7/12/20


தொல்காப்பியம் கூறும் இல்லறக் காதலும் இக்கால கவிதையும்!


நமக்கு முதல், முதலாக கிடைத்த  2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது என சொல்லப்படும்  தொல்காப்பியம்  கூறும்  காதலைப் பாருங்கள்,

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு,
உருவு, நிறுத்த காம வாயில்
நிறையே, அருளே, உணர்வொடு, திரு -என 
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. 

இதன் பொருள் என்னவெனில் ஒரு தலைவனும் தலைவியும் இல்லறத்தில் இணைந்து வாழ
, ஒத்த பிறப்பும்,ஒத்த ஒழுக்கமும்,ஒத்த ஆண்மையும் ,ஒத்த வயதும்,ஒத்த உருவும்,ஒத்த அன்பும்,ஒத்த நிறையும், ஒத்த அருளும், ஒத்த அருளும், ஒத்த செல்வமும் வேண்டும்.

நமது இல்லறக்  காதலை பற்றி இங்கே பார்க்கலாம்,மனைவி பிறந்தகத்திற்கு போன பின் மனைவி கேட்கிறாராம் 

இன்னும் கொஞ்சம் தூங்கட்டுமே
என ஓடி வந்து உங்களை எழுப்பும் 
கடிகையயை கடிந்து  கொள்ள அவளில்லை!

கையில் காபியுடன் நிற்பதே தெரியாமல் 
கணினி  முன் முகத்தை புதைக்கும் போதும் 
செல்லமாய் அதட்டி 
கையில் காபியை கொடுக்க  அவளில்லை!

வேலை முடிந்து மாலை திரும்புகையில் 
கதைகளை கொட்டிக் கொண்டே 
கதவை திறக்க அவளில்லை!

தோசை ஆறிடும் ஆறுது  என
நொடிக்கொருமுறை அனத்த அவளில்லை!
இப்படி எல்லாம் நீங்கள் எண்ணினீர்களா?

இது கவிதை மட்டும் இல்லைங்க மனைவி தன்  
பிரிவாற்றாமையை கணவனிடம் கூறும்
காதலின் வெளிப்பாடு!


7/5/20


சிறப்பான பல பணிகளை முன்னெடுத்து இந்த பேரிடர் காலத்திலும் தமிழாலும்,தமிழர்களாலும் தரணி முழுதும் தமிழைக் கொண்டு சேர்த்த அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஜெய் அவர்களுக்கும்,அவரோடு இணைந்து அயராது பாடுபட்ட தன்னார்வலர்களுக்கும் வாழ்த்துகளும், நன்றிகளும் இந்த தருணத்தில்,



காணொலியைக் 
காணும் பொழுதே
கண்களுக்கு அணை 
போட இயலவில்லை!

காற்றிலே கலக்கும் செய்திகளாய் 
காலம் தோறும் பேசி வந்தவை 
கனவாய்  காலம், காலமாய் 
கண்டு வந்தவை- அத்தனையும் 
கண் முன்னே இன்று நினைவுகளாய்!

ஆங்கிலத்தில் வரும் 
தமிழ்ச் சங்கத்தின் 
குறுஞ்செய்திகளைக் கண்டு 
ஆயிரம் முறை விம்மியதுண்டு!
அடி  மனதோடு 
புலம்பியதுண்டு!

தமிழை அமுதாய் உண்ணலாமா?
இப்படி சில குரல்கள் 
என் காதினுள் ஒலித்தன 
கனவோ, இல்லை கானலோ 
என என்னையும்  கொஞ்சம் 
கிள்ளி பார்த்துக் கொண்டேன்!
இன்று
தமிழ் அமுதாய் ஓடுவதைக் கண்டு 
தரணியே  வியக்கிறது!

பொய்யாமொழிப்  புலவன் 
பொழிந்து விட்டு போய் விட்டான்,
காலையும்,மாலையும் கொஞ்சம் 
அள்ளிப்பருகுவோமா?
இப்படியும் ஒரு கனவைக்  கண்டார்
நம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்,
காலையும் ,மாலையுமா 
என மலைத்து நிற்கையில் 
அவையும் நம் பிள்ளைகளின் 
கிள்ளை மொழியால் காட்சிகளாய்  
வடிக்கப்பட்டு 
காணா தேசம் 
எங்கும் கண்ணெடுக்காமல்- இன்று 
நம்மை காண்கின்றது!

கதை சொல்ல போலாம் வாங்க 
என கால ஓட்டத்தின் திசையில் 
செல்ல என் கை பிடித்து இழுத்தது 
ஒரு கை !
இன்று கைகள் பல இணைந்து 
கதைகளை காற்றலையில்!

அள்ளிக் கொடுத்த கை  அல்லவா 
அன்புத் தமிழரின் கை 
சொல்லி சொல்லி  பெருமை 
கொள்ளும் வகையில்,
எளியவர்களுக்கு  
சேவைகள்  பல புரிந்து 
சிவந்து போயின கரங்களும்!

முடியவில்லை 
தமிழன்னையோடு 
நாம் கடந்து வந்த பாதை 
நெடுந்தூரம் செல்வோம் 
அவளுடன் கைகோர்த்தபடியே!

நன்றி,
த.ச.பிரதீபா பிரேம்  




நன்றி அட்லாண்டாத்  தமிழ்ச்  சங்கம் பவா என்னும் மிக அருமையான மனிதரை தமிழே! அமுதே! என்னும் நிகழ்வில் அழைத்து வந்ததற்கு!

Image result for pava selladurai

அவரின் பேச்சினால் 
உணர்வுகள் மேலெழும்பி
வார்தைகள் வந்து
விழுந்தது  என்னுள்!

அவருக்காய்  என் கவிதை
இல்லை இல்லை 
அனைவரின் உணர்வும் இதோ !

என்ன மனிதரய்யா  நீர்!
ஆம்!
உம்மை வையத்தான் போகின்றேன்!
உங்கள் கதைகள்
செவி வழியே சென்று எம்
ஊனை உருக்கி
உயிரைப் பிழிவதால் !

என்ன மனிதரய்யா  நீர்!
ஒருமுறையேனும்
அழாமல்  கதைக் கேட்க முடிகிறதா?
எம் உடல் அவயங்களும்
சொல் பேச்சு கேட்பதில்லை
நீர் கதைக் கூறும் போது !
மூளை இடும் கட்டளைக்கு என்
விழிகள் படிந்தால் தானே
அது அழுவதை நிறுத்துவதற்கு!

என்ன மனிதரய்யா  நீர்!
என் தாய்க்  கதைக
 கூறும்போது
அவள் மடி புதைத்து
நான் விழி விரிப்பேன்!
தீபாவளிக்கு நான்
ஏங்கியதை விட
ஆண்டு தவறாமல்
என் தந்தை கூறும் அதே
 நரகாசுரன் கதைக்காக 
காத்திருந்த நாட்கள் அதிகம் !
பழைய சோற்றை பிசையும் போதே
என் ஆத்தா சொன்ன பக்கத்து
வீடு கதைகள் !
அத்தனை பேரையும் அருகில்
 வைத்து கொள்ள இயலவில்லை!
ஆனால் !
உம்  கதைகளை எம்  உள்ளத்தில்
 வைத்துக் கொள்கின்றேன் இன்று !

என்ன மனிதரய்யா  நீர்!
மனிதமும் மனிதநேயத்தையும்
பிசைந்து செய்ததா
இயற்கை உம்மை !

உம்மை நீர் நன்றாய்
பார்த்துக் கொள்ளுங்கள்
பல உயிர்கள் உம்  கதையினைக்
 கேட்டு இன்று பல நினைவுகளோடு
 உயிர் வாழ்வதனால்!
என்ன மனிதரய்யா  நீர்!

நன்றி,
த.ச.பிரதீபா பிரேம் !


7/3/20



குழந்தைகளை வன் புணர்வு செய்வதை நிறுத்துங்கள் அரக்கர்களே! சட்டத்தின் கை இறுகட்டும்  சாத்தான்களிடமிருந்து சின்னஞ்சிறு பிள்ளைகளைக் காக்க!



குருதி கொதிக்குதடி கண்ணே!

குருதி கொதிக்குதடி கண்ணே!
உன்னைக் குதறிய
பேய்களைக் கொல்ல 
குருதி கொதிக்குதடி கண்ணே! 
என் எழுதுகோலை
எடுத்தேன்,
என் பேனா மையிற்குப்
பதிலாய் அது 
குருதியைக் கொப்பளிக்கிறது!

கண்டம் கடந்துக் கேட்கும்
குழந்தைகளின் கதறல் 
உன் செவியைச் 
செவிடாக்கவில்லையா
என என் காதைத் துளைக்கும்
கேள்விக் கணைகள்!

உனக்காய் நான்
என் செய்ய போகிறேன் என
என் மனதில் எழும்பும்
வேள்விக் கணைகள்!
அய்யகோ!!
அப்பனே பிள்ளையை
அல்லல்படுத்தினான் 
செய்தியும் இப்படி!!
மனக் கண்முன்னே
மானாய் ஓடிய பிள்ளை 
மாண்டு போன காட்சி கண்டேன் 
கண்கள் கண்ணீரை
தாரை தாரையாய்ப் பொழிகிறது! என் 
இருதயம் வெடித்துச் சிதற 
அனுமதி கேட்கிறது,
காமுகனைக் கொல்ல!

துடிக்கும் கைகளை 
அடக்குகின்றேன்!
அலைகின்றேன்,
உறங்க மறுத்து 
நடை பிணமாய்! 
அநீதி அடியோடு ஒழிய
ஆவண செய்
அரசாங்கம் சட்டம் இயற்ற 
என உள்ளம்
இடிக்கிறது!!
ஓ! எம் மாந்தர் கூட்டமே 
ஓலமிடும் மாதரின் அழுகுரல் 
கேட்கிறதா?
பிறந்த பிள்ளை முதல் 
நாளை இறக்கும்
கிழவி வரை ...அய்யகோ 
எங்கேயடா உள்ளீர்கள் 
நீங்களெல்லாம்?
என் சொல்ல!
ஐந்தறிவு மிருகம் கூட
அன்பிற்கடங்குமடா,
அற்பப் பித்தர்களே!
மாண்ட நம் மாதர் குலம் என் 
முன் மண்டியிட்டு
அழக் கண்டேன்!!
எரிமலையாய் 
எழுவோம் வாரீர்!
எம் குல மாதரை 
காப்போம் வாரீர்!
எதற்கும் அஞ்சோம்!
எவர்க்கும் அஞ்சோம்!
அலைகடலெனப் புறப்படுவோம்!
அநீதியை நாம் தகர்த்திடுவோம்!
எதைச் செய்தால் 
காமுகன் கலங்குவான்?
அதை செய்வோம் வாரீர்!
பிறக்கும் இப்புத்தாண்டில்
மாதர் எவரும் இப்படி 
இறப்பதற்கில்லை 
என உறுதி பூணுவோம் வாரீர்!!
மனித இனமே 
மலை போல் திரண்டு வா!
மனிதத்தைக் காப்போம் வா!
மாக்களைக் கொல்வோம் வா!
குருதி கொதிக்குதடி கண்ணே!
உன்னைக் குதறிய
பேய்களைக் கொல்ல 
குருதி கொதிக்குதடி கண்ணே!

த.ச.பிரதீபா பிரேம்.