6/22/20

அநீதிக்குத் தீர்வு கொடு

அநீதிக்குத் தீர்வு கொடு

கருக்கலான பொழுதது
காட்டு மரங்கள் புடை சூழ
களிறும், பிடியுமங்கே
காதல் மொழி மொழிந்தனரே!



செவி கேட்கும்
செய்தியும் மெய்தானோ?
செல்லச் சிணுங்களிலே
செவந்து நீயும் போவதென்ன!

கள்வரே நீர் கேட்ட
களிசெய்தி உண்மைதானே!
காத்திருந்த நாளும் வர இன்னும்
காலாண்டு பொறுக்கணுமே!

முத்தான முத்தே உன்னால்
பித்தாகி நானும் போனேன்
சத்தமாய்ச் சொல்வேனடி நம்
சாமி கொடுத்த பிள்ளையென்று!

அதுக்குத்தான் ராசாவே
அடக்கி வைத்தேன் ஆர்வத்தையும்
அன்பான ராசா உன்னை
அணை போட முடியாதே!

விடியலும் வந்ததிங்கே
விரைவாய் நடை போடு
வீணாய்த் தொல்லை வரும்
வேறெவரும் பார்த்து விட்டால்!

பசியுமது பொறுக்கவில்லை
பகல் முழுதும் உணவுமில்லை
பசித்திருக்க உனையும் விடேன்
பத்திரமாய் அமர்ந்து இரு
பார்த்து வரேன் உணவதனை!

மனிதர்கள் கண்ணில்
மாட்டிவிட்டால் பெரும் துக்கம்
மங்கிய வெளிச்சம் போவதற்குள்
மன்னவனே நீயும் வா!

நெடுநேரம் ஆனதென்ன
நெஞ்சமும் பதைப்பதென்ன
நிலைகெட்ட மனமுமது
நெருடலைத் தருவதென்ன!

ஐயகோ ஒரு மனிதன்
அருகினில் வருகிறானே
அச்சமுறத் தேவையில்லை
அரு உணவும் கொடுக்கிறானே!

பழமுமதைக் கொடுத்து விட்டு
பாசமாய்ப் பார்க்கிறானே
பாவி நானும் அவனைத்தான்
பழுதாய் எண்ணித் தவறிழைத்தேன்!

மென்று நானும் பழத்தைத் தின்ன
மிரண்டு போனேன் அது வெடிக்க!
நல்லவர்கள் நாட்டில் இல்லை -நான்
நம்பியதில் நியாயமில்லை !

என்னவனும் எனைத்தேடி
எந்நொடியும் வரக் கூடும்
என் துயர நிலை அவர் கண்டால்
துடி துடித்துவிடக் கூடும்!

ஆண்டவனே உன்னிடமே
அழுது நானும் முறையுமிட்டேன்
ஐந்தறிவு யானைகளை
ஆறறிவு மனித மிருகம் கொன்றதுவே
அநீதிக்குத் தீர்வு கொடு
அகிலத்தினின்று எனக்கு விடை கொடு!

நன்றி,
த.ச.பிரதீபா பிரேம்.



ஒத்த புள்ள பெத்து வச்சேன்!

                       ஒத்த புள்ள பெத்து வச்சேன்!



ஒத்த புள்ள பெத்து வச்சேன்
சொத்தெயெல்லாம் தள்ளி வச்சேன் 
செத்த நேரம் உன்ன மறந்தா 
பெத்த மனம் பரிதவிச்சேன்!

காலமும் உருண்டுச்சு -எங்  
காளையும்  வளந்துச்சு 
கண்ணு ரெண்டும் பூரிச்சு போவ 
கண்ணா உன்ன பார்த்திருந்தேன்!

பள்ளிக்கூடம் நீயும் போன 
பால்வித்து,முட்ட வித்து 
பட்டத்து மகாராசா தோத்து போவ
பவுடர் போட்டு அனுப்பி வச்சேன்!


கல்லூரி காலத்துல ஒருநா- உன் 
கால் செருப்பும் அறுந்துடுச்சு 
கால் காசு கையில் இல்ல 
கண்ணால தண்ணி விட்டேன்!

எல்லாபடிப்பும்  முடிச்சுருச்சு 
எல்லைச்சாமி துணையால
எஞ்சிங்கம்  பொழப்புதேட
எம பயமும் போயிருச்சு!

கையில கொஞ்சம் காசு வர 
கருமாரி துணையிருந்தா 
கட்டின எம்புருசனும் நானும் 
கண்ண மூடித்  திரிஞ்சிருந்தோம்!

கல்யாணம் கட்டி வச்சோம் 
கால்கட்டும்  போட்டு  வச்சோம் 
காலமும் உருண்டுச்சு-எங்  
கண்ணும் எம்ம மறந்துருச்சு!

நாள்தோறும் பேசிக்கிடந்தோம் 
நாளும் கொஞ்சம் ஆண்டாச்சு  
நாடு தாண்டி மகன் போவ 
நனவெல்லாம்  கனவாச்சு!

ஆண்டும் பல உருண்டுருச்சு  
அலுத்து மனசும் வெறுத்துருச்சு 
ஆயிரம் காரணம்  இருக்கு  
அம்மா அப்பா வேணாங்க
ஆத்தா மகாமாயீ 
அவன் எங்கிருந்தாலும் 
காப்பத்து!

நன்றி!

த.ச.பிரதீபா பிரேம்!










6/21/20




அனைவருக்கும் தந்தையர் நாள் நல்வாழ்த்துகள்!

என் அப்பா!


உம்   
சித்தமும் பிழைத்துக்
கிடக்கும் என் 
ஒத்தை அழைப்புக்காய் என 
நித்தமும்  உன்னை 
நான் அழைக்கின்றேன் 

அலைபேசியிலே!

பள்ளி சென்று வந்து
நான் சொன்ன கதை போல-நீர்  
சொல்ல துடித்த முழு நாள் 
கதையும்  அந்த 1 மணி துளிக்குள்ளே!
அதுவும்,
சும்மா இருக்க மாட்டிங்களா? என்ற 
அம்மாவின் செல்ல அதட்டலுக்கு 
பயந்தபடியேதான் !
வாய் விட்டு நித்தமும் சிரிக்கிறேன் 
சேய் போன்ற உம்  குறும்புகளைக் கண்டு!

சொன்னதையே சொல்லும் 
சின்னப் பிள்ளை நீங்கள் 
தன்னையே மறந்து எம்மை 
எண்ணும் செல்ல கிள்ளை நீங்கள்!

பாசம் காட்ட மட்டுமே தெரிந்த உமக்கு 
காசு பணம் பார்க்கத்  தெரியாது !
நேசமாய் நான் கேட்டதெல்லாம் 
தேசம் தாண்டியும் கொணர்ந்திடுவீர்!

மீன் குழம்பு என்று சொல்லாதே 
வீணாய் பிள்ளை ஆசைப்படுவாள்-என 
தேனாய் நீ கூறும் சொற்களை 
கேட்ட போதெல்லாம் 
மண்ணுக்கும் விண்ணுக்குமாய் நீர் 
உயர்ந்து  தெரிவீர் 
என் மனச் சுவரை இடித்து கொண்டு  !

விடுடா, அப்பா இனி செய்ய மாட்டேன் என
கோபமாய் நான் திட்டும்போது  
பாவமாய் நீர் சொல்கையிலே 
வாரி அணைத்து கட்டிக்  கொள்ள-என் 
பாவி மனம் துடி துடிக்கும்!

தினம் எழுகிறேன் என் 
படுக்கையை விட்டு
மனம் முழுதும் தலை கோதும் 
உம்  கைகளுக்காய் ஏங்கி கொண்டே

இதயத்தில் அடைப்பு உமக்கு 
கடிந்து கொள்கிறேன்
பொல்லாத ஆண்டவனை 
உம்  இதயம் என்னிடம் உள்ளபோது 
எப்பொழுது களவாடினான்
அக்கள்வன்!
இனியொரு முறை தவறாகாது 
கவனமாய் உனை நான் காப்பேன்
நெகிழாதீர்கள் அப்பா!
சுயநலக்காரி நான்,  
ஏனெனில் என் உயிர் உன்னிடத்தேயல்லவா!  

ஆண்டுகள் பல நீர் வாழ்ந்து 
எம்மை நீர் காக்க வேண்டும் 
உம்  செல்ல அம்முகுட்டிக்காய்!
ஆசையாய் ஆயிரம் முத்தங்களை 
அழைப்பினில் தருகிறேன்!

நன்றி!
த.ச.பிரதீபா பிரேம்