7/5/20


சிறப்பான பல பணிகளை முன்னெடுத்து இந்த பேரிடர் காலத்திலும் தமிழாலும்,தமிழர்களாலும் தரணி முழுதும் தமிழைக் கொண்டு சேர்த்த அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஜெய் அவர்களுக்கும்,அவரோடு இணைந்து அயராது பாடுபட்ட தன்னார்வலர்களுக்கும் வாழ்த்துகளும், நன்றிகளும் இந்த தருணத்தில்,



காணொலியைக் 
காணும் பொழுதே
கண்களுக்கு அணை 
போட இயலவில்லை!

காற்றிலே கலக்கும் செய்திகளாய் 
காலம் தோறும் பேசி வந்தவை 
கனவாய்  காலம், காலமாய் 
கண்டு வந்தவை- அத்தனையும் 
கண் முன்னே இன்று நினைவுகளாய்!

ஆங்கிலத்தில் வரும் 
தமிழ்ச் சங்கத்தின் 
குறுஞ்செய்திகளைக் கண்டு 
ஆயிரம் முறை விம்மியதுண்டு!
அடி  மனதோடு 
புலம்பியதுண்டு!

தமிழை அமுதாய் உண்ணலாமா?
இப்படி சில குரல்கள் 
என் காதினுள் ஒலித்தன 
கனவோ, இல்லை கானலோ 
என என்னையும்  கொஞ்சம் 
கிள்ளி பார்த்துக் கொண்டேன்!
இன்று
தமிழ் அமுதாய் ஓடுவதைக் கண்டு 
தரணியே  வியக்கிறது!

பொய்யாமொழிப்  புலவன் 
பொழிந்து விட்டு போய் விட்டான்,
காலையும்,மாலையும் கொஞ்சம் 
அள்ளிப்பருகுவோமா?
இப்படியும் ஒரு கனவைக்  கண்டார்
நம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்,
காலையும் ,மாலையுமா 
என மலைத்து நிற்கையில் 
அவையும் நம் பிள்ளைகளின் 
கிள்ளை மொழியால் காட்சிகளாய்  
வடிக்கப்பட்டு 
காணா தேசம் 
எங்கும் கண்ணெடுக்காமல்- இன்று 
நம்மை காண்கின்றது!

கதை சொல்ல போலாம் வாங்க 
என கால ஓட்டத்தின் திசையில் 
செல்ல என் கை பிடித்து இழுத்தது 
ஒரு கை !
இன்று கைகள் பல இணைந்து 
கதைகளை காற்றலையில்!

அள்ளிக் கொடுத்த கை  அல்லவா 
அன்புத் தமிழரின் கை 
சொல்லி சொல்லி  பெருமை 
கொள்ளும் வகையில்,
எளியவர்களுக்கு  
சேவைகள்  பல புரிந்து 
சிவந்து போயின கரங்களும்!

முடியவில்லை 
தமிழன்னையோடு 
நாம் கடந்து வந்த பாதை 
நெடுந்தூரம் செல்வோம் 
அவளுடன் கைகோர்த்தபடியே!

நன்றி,
த.ச.பிரதீபா பிரேம்  



No comments:

Post a Comment