11/17/09

நிகழ்காலம்

அழகான வானம் !
அதனிடையே பவனி வரும் சூரியன்!
வண்ண வண்ணச்  சாமரங்கள் வீசும்
மேகக்  கூட்டங்கள் !
வானத்தின் கரிய வண்ண ஆடையில்
மின்னும்  விண்மீன்ப்  பந்துகள் -இடையே 
சிருங்கரமாய் சிரிக்கும்
வெள்ளை நிலவு!
சுகந்தமாய்   வீசும் தென்றல்-அதில்
சுகமாய் தலையசைக்கும் பசும் மரங்கள்!
ஆர்வமாய் துள்ளி வரும் அருவி
அழகாய் ஆர்ப்பரிக்கும்  அலைகள் !
கள்ளமில்லாப்  பிள்ளையின்
கொள்ளைச்  சிரிப்பு !
கவலையெல்லாம் தாங்கிக்
கொள்ளும் பெற்றோர்  !
கனவையெல்லாம் பகிர  நல்ல நண்பன் !
இத்தனை சுகங்கள்,
இன்றைக்காகக்  கொட்டிக்  கிடக்கின்றன!
கலங்காதே கடந்த காலத்திற்காக 
கடமையைச்  செய்
உன் நிகழ் காலத்திற்காக-பலனடைவாய்
எதிர்காலத்திற்கும் சேர்த்து !

சிறுபிள்ளைகள்!

கண்ணே எங்களுக்கல்லவா கால்கள் வலிக்கிறது -  நீ
 வேகமாய் நடக்கும்போது!
எங்கள் உடல் அல்லவா பதறுகிறது - நீ
எங்கேனும் இடித்து கொண்டு விடுவாயோ என !
நீ காயப்படும்போது மனம் வலிக்கிறது  - நாங்கள்
காயப்பட்ட போது வலித்ததை விட அதிகமாகவே !
எழுந்து நிற்க ஆசை படுகிறாய் நீ - ஆனால்
விழுந்து விடுவாயோ என ஓசையில்லாமல் பதறுகிறோம்  நாங்கள் !
உன்னை விட்டு உண்ணவும் மனம் மறுக்கிறது நாங்கள்
உண்பதை உன்னால் உண்ண முடியாது என்ற உண்மையை
உணர்ந்த பின்னரும் கூட !
என்ன இது சிறு பிள்ளைத்தனம் என்கிறாயா ?
ஆமாம், உன்னை பெற்றுடுத்து விட்டு நாங்கள்
ஆகிவிட்டோம் சிறுபிள்ளைகளாக!

11/16/09

அலைகள்

கடல், மணல் ஏட்டில் எழுதிவிட்டு போகும்
சுயசரிதை!

காரணம்



                காரணம்

மழைப் பொழிந்தது,
கடவுள் உணவருந்திவிட்டு கை கழுவுகிறார்
அம்மா சொன்ன காரணம் இது !
ஏன் என்று எதிர்க் கேள்வி
கேட்க தெரியா
அறியா வயதது !
இன்றும் மழை பொழிகிறது
அறிவுக்கு இன்று தெரியும்
கார் மேகங்களின் கூட்டமே
மழை என !
ஏற்கத்தான் மனமில்லை
அம்மா சொன்ன காரணம்
அப்படியே இருக்கட்டுமே !

வணக்கம்

வணக்கம்!என்ன அழகான தமிழ் சொல் ,ஆனால் எனக்கு தெரிந்து நான் எத்தனை முறை இந்த சொல்லை பயன்படுத்தி இருக்கிறேன் என்றால் நான் அதற்காக இந்த தருணத்தில் வெட்கபடுகிறேன். ஆனால் நான் ரசித்து ,என்னை மறந்து படித்த தமிழை நீண்ட இடைவெளிக்கு பின் இந்த வலைத்தளம்  மூலமாக என்னால் தீட்ட முடிகிறதென்றால் இந்த தருணத்தில் என்னை விட மகிழ்பவர்கள் யாரும் இருக்க முடியாது , என்ன தீட்டுதல் என்கிறீர்களா ஆமாம் என்னை பொறுத்த வரை தமிழ் ஒரு ஓவியம் ,எனது உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு கவிதையாக ,கதையாக வடிவம் கொடுக்கும் அழகான ஓவியம். உண்மை, என்னால்  வேறு எந்த மொழியிலும் சுதந்திரமாக மனதுள் தோன்றும் வார்த்தைகளை கோர்க்க முடிவதில்லை,இதனில் எழுதும் போதுதான் தாயின் மடியில் படுத்து கொண்டு ,இனிய தென்றலை சுவாசித்து கொண்டே நிலவினை ரசிக்கும் சுகம் கிடைக்கிறது .இனி என் நினைவலைகளின் சாரலை பதிவு செய்கிறேன் . இந்த பக்கங்கள் சிறு கதைகளையும் கட்டுரைகளையும்,கவிதைகளையும் தங்கி இருப்பதாக இருக்கும். சில நிமிடங்கள் எனக்காக உங்கள் கடிகாரத்தின் முட்களை நகர அனுமதித்ததற்காக எனது நன்றிகள்.