12/30/13

நான் மழை பேசுகிறேன் !

             நான் மழை பேசுகிறேன் !


நீல  வானின்  நித்திரைக்   கலைத்தேன்

நிற்கா  பூமியை  நனைத்து  அணைத்தேன்

சிரிக்கும்  பூக்களைச்   சிலிர்க்க  வைத்தேன்

சிறகில்லா மனதின்  சிந்தனைக்  கலைத்தேன்

வெள்ளைப்   பூக்களின்  கொள்ளைச்   சிரிப்பிலே

மயங்கி  நின்றேன் ,  சில சமயம்  விழுந்து  வைத்தேன்

பச்சை  புல்வெளி  பூரித்து  நிற்க


இச்சை  வார்த்தைகளால்  இதமாய்  நனைத்தேன்

நிலவுப்பெண்  நீங்கி  சென்றாள்   என

நிதர்சனம்  கூறி  நிற்காமல்  வந்தேன்

உதிக்கும்  சூரியனின்  உள்ளத்தை  கவர்ந்து

அணைக்கும்  மேகக் கைகளால்  ஒளித்து நின்றேன்

வானே  கருணை  செய்  என

வாடி  நின்ற  உழவனுக்கு

வந்தேன்  நானே  என

வருத்தம்  தீர  வள்ளலாகினேன்

தீரா நதியாய் என்னைத் -

திருத்தம் செய்த  நாளெல்லாம்

காடோ ,மலையோ  ஏறிக்  கனவாய்ப்  போயிற்று

எங்கோ  வந்தேன் ,எங்கோ  சென்றேன்  என

நாட்கள்  இப்போதெல்லாம்  நகர்ந்துப்   போயிற்று

இல்லாதபோது  இதமாய்  அழைத்தான்

இருக்கும்  போதோ  நிந்தித்து  தீர்த்தான்

என்னை  சேமித்து  நீர் வளமாக்கினால்

நெஞ்சம்  குளிர  நிறைவாய்  பொழிவேன்

என்னை  நீயும்  யாரென  கேட்டாய்?

இல்லல் தீர்க்க ,இடர்க்   களைய  வருவேன்

வள்ளல்  எனப்  போற்றி  வணங்கி  நிற்பான் - பின்

வந்தாயே  எனக்  கூறி  பிணங்கி   கொள்வான்

நானே  நதியாவேன்  ,நானே  கடலாவேன்

நானே  நாற்திசையும்  நலமாக்கி நகர்வேன்

தேனே  தினையே  என

தித்திக்கும் வார்த்தை  வேண்டாம்

என்னை வீணே  விரயம்  செய்யாது
விளங்க  செய்  உன்னுலகை - இன்னும்

விடை பகராமல் வினாவாகி நின்றேனோ!

என்னை  மானுடன்  மழை என்று  சொல்வான்

இன்று  நான்  என்  கதை  சொல்லி  நின்றேன்

இறுதியாய்  உனக்கு  ஒன்று

இன்னுலகின்  இன்னலை   தீர்க்க -

செய்  என்னை  நன்று.




















தாய்க்குருவி

                                    தாய்க்குருவி

என் ஜன்னலிளிருந்து பார்த்துக்  கொண்டிருந்தேன் , 
இலை உதிர்ந்த மொட்டை மரங்களில்
ஏற்கனவே கட்டிய கூட்டை ஏக்கத்துடன்
சுற்றி வந்தன அந்த குருவிகள்,பனி மழை கொட்டியது,
குழந்தைக்கு குளிரும் என ஒரு
கம்பளியை  இரண்டாக மாற்றினேன்  மூடிய வீட்டினுள்,
ஜன்னல் திரையை விலக்கினேன்
கண்ட காட்சி கல் மனதை கரைத்தது
இறகுக் கம்பளிக்குள் மூடி கொண்டது தன் பிள்ளைகளை
அந்த தாய் குருவி திறந்தவெளி கூட்டினில் நனைந்தபடிதான் !
படுக்கைக்கு சென்று கம்பளியை போர்த்தினேன்
கனத்தது மனம்,உதறிதள்ளினேன் கம்பளியை,
நித்திரை நிறைந்தது தாய் குருவியின் நினைவுகளுடனே !

கைம்மாறு

கைம்மாறு

அம்மா !
வாடி   நின்றேன் ,வாரி அணைத்தாய்
தேம்பி வந்தேன்
தேறுதல் சொன்னாய்
பசியோடிருந்தேன்
பதறி பால் சோறு தந்தாய்
அடிபட்டு நின்றேன்-எனக்காய்
அழுது நின்றாய்
நோய் என்று வந்தேன்
நோகாமல் பணிவிடை செய்தாய்
இன்று
பார்க்கனும்போல்  இருக்கு வா என்றாய்
விமான பயணச் சீட்டிற்கே  லாட்சம் வருது
 பார்க்கலாம் என்றேன்!



என் அம்மா

என் அம்மா !
             
               பாப்பாவைத்  தூங்கவைத்து விட்டு வந்து வேலையெல்லாம் முடித்து மணியைப் பார்த்தேன் மணி இரவு 12 ஆகி இருந்தது.இன்றைக்கு அன்னையர் தினமல்லவா  என எண்ணிக் கொண்டே தொலைபேசியை எடுத்தேன் அம்மாவுடன் பேச, அம்மாதான் எடுத்தாள் ஹலோ என்பதற்குள் காய்கறியும் வேணாம் ஒண்ணும் வேணாம் நீங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தா போதும்னு கத்தினாள், என்னம்மா அம்மு பேசறேன் என்றேன் நான்,அட அம்முக்குட்டி
என்னடா இத்தனை மணிக்கு மாப்ள பக்கத்துல இருக்காங்களா? நான் கத்திட்டேன்டி அப்பான்னு நினச்சு என்றாள் வெகுளியாக,பரவாயில்லம்மா
அப்பா எங்க என்று முடிப்பதற்குள்,உங்க அப்பதானே காலையில காபி குடிச்சுட்டு காய்கறி வாங்க போனவருதான் கடையில நின்னுக்கிட்டு 1 மணி
நேரமா அத வாங்கவா இத வாங்கவானு 10 போனு  ,போனுக்கு கார்டு போட பணம் என்ன மரத்திலையா காய்க்குது என்று பொரிந்து  தள்ளினாள் அம்மா, அதுக்காக ஏம்மா திட்டறீங்க கடைல இருக்கப்ப என்றேன் ,அவ்வுளவுதான்
வந்துட்டியா உங்க அப்பாவுக்கு வக்காலத்து வாங்க நேத்து ஆட்டோல  ஏறும்போது கொஞ்சம் கால் இடறிட்டு அதுக்கு குதிக்கறார் வானத்துக்கும் பூமிக்கும் ஆட்டோகாரர் என்னமா ஆச்சு என்றார் எனக்கு ஒரே வெட்கமா போச்சு ,நீ  உங்கப்பா வந்தோன முதல்ல இத கேக்ற என்றாள் மூச்சு விடாமல் ,இடையே மூன்று தடவை மாப்ள பக்கத்தில  இல்லையே என்று கேள்வி வேறு, அவளே தொடர்ந்தாள் மணி ரொம்ப ஆச்சோ? என ,ஆமாம் 12 .30 என்றேன் நான் ,அச்சோ தூங்கல ?என்றாள் ,அன்னையர் தின நல்வாழ்த்துகள் அம்மா என்றேன்  கடைசியாக அவள்எனக்கு பேச  இடைவெளி விட்ட மகிழ்ச்சியில்.ரொம்ப நன்றிடி பாப்பா என்றாள் வெட்கம் கலந்த மகிழ்ச்சியுடன்.போய் தூங்கு ரொம்ப நேரம் ஆய்டுச்சு உனக்கு ஒத்துக்காது ,அப்பாவும் பசி தாங்க மாட்டாங்க நான் போய் இட்லி ஊத்தறேன் என்று தொலைப்பேசியை வைத்தாள் என் அம்மா.

படைப்போம் பழைய பாரதம் !

                                        படைப்போம் பழைய பாரதம் !

மாதம் மும்மாரிப்  பெய்து
மழையெல்லாம் குளமாக்கி
கழனியெல்லாம் கதிர் விளைந்து
கதிரெல்லாம் போரடித்து
களம் களமாய்  காயவைத்து
நிறைகுடமாய் மனம் நிறைந்து
மண்ணோடு மனிதன் கலந்து
மனிதனோடு மண் கலந்த நாளெல்லாம்
கனவோடு கனவாகி
நினைவோடு நில்லாமல் போனது !

சூழ்நிலையை சுரம் செய்து
வானிலையை வதம் செய்து
வையகத்தின் மழைக் கொன்று -உணவிற்கு
கையேந்தி நிற்கும் காலம்
கையருகில்  உள்ளது !

தரிசெல்லாம் கழனியாக்கி
கடல் கடந்து வணிகம் செய்து
வையகத்தில் வாழ்ந்து நின்ற பாரதம்

இன்று தரிசெல்லாம் கூறு போட்டு
காசுக்கு மாலைப்  போட்டு
விளைநிலத்தை விலைக்கு விற்று
வீணாய்ப் போய் நிற்கின்றது !

மரங்களும் ,மலைகளுமாய்
குளங்களும்,குளிர் நிலங்களுமான  பூமி
ஆலைகளும் ,சாலைகளுமாய்
கடைகளும் ,கட்டுமானங்களுமாய்
நிலைகுலைந்து நிற்கின்றது !

போன வருடம் வந்து சென்ற வழியெல்லாம்
இன்று புதிதாய் தெரிகின்றது !
பூக்களாய் பூத்து கிடந்த மரமெல்லாம் -இன்று
புதுக் கட்டிடத்தின் கதவு ஜன்னல்களாய் !

ஒரு நிமிடம் கண்ணை மூடினாலும்
மூழ்கச் செய்யும் திறந்த கழிவு நீர்க்  கால்வாய்கள் !
ஒரு நிமிடம் மூக்கை மூடாமல்
 முன்னேறி போக முடியா முக்கிய நகரங்கள் !

பாரதத்தை விட்டு  பெரும் தொலைவில் நாம்
ஆனால் பாரம் மட்டும் மனதில்!
படைப்போம்  பழைய பாரதம்
புலம் பெயர்ந்த நம்மின் பங்களிப்போடு !