12/19/11

மார்கழி கோலங்கள்

                                    மார்கழிக் கோலங்கள்!

கதிரவன் கண்ணைத்
திறந்திராக்  காலை,
கண்ணைக் கசக்கிக் கொண்டு வெளியே வந்தேன்
மங்கலான வெளிச்சத்தில்
மங்களகரமாய் கோலமிட்டாள் அக்கா!
ஆசையாய் அருகில் சென்றமர்ந்தேன் வண்ணமிட
அதிர்ச்சியாய்  என்னைப் பார்த்தாள்!
அழகான கோலமடி,
ஆபத்தாய் நீயும் வந்தாய் ,
வைகறையில் தூங்கக் கூடாதா ?
வாசல் வேலை நான் பார்த்துக் கொள்வேனே !
கெஞ்சினால் அக்கா,
கொஞ்சமும் கேட்கவில்லை நான்.
கண்ணே என்றாள் கலக்கமாய்
கொல்லையில் உள்ள மலரைக் கொண்டு வா,
வண்ணமிட்டக் கோலத்தில்
வகையாய் வைக்கலாம் என்றாள்  -உன்
எண்ணமெல்லாம் நான் அறிவேன்
இருக்கட்டும் போகிறேன் என்றேன்!
குதுகலமாய் கொல்லைக்கு ஓடினேன்-அங்கே
குளித்து நின்ற புதுமலர்கள்-என்னைக் கண்டு
சிரித்து நின்றக் காட்சி கண்டேன் !
மஞ்சள் பட்டைச் சூடி நின்ற
மங்கையவள் போலே என்னை
மயங்க வைத்து
நகைக்கக்  கண்டேன்-என்
மனமும் அதில் நிலைக்க நின்றேன்!
என் நினைவெல்லாம் அள்ளிக்கொண்ட
மஞ்சள் நிற நாயகியில் என்
நெஞ்சம் நிறைத்த ஒரு மலரை
நேர்த்தியாய் பறித்தெடுத்தேன் ,
வண்ணக் கோலத்தின் வனப்பை
இன்னும் மெருகேற்ற
மஞ்சள் நாயகி மலராய் அமர்ந்தாள்,
கதிரவனும் வந்தான் -அதன்
அழகில் கண் மயங்கி நின்றான்!
கண்கள் கூச விழித்துப்  பார்த்தேன்
அதே மார்கழிக் கதிரவன் தான்
ஆனால் அட்லாண்டாவில்!












5/20/11

லீவு  விட்டாச்சு

வைகறை விடியல்
போர்வையை   உதற மனம் வாராத பிஞ்சு
தூங்கிக்கொண்டே பல்தேய்த்து,
குளித்து முடித்தும் கலையாத தூக்கம்!
அரை கண்களே திறந்த நிலையில்
பாதியாய் வாயைத் திறந்து உள்ளே தள்ளும் உணவு  
கையைக்  காட்டு,  காலை நீட்டு
என உடைகள் மாட்டிவிட்டு
முதுகிலே புத்தக பையை மாட்டுகையில்
 உனக்கு கனப்பதை விட
என் மனம் அதிகமாய் கனத்துக் கிடக்கிறது கண்ணே !
பேருந்தில் ஏற்றி விட்டு
எங்கு அமருவாய்?,என்ன பேசுவாய்?
என  மனம் நிறைய நீயே கிடக்க
அடுத்த மணி மண்டைக்குள் அடித்தது
என்ன சமைத்தால் அதிகம் சாப்பிடுவாய்?
எல்லாம் முடித்து   நிமிர்ந்து 
கடிகாரத்தைக்  கடிந்து  கொண்டு
அவசரமாய் ஆயத்தமாகி
மறுபடியும் பள்ளி பேருந்துக்காக ஓடினேன் !
முதல் நாள் முகம் பார்த்த அதே ஏக்கத்துடனே
உனக்காக கண்கள் அலைந்து கிடக்க
அம்மா என நீ அழைக்கும் போதெல்லாம்
அடி வயிற்றில் எதோ செய்வது வழக்கம் தான்
ஆனாலும் இன்று சத்தம் பலமாய்
நெருங்கி  வருவதற்குள் கத்தினாய்
 அம்மா  லீவு விட்டாச்சு
அனைத்து உச்சி முகர்ந்து நானும்
கத்தினேன் ஹய்யா லீவு விட்டாச்சு  !







சிறப்புகள் வாய்ந்த சிரிக்கும் புத்தர்!

சிறப்புகள்   வாய்ந்த சிரிக்கும் புத்தர்!

                   மே 18 ,1974 ஆம் ஆண்டு அகிலத்தையே நமது இந்தியா ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய  நாள்  ,ஆம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக அங்கம் வகித்த வல்லரசுகள்  மட்டுமே செயல்படுத்தக் கூடிய அணுக்கரு வெடிப்பு சோதனையை நிகழ்த்தி உலகத்தையே நமது பக்கம் திருப்பியது இந்தியா .ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் என்ற இடத்தில் கனடாவின் உதவியுடன் இந்த சோதனையை இந்தியா நிகழ்த்தி அதற்கு "சிரிக்கும் புத்தர்" என பெயரிட்டது.
              இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி 1972 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 அன்று பாபா அணு ஆராய்ச்சி மையத்தில்  பணி புரியும் இந்திய அணு சக்தி வல்லுனர்களிடம் அவர்கள் வடிவமைத்த ஒரு அணுக்கரு வெடிப்பு சோதனைக் கருவியைத் தயாரித்து பரிசோதனை செய்ய அனுமதி வழங்கினார். தனது  அணுமின் திட்டத்திற்கு ஆதரவளித்த அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளின் நிபந்தனையை மீறி இந்தியா இதனை நிகழ்த்தினாலும் இந்த சோதனையை "அமைதியான அணுக்கரு வெடிப்பு "எனக் கூறி அவர்களது நிபந்தனையை மீறவில்லை என விளக்கம் அளித்தது .
                 ராஜா ராமண்ணாவின் தலைமயிலான மொத்தமே 75 பேரைக் கொண்ட குழு இதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டது.இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமும் ஒருவர் ஆவார்.டாக்டர் ஹோமி சேத்னாவின் மேற்பார்வையில் இத்திட்டம் 1967 ஆம் ஆண்டு முதல் 1974 வரை இரகசியமாகவும், மிகவும் பாதுகாப்பாகவும் செயல்பட்டது.
                  பாபா அணுமின் நிலையத்தில் தயாரித்த இந்த அணுகுண்டிற்கு சைரஸ் அணுஉலையில் தயாரிக்கப்பட்ட 6 கிலோ புளுட்டோனியம்  பயன்படுத்தப்பட்டது .1400 கிலோ எடையும், சுமார் 1.25 மீட்டர் விட்ட அளவும் கொண்ட இக்கருவி, அறுகோண வடிவம் கொண்டதாகும்,இதனை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தில் வைத்து வெற்றிகரமாக  சோதனை செய்தனர்.புத்தரின்  பிறந்தநாளான புத்த பூர்ணிமாவில் செய்யப்பட்ட இந்த சோதனையால் உலக நாடுகள் இந்தியாவிடம்  சிறிது அச்சம் கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மை,மேலும் இதனை எதிர்த்து கனடா அரசு இந்தியாவுடனான உறவை முறித்துக் கொண்டது.
                       இத்தகைய சிறந்த  பணிக்காக இந்திய அரசு ஹோமி சேத்னா, ராஜா ராமண்ணா, டாக்டர் நாக சௌதுரி ஆகியோருக்கு பத்மா விபூசன் விருதும் , இதர ஐந்து உறுப்பினர்களுக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கி கௌரவித்தது.இந்த மே 18 ஆம் நாள் ஒவ்வொரு  இந்தியரின் வாழ்விலும் மறக்கமுடியாத நாள் ஆகும்.(நன்றி விக்கி பீடியா )
              


 

5/19/11

aascaarin aarambam

ஆஸ்காரின்  ஆரம்பம்

               ஆஸ்கார் விருது என அழைக்கப்படும் அகாடமி விருது அமெரிக்காவில் திரைப்படத் துறையினருக்கு  வழங்கப்பட்டு வரும் மிகச் சிறந்த விருதாகும்.
மே 16 ஆம் நாள் ,1929 ஆம் ஆண்டு முதல் ஆஸ்கார் விருது ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 பார்வையாளர்களின்  முன்னிலையில் வழங்கப்பட்டது இதில்விருந்தினர்களுக்கான கட்டணச் சீட்டு $5  ஆகும் .1927-1928 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம்,நடிகர்,நடிகைகள் மற்றும் திரைப்படத்துறையில் பல பிரிவுகளில் சிறந்து பணியாற்றிய பலருக்குமாய்  பதினைந்து விருதுகள் அன்று வழங்கப்பட்டது .
                     








5/5/11

அன்னைத் தெரசாவின் அகலாத நினைவுகள்


                                          அன்னை  தெரசாவின்  அகலாத  நினைவுகள்

                   
    " அன்னையும் பிதாவும் முன்னறி  தெய்வம் " என்றார் ஒளவையார் .அன்னையர் தினம் என்றாலே நமது அன்னைக்கு
 அடுத்த படியாக நம் நினைவை விட்டு அகலாதவர் அன்னை தெரசா,அவரைப் பற்றிய நினைவுகளோடு சிறிது நேரம் சிறகடிக்கலாம்
வாருங்கள்!
                       
                     நாம் அனைவராலும்  வாஞ்சையோடு அன்னை என்று அழைக்கப்படும் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ
 ஆகஸ்டு 26, 1910 ஆம் ஆண்டு அல்பேனியா  நாட்டில் பிறந்தார்.இவர் தனது பதினெட்டாம் வயதில் லொரெட்டோ
சகோதரிகளின் சபையில் மத பிரசாகராக இணைந்தார் .1929 ஆம் வருடம் இந்தியாவிலுள்ள டார்ஜிலிங்கில் கன்னியர்
 மடப்  பயிற்சியை ஆரம்பித்தார் .இவர் கொல்கத்தாவில்  இருந்த பொழுது  பள்ளிகளுக்குப்  பாடம் சொல்லித்தருவதை
 விரும்பினாலும் அவர் மனது முழுவதும் வறுமையில் வாடியவர்களிடமும் , ஆதரவற்றோரிடமும் தான் சென்றது.
                      1948 ஆம் ஆண்டு வெள்ளை நிறப்  பருத்தி புடவையை அணிந்துக் கொண்டு குடிசைகளிலுள்ள 
ஏழைகளுக்கு உதவ ஆரம்பித்தார்.மோதிஜில்லில் கல்விக்கூடம் தோற்றுவித்ததின் மூலமாக ஆரம்பித்த அவருடைய சமுதாயப்
 பணி பல இன்னல்களையும் தாண்டி, வறுமையில் வாடியோருக்கு உதவுவதாக மாறியது.1950  இல் தனது முதல் சபையை,
வறுமையில் வாடி தனது அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்காகவும்,நோயுற்றவர்களுக்காகவும்  ,
அனாதைகளுக்காகவும் தொடங்கினார்.
               
                       மேலும் 1952 ஆம் ஆண்டு இந்திய அதிகாரிகளின் துணையைக் கொண்டு கொல்கத்தாவில்  பழைய
 இந்துக் கோவிலை காளிகாட் இல்லமாக மாற்றினார் ,இது இறப்பின் விளிம்பிலிருப்போருக்கு உதவுவதற்காகவும் ,இறக்க போகும்
 மனிதருக்கு அன்பையும்,நல்ல மருத்துவத்தையும் தருவதை நோக்கமாகவும்  கொண்டிருந்தது.விரைவில் அன்னை தெரசா
 தொழுநோயால் அவதிப்படுவோருக்கு உதவ சாந்தி  நகரைத் தோற்றுவித்தார்.மிசினரிஸ்  ஆப் சாரிட்டி என்ற அமைப்பின்
 மூலம் தொழுநோயால் துன்பத்துக்குள்ளானவர்களின் காயத்தை கட்ட துணியையும் , மருந்தையும்  கொல்கத்தா  முழுவதும்
 வழங்கியது.
                        1955 இல் அவர் நிர்மலா சிசு பவனையும், தி சில்ட்ரென்'ஸ் ஹோம் ஆப் தி இமாக்குலேட் ஹார்ட்டையும்
 அனாதைக் குழந்தைகளுக்காகவும், வீடற்ற இளைஞர்களுக்காகவும் தொடங்கினார்.1960 களில் இந்த அமைப்பு பல
நன்கொடையாளர்களின் உதவியால் இந்தியா  முழுவதும் தனது சேவையைத் தொடங்கியது .1970 களில்  பல உலக நாடுகளிலும்
 இவர் தனது சேவையைத் தொடர்ந்தார்.
                            இத்தனை சமூக சேவைகளையும் அவரால்  மிக எளிதாக செயல்படுத்த முடியவில்லை ,எத்தனையோ
விமர்சனங்களுக்கு மத்தியிலே போராடித்தான் வெற்றி பெற்றார் . டேவிட் ஸ்காட் அன்னை தெரசா வறுமையை அடியோடு ஒழிக்க
 முனையாமல், மக்களை உயிர்வாழ வைப்பதோடு தன் சேவையை நிறுத்திக் கொண்டார் எனக் கூறுகிறார்,இப்படி
கூறுபவர்களால் இத்தகைய சேவையை செய்ய முடியுமா? என்பதுதான் நம் மனதில் எழும் கேள்வி ,
 "சொல்வது எளிது, செய்வது கடினம்" என்பதற்கு எடுத்துக்காட்டாக இத்தகைய விமர்சனங்கள்  உள்ளது என்பதில்
 மாற்றுக் கருத்து  இருக்க முடியாது.இத்தகைய விமர்சனங்களின் பொழுதெல்லாம் "எவர் எதைக் கூறினாலும் நீங்கள்
அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு உங்கள் வேலையை செய்ய வேண்டும் " என்றுக்
கூறியவர் அன்னை  தெரசா.
                            இவர் இந்திய அரசின் உயரிய விருதான ,பத்ம ஸ்ரீ ,ஜவகர்லால் நேரு விருது,பாரத ரத்னா
உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றார் .1979 இல் அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றார்.இதைத் தவிர பல்வேறு
 நாடுகளும் அவருக்கு உயர்ந்த பல விருதுகளை அவரது சேவையைப் பாராட்டி கொடுத்தனர் .
                                                   
                 ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
                  செத்தாருள்   வைக்கப் படும் .
                                                  -திருவள்ளுவர்

 ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாக தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவனே உயிர் வாழ்பவனாகக்
 கருதப்படுவான்,மாறானவன் இறந்தவனாவான்  .இந்தக் குறளுக்கேற்ப வாழ்ந்த  உயர்ந்த ஆன்மா 1997 ,செப்டம்பர் 5 ஆம் ஆண்டு
 உடல் நலக் குறைவால் உயிர் நீத்தார் .                        
                     
                       அன்னைத் தெரசா  ஒரு பெரிய சமூக சேவைக்கான ஆலமரமாக தோன்றி ,விருட்சமாகி தன்
கிளைகளைப் பரப்பி விட்டுள்ளார் ,இதற்கு கீழ் நின்று இன்றும் பயனடையும் மக்கள் பல கோடி .இன்று இந்த அன்னையர்
தினத்தில்  உலகத்தின் ஆதரவற்றோர்களுக்கு எல்லாம்  அன்னையாகத் திகழ்ந்த,மனதளவில் இன்றும் திகழ்கின்ற 
அன்னைத் தெரசாவைப் பற்றி பகிர்ந்துக் கொண்டோம் , நாமும் நம்மால் இயன்றவரை ஆதரவற்றோருக்கு
உறுதுணையாய் இருப்போம் .நன்றி .


 

4/6/11

அடிமை இருளை அகற்ற வந்த ஆதவன் !

                  இன்றளவில் நம் இந்திய  நாட்டில் சாதிப்  பிரச்சனை 
 என்ற தீய சக்தி   நாட்டின்  வளர்ச்சிக்கு மிகப்  பெரிய பங்கமாக உள்ளது .
இந்த சாதி வெறியைக்  கொண்டே  அரசியல் தலைவர்கள் நம்மை முட்டாளாக்கிப்  பார்க்கும் அவலமும் தொடர்ந்து நடந்தேறிக்  
கொண்டே தான்  உள்ளது. இதற்கு எல்லாம்  முற்றுப்  புள்ளி வைக்கவும், தாழ்த்தப்பட்டோரை   அடிமைத் தளையிலிருந்து 
காக்கவும் பாடுபட்ட முக்கிய தலைவர் பாபா சாஹேப் என மக்களால் 
அன்புடன்  அழைக்கப்படும் டாக்டர் ,பீ. ஆர் .அம்பேத்கார் அவர்கள்.
                                                       பீம் ராவ் அம்பேத்கார் அவர்கள் 1891
ஆம் வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி   மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி ,பீமா பாய் அவர்களின் மைந்தனாகப்  பிறந்தார்.அவர் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்ததால் தனது இளம் பருவத்திலிருந்தே பல்வேறு இன்னல்களை சந்தித்தார்.அவரின் துயரமும், துன்பங்களும்  அவரை ஒடுக்கவில்லை மாறாக தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை  உயர்த்த வேண்டும் என்ற உத்வேகத்தையே கொடுத்தது.
                      
                  அம்பேத்கார் இளம் பருவம் முதலே சிறந்த அறிவாளராக இருந்தார், அவருடைய திறமையையும் ,கல்வித்திறனையும் கண்ட அந்நாளைய பரோடா மன்னர் அவரது கல்விச்  செலவுகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு அவர் கொலம்பியா பல்கலையில் கல்வி கற்க உதவி செய்தார். அங்கு அவர்  “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கான  முதுகலைப் பட்டத்தை 1915  இல் பெற்றார். மேலும் பொருளாதார முதுகலைப்   பட்டத்திற்காக   "கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகமும் நிதியும்" என்ற கட்டுரையை சமர்ப்பித்தார் . பின், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.
                             
               இவ்வாறாக  பொருளாதாரத்தில் மேதையாக  திகழ்ந்த  அம்பேத்கார்
தாழ்த்தபட்ட மக்களின் நலனையும்  மறந்து விடவில்லை .அவர்களுக்காக பல்வேறு கருத்துகளை முன்னிலைப்  படுத்தினார் அவற்றில் ஒன்றுதான்
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான " இரட்டை வாக்குரிமை " .ஆனால் இதனை காந்திஜி அவர்கள் எதிர்த்ததால் இருவருக்குமிடையே 1931  இல்  " பூனா" ஒப்பந்தம் கையெழுத்தானது  இதன்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டது.
                            
           இந்திய சுதந்திரத்திற்காகவும் ,ஒடுக்கப்பட்டோருக்காகவும்  குரல் கொடுத்த அம்பேத்கார் நாட்டின் விடுதலைக்குப்  பின் முதல் சட்ட அமைச்சராக பதவியேற்றார்.ஆனால் 1951  ஆம் ஆண்டு வெளிவந்த "இந்து சட்டத் தொகுப்பு மசோதா"வை எதிர்த்துத்  தன் பதவியை  கைவிட்டார்.
ஐந்து அறிவு ஜீவிகளை விட மோசமாக நாங்கள் நடத்தப்பட்டால்  
எந்த தாழ்த்தப்பட்ட இந்தியன்  இந்த நாட்டை தாய் நாடாக ஏற்பான்  என மகாத்மா காந்தியிடம் கூறியவர் நம் அம்பேத்கார்.
              
            இத்தகைய  தியாகச்  செம்மல்,தனக்காக இல்லாமல்,ஒடுக்கப்பட்ட 
மக்களுக்காக போராடிய மாவீரர் ,அடிமை இருளை அகற்ற வந்த
ஆதவன் 1956  ஆம் ஆண்டு டிசம்பர் 6  ஆம்  நாளில் தம் இன்னுயிரை
விட்டு இந்த மண்ணிலிருந்து  மறைந்தார்.அவர் தம்  உடலை விட்டுப்
பிரிந்தாலும் மக்களின் எண்ண ஓட்டங்களில் இன்றளவும் வாழ்ந்துக்-
கொண்டுதான் உள்ளார் என்பதில் எள்ளளவேனும் ஐயமில்லை .

reference: விக்கி பீடியா, கூடல்.காம்

 

4/3/11

தாய்த் தமிழே!

                  


தமிழ்க் கூடலின்  நாயகி நீ

தலை மொழிகளுக்குள் தலைவி  நீ

ஆயிரம் காலப்  புதையல் நீ

அள்ள அள்ளக்  குறையா அமுதக் கலன்  நீ !


இனிக்கவில்லை இன்னபிற இலக்கியங்கள்

நாட்டமில்லை நாடாளும் மொழிகளிலே

தாயிருக்க அடுத்தவளை அணைப்பேனா?

நீயிருக்க நினைப்பேனா வேறு மொழி!


தாயகத்தை  விலகி விட்டேன்

உயிர்த் தந்து மொழி தந்த-

தாயை விலகி விட்டேன்!

அறிவுத்  தந்து ஆற்றல் தந்த-

தந்தையை விலகி விட்டேன்

நினைவெல்லாம் நீக்கமற நிறைந்த

உன்னை விலகேன் கனவிலும் !


அளவில்லா அன்புடன் கணவன்

ஒப்பிலாச் செல்வமாய் பிள்ளை

நீங்கா நினைவுகளாய் தாய்த் தந்தை

நினைக்க வேண்டிய உயிர்களாய் உறவுகள்!

நீ மட்டும் உடலோடு ஒட்டிய உயிராய் !



நாள்தோறும் ஆயிரம் சுவைகள் நாவில்-ஆனால்

அம்மாவின் சுவை மட்டுமே தேனாய்!

நாள்தோறும் ஆயிரம் மொழிகள் செவியில்-ஆனால்

நீ மட்டுமே தீம்பழமாய்!


நெஞ்சமெனும் வானில் செங்கதிரானாய்

நேசமுள்ள மனதில் நினைவலையானாய்

எண்ணமெனும் காகிதத்தில் எழுத்தானாய்-என்

துயிலிலும்   நீயே கனவானாய் !


தேனாய்,தெள்ளமுதாய்,

தெவிட்டாத இன்பமானாய்!

மானே உந்தன் அழகினிலே

மயங்கி நின்றேன் நான் என்பேன்!


நான் மட்டுமா? நிமிர்ந்து பார்த்தேன்

நிற்க இடமில்லை,நோக்க ஒளியில்லை

நேசமாய் உன் பிள்ளைகள்!

நூறில்லை, .ஆயிரம் இல்லை

எண்ணுவதற்கு எண்ணுமில்லை

நிம்மதியாய் நீ இரு,

குறைவில்லை நாங்களிருக்க !


தரணியெல்லாம் தவழ்ந்து வரும் தமிழ் மொழியை நாமும் கையிலெடுத்து கொஞ்சி மகிழ்வோம் ,நம் பிள்ளைகளும் தமிழோடு சேர்ந்து வாழ வழி காணுவோம் !









































2/23/11

ஔவைப் போன்ற பெண்ணாயிரு!

பெண்ணே,

அழகழகாய் ஆடைச் சூட்டி

அணிகலன்கள் பலப்  பூட்டி

அளவில்லாப்  பூரிப்புடன்

அக்கறையாய் வளர்த்தார்கள் !



ஆகாயக்  கருமை எடுத்து

ஆசையாய் மை தீட்டி

ஆவி பறக்க உணவுப்  படைத்து

ஆவலாய்ப் பள்ளி அனுப்பினார்கள்!



இனிமையான  பாசம் தந்து

இளையமயிலேக்  கல்வி தந்து

இன்று நாளை என கனவுக்  கண்டு

இயன்றவரை என்று இல்லாமல்

இருப்பதெல்லாம் உனக்கே தந்தார்கள்!



ஈக்களைப்  போல் தினம் உழைத்து

ஈன்று வந்த சொத்தையெல்லாம்

ஈவிரக்கம் இல்லாமல் எடுத்து வந்தோமே!

ஈனப்  பிறவி என எண்ணாதே!



உயிர் தந்து உலகம் தந்த

உத்தமர்கள் உன் தாய் தந்தை

உனக்கெனக்  கொடுத்த அறிவை

உலகம் உணர செய்து விடு!



ஊணுறக்கம் மறந்து விடு- மன

ஊசலாட்டம் நிறுத்தி விடு

ஊக்கம் கொண்டு எழுந்து வா-மன
 
ஊனம் அதைத் தகர்த்து வா!




எண்ணியதைப்  படைக்க வா-பிறர்

எண்ணாததை முடிக்க வா

எழுச்சிக் கொண்டு உழைக்க வா

எல்லை இல்லா உலகம் காண வா!



ஏறு நடைப்  போட்டு நட

ஏழை இல்லா நாட்டை படை

ஏக்கம் கொண்டு முடங்காதே -வெற்றி

ஏணி ஏறத்  தயங்காதே !



ஐயமிது உனக்கெதற்கு

ஐவிரலும் துணையிருக்கு

ஐம்புலனைக் காத்திடு நீ

ஐராவதம் ஏறிடு நீ !



ஒடுக்கிப்  பார்க்கும் உலகமிது

ஒதுக்கி நீயும் புறப்படு

ஒளியை நோக்கி நடை போடு

ஒருவருமில்லை தடை போட!



ஓய்ந்து நிற்கும் உயிர்கள் அவை

ஓடி நீயும் உதவி விடு

ஓட்டம் நின்ற ஓடை அவை

ஓட நீயும் புத்துயிர் ஊட்டு!



ஒளசித்தியம்(தகுதி) வளர்த்துக்கொள்

ஒளதாரியத்திற்கு(பெருந்தன்மை) இவளே என சொல்லச்  செய்,

ஔபிரகம்ப்(ஆட்டுமந்தை) போல் அடையாதே

ஔவைப் போன்ற பெண்ணாயிரு!
அஃதான்று (அது இல்லாமல்)வேறில்லை வாழ்வினிலே!