினார் அவற்றில் ஒன்றுதான்
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான " இரட்டை வாக்குரிமை " .ஆனால் இதனை காந்திஜி அவர்கள் எதிர்த்ததால் இருவருக்குமிடையே 1931  இல்  " பூனா" ஒப்பந்தம் கையெழுத்தானது  இதன்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டது.
                            
           இந்திய சுதந்திரத்திற்காகவும் ,ஒடுக்கப்பட்டோருக்காகவும்  குரல் கொடுத்த அம்பேத்கார் நாட்டின் விடுதலைக்குப்  பின் முதல் சட்ட அமைச்சராக பதவியேற்றார்.ஆனால் 1951  ஆம் ஆண்டு வெளிவந்த "இந்து சட்டத் தொகுப்பு மசோதா"வை எதிர்த்துத்  தன் பதவியை  கைவிட்டார்.
ஐந்து அறிவு ஜீவிகளை விட மோசமாக நாங்கள் நடத்தப்பட்டால்  
எந்த தாழ்த்தப்பட்ட இந்தியன்  இந்த நாட்டை தாய் நாடாக ஏற்பான்  என மகாத்மா காந்தியிடம் கூறியவர் நம் அம்பேத்கார்.
              
            இத்தகைய  தியாகச்  செம்மல்,தனக்காக இல்லாமல்,ஒடுக்கப்பட்ட 
மக்களுக்காக போராடிய மாவீரர் ,அடிமை இருளை அகற்ற வந்த
ஆதவன் 1956  ஆம் ஆண்டு டிசம்பர் 6  ஆம்  நாளில் தம் இன்னுயிரை
விட்டு இந்த மண்ணிலிருந்து  மறைந்தார்.அவர் தம்  உடலை விட்டுப்
பிரிந்தாலும் மக்களின் எண்ண ஓட்டங்களில் இன்றளவும் வாழ்ந்துக்-
கொண்டுதான் உள்ளார் என்பதில் எள்ளளவேனும் ஐயமில்லை .

reference: விக்கி பீடியா, கூடல்.காம்

 

4/3/11

தாய்த் தமிழே!

                  


தமிழ்க் கூடலின்  நாயகி நீ

தலை மொழிகளுக்குள் தலைவி  நீ

ஆயிரம் காலப்  புதையல் நீ

அள்ள அள்ளக்  குறையா அமுதக் கலன்  நீ !


இனிக்கவில்லை இன்னபிற இலக்கியங்கள்

நாட்டமில்லை நாடாளும் மொழிகளிலே

தாயிருக்க அடுத்தவளை அணைப்பேனா?

நீயிருக்க நினைப்பேனா வேறு மொழி!


தாயகத்தை  விலகி விட்டேன்

உயிர்த் தந்து மொழி தந்த-

தாயை விலகி விட்டேன்!

அறிவுத்  தந்து ஆற்றல் தந்த-

தந்தையை விலகி விட்டேன்

நினைவெல்லாம் நீக்கமற நிறைந்த

உன்னை விலகேன் கனவிலும் !


அளவில்லா அன்புடன் கணவன்

ஒப்பிலாச் செல்வமாய் பிள்ளை

நீங்கா நினைவுகளாய் தாய்த் தந்தை

நினைக்க வேண்டிய உயிர்களாய் உறவுகள்!

நீ மட்டும் உடலோடு ஒட்டிய உயிராய் !



நாள்தோறும் ஆயிரம் சுவைகள் நாவில்-ஆனால்

அம்மாவின் சுவை மட்டுமே தேனாய்!

நாள்தோறும் ஆயிரம் மொழிகள் செவியில்-ஆனால்

நீ மட்டுமே தீம்பழமாய்!


நெஞ்சமெனும் வானில் செங்கதிரானாய்

நேசமுள்ள மனதில் நினைவலையானாய்

எண்ணமெனும் காகிதத்தில் எழுத்தானாய்-என்

துயிலிலும்   நீயே கனவானாய் !


தேனாய்,தெள்ளமுதாய்,

தெவிட்டாத இன்பமானாய்!

மானே உந்தன் அழகினிலே

மயங்கி நின்றேன் நான் என்பேன்!


நான் மட்டுமா? நிமிர்ந்து பார்த்தேன்

நிற்க இடமில்லை,நோக்க ஒளியில்லை

நேசமாய் உன் பிள்ளைகள்!

நூறில்லை, .ஆயிரம் இல்லை

எண்ணுவதற்கு எண்ணுமில்லை

நிம்மதியாய் நீ இரு,

குறைவில்லை நாங்களிருக்க !


தரணியெல்லாம் தவழ்ந்து வரும் தமிழ் மொழியை நாமும் கையிலெடுத்து கொஞ்சி மகிழ்வோம் ,நம் பிள்ளைகளும் தமிழோடு சேர்ந்து வாழ வழி காணுவோம் !