நன்றி அட்லாண்டாத் தமிழ்ச்
சங்கம் பவா என்னும் மிக அருமையான மனிதரை
தமிழே! அமுதே! என்னும் நிகழ்வில் அழைத்து வந்ததற்கு!
அவரின் பேச்சினால்
உணர்வுகள் மேலெழும்பி
வார்தைகள் வந்து
விழுந்தது என்னுள்!
அவருக்காய் என் கவிதை
இல்லை இல்லை
அனைவரின் உணர்வும் இதோ !
என்ன மனிதரய்யா நீர்!
ஆம்!
உம்மை வையத்தான் போகின்றேன்!
உங்கள் கதைகள்
செவி வழியே சென்று எம்
ஊனை உருக்கி
உயிரைப் பிழிவதால் !
என்ன மனிதரய்யா நீர்!
ஒருமுறையேனும்
அழாமல் கதைக்
கேட்க முடிகிறதா?
எம் உடல் அவயங்களும்
சொல் பேச்சு கேட்பதில்லை
நீர் கதைக் கூறும் போது !
மூளை இடும் கட்டளைக்கு என்
விழிகள் படிந்தால் தானே
அது அழுவதை நிறுத்துவதற்கு!
என்ன மனிதரய்யா நீர்!
என் தாய்க் கதைக
கூறும்போது
அவள் மடி புதைத்து
நான் விழி விரிப்பேன்!
தீபாவளிக்கு நான்
ஏங்கியதை விட
ஆண்டு தவறாமல்
என் தந்தை கூறும் அதே
நரகாசுரன் கதைக்காக
காத்திருந்த நாட்கள் அதிகம் !
பழைய சோற்றை பிசையும் போதே
என் ஆத்தா சொன்ன பக்கத்து
வீடு கதைகள் !
அத்தனை பேரையும் அருகில்
வைத்து கொள்ள இயலவில்லை!
ஆனால் !
உம் கதைகளை
எம் உள்ளத்தில்
வைத்துக் கொள்கின்றேன் இன்று !
என்ன மனிதரய்யா நீர்!
மனிதமும் மனிதநேயத்தையும்
பிசைந்து செய்ததா
இயற்கை உம்மை !
உம்மை நீர் நன்றாய்
பார்த்துக் கொள்ளுங்கள்
பல உயிர்கள் உம் கதையினைக்
கேட்டு இன்று பல நினைவுகளோடு
உயிர் வாழ்வதனால்!
என்ன மனிதரய்யா நீர்!
நன்றி,
த.ச.பிரதீபா பிரேம் !
No comments:
Post a Comment