8/22/19

                                                           பல்லைக்  காணோம்!

உலகத்திலேயே எனக்கு இப்போ பெரிய பயம் பேயோ,பிசாசோ ,என் வீட்டுக்காரோ இல்லை ,சில பொண்ணுங்க சொல்றது  போல கரப்பான் பூச்சி ,பல்லி ......ரொம்ப யோசிக்காதீங்க செய்திய  கேட்டா அடிக்க வந்தாலும் வருவீங்க !  என்னோட ஒரே  பயம் பல் வைத்தியர்  தான் ! என் பொண்ணு ஒவ்வொரு முறை பல் வைத்தியரிடம் போகும் போதும் ஒரே பயம் தான்.. அட அவளுக்கு இல்லங்க  எனக்குதான் !!
அவ அருகிலேயே நின்னு பார்ப்பேன் மருத்துவர் ஊசிய எடுத்தாரோ ! அந்த நிமிடம் நான் நின்ற இடத்தை காற்று தான் நிரப்பி கொண்டு இருக்கும் !இதோட ஐந்து, ஆறு முறை மருத்துவர் கிட்ட  போயாச்சு ,அவ புண்ணியத்துல கணவர் பல்லும் சரி பார்க்க பட்டாச்சு ,அடுத்து என் மகன் ஐயோ வேண்டாங்க அவன் பல் என்ன மாதிரியே, எதுவும் பிரச்சனை இல்லைனு சொன்ன அடுத்த நிமிஷம் அம்மா எனக்கும் வேணும்னு  மருத்துவர்  முன்னாடியே ஒரே போடா போட்டுட்டு குடு குடு குடுன்னு ஓடி போய் நாற்காலியில் அமர்ந்தது என்ன பார்த்து சிரிச்சான் !!
அட பாவி லாலிபாப் தரலடா அவங்க என மனசு சொல்ல ,மருத்துவர் "இவன் உங்கள போல இல்லங்க அப்பா போல திடமா இருக்கான் "என்றதும் ,மனதிற்குள்  கருவிக் கொண்டு ஆமாம் என்றேன் ! வேற வழி !!

இவ்வளவையும் ஏழு கடல் ஏழு மலை கடந்தது போல கடந்து வந்த எனக்கு வந்தது பெரிய சோதனை !!
வாயில எத வச்சாலும் எரிச்சல் ,இப்போவது கொஞ்சம் பேசறது  குறையும்னு வீட்டுக்காரர் மகிழ்ச்சியா இருந்தாலும் என் தொல்லை  தாங்காம மருத்துவரிடம் போயாச்சு! வழக்கம் போல அவர் என்ன ஆச்சுன்னு எல்லா கதையும் கேட்டுட்டு மருந்து எழுதுறப்பவே ,ஒரு வேளை அதா இருக்குமோ? டாக்டர் ,இல்ல இதா இருக்குமோ? என நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்,அவர் மெதுவா நிமிர்ந்து  பார்த்து எதுனாலன்னு சரியா தெரியலைம்மா!  ஏதா இருந்தாலும் இந்த மருந்தை 5 நாளைக்கு குடிங்க அப்புறம்... என்று அவர் சொன்ன வார்த்தையை கேட்ட எனக்கு மயக்கமே வந்திரும்  போல இருந்தது...ஆமாங்க, நீங்க நினைக்கிறது சரி தான் ...எதுக்கும் போய் பல் மருத்துவரை பாருங்க என்றாரே ,எனக்கு இடி மின்னல் மழை எல்லாம் ஒரே நேரத்தில் மனசுக்குள்ள வந்துருச்சு ,நம்ம வீட்டுல எல்லாருக்கும் நம்ம விஷயம் தெரிஞ்சு நண்டு ,சிண்டு எல்லாம் நம்மள பார்த்து சிரிக்குது என்ன செய்யறது ?,அடுத்த நாள் மருத்துவரை பார்க்க கிளம்பியாச்சு !!

ஊருக்கு திருவிழா பார்க்க போறது மாதிரி குடும்பமே போய்  இறங்கியாச்சு ,பரிட்சையில் படிக்காத பேப்பர் வந்தா ஒரு பயம் வருமே அத விட இது அதிகமா  தெரிஞ்சது,காத்திருக்கயிலேயே பல்லுல ஊசி போட்ட வழிக்குமாடா ?னு கேட்டா என் பொண்ணு அப்புறம்? எனக்கு போடும்போதெல்லாம் பார்த்திருந்தாத்தானே ,என அலுத்து கொண்டாள் !பின்  ரொம்ப வலிக்கும்மா என  சொல்ல ,என் முக மாறுதலை பார்க்க கணவருக்கே சகிக்கலை போல,அட சும்மா காட்ட தான் வந்திருக்கோம் ஊசி எல்லாம் இல்லை சும்மா இரு என்றார் !
என்ன இருந்தாலும் வீட்டுக்காரர் வீட்டுக்காரர் தானே,இந்த பிள்ளைங்க கிடக்கு என அவளை அலட்சியமாய் பார்க்க அவ தொலைபேசிக்குள்ளே தலையை விட்டு வெகு  நேரம் ஆச்சு போல!

கடைசியா மருத்துவர் என் முறை வந்தவுடனே சிரிச்ச சிரிப்பிலேயே, நல்லா  மாட்டிக்கிட்ட போல
என சொல்வது தெரிந்தது ...மருத்துவ உதவியாளர் உயரமான இருக்கையில் உட்கார வைத்து ஒரு சாய் சாய்த்து விட்டார் ,நமக்கு நம்ம ஊர் ராட்டினத்தில் ஊட்காருவதே பேய் பயம்,இதுவும் அதை போல தான் இருந்தது,வாயை நன்றாக திறக்க சொல்லி துணிக்கு போடும் கிளிப் மாதிரி வாய்க்குள்ள வச்சு கடிக்க சொல்லவும் ,ஏற்கனவே வாயெல்லாம் வலி இதில இது வேற என எண்ணிய எனக்கு கண்களில் நீரே வந்து விட்டது ,மிகவும் சிரமப்பட்டு எல்லா படமும் எடுத்தாயிற்று ,அடுத்த 5 நிமிடம் மாறி ,மாறி மருத்துவரும் உதவியாளரும் பேசிக்கொள்கிறார்கள் ,எனக்கு ஒரே குழப்பம் பல்லை தானே எக்ஸ்ரே எடுத்தாங்க இதில என்னப்பா ?என்று ,மருத்துவர் கேட்டார் உங்களுக்கு 31 பால்தான் இருக்கு விஸ்டம் டூத் எடுத்தீங்களா இதுக்கு முன்னாடி என்று ? இல்லங்க பிறந்ததிலிருந்து இதுதான் முதல் முறை பல் மருத்துவரிடம் நான் வருவது என்றேன்...நல்ல யோசிச்சு பாருங்க சிறு வயதில் எதாவது எடுத்தாங்களா?இல்ல டாக்டர் என்றேன்…

திரும்பவும் அவர்கள் இருவரும் கூடி பேசிக்கொண்டார்கள் ...ஆச்சர்யமா இருக்கே மீதி 3 அறிவு  பல்லும் உள்ள இருக்கு இனி அவை வளரும் ஆனா ? இந்த பல்லை மட்டும் காணோம் என்றார் ….
சும்மாவே நம்ம வீட்ல எல்லாரும் நம்ம அறிவை மெச்சுவாங்க  !! இதுல ஒரு விஸ்டம் டூத் இல்லனதும் எனக்கு சிரிப்பை அடக்க முடியலை ...அதோடு மருத்துவர் நான் இதுவரை 31 பல்லோடு ஒருத்தரை பார்த்ததில்லை ,...அதுவும் விஸ்டம் டூத் இல்லாமல் என்றார் !!! இதைக் குறிப்பதற்கு எங்கள் அட்டவணையில் ஒரு இடமே இல்லை எனவும் சொன்னார் !!! கடைசியில முப்பது வயசுக்கு மேலதான் ஒரு பல்லு  இல்லனு தெரிஞ்சுருக்கு என எண்ணும்போது  வரும் சிரிப்பை அடக்கி கொள்ள வேண்டியதாக இருந்தது ...எல்லாம் முடிஞ்சு ஒரு பல்லை காணோம்னு கண்டுபிடிச்சதுக்கு இவ்ளோ பெரிய தொகையா ?என எண்ணிக்கொண்டே கொடுத்து விட்டுவெளியே வந்து அடக்கி  வைத்த சிரிப்பெல்லாம் சிரித்தாயிற்று ….  இதுதாங்க இந்த பல்லை காணோம் கதை…





                                               கன்னுக்குட்டி - பிரதீபா பிரேம் .

ஆரவாரமில்லாத ஐப்பசி மழை ! நிற்காமல் தூவி கொண்டுதான் இருந்தது நான்கு நாட்களாக! மழைச்  சாரலில் , போர்த்திய கம்பளிக்குள் கலை மடக்கிக்  கொண்டு தூங்கும் தூக்கம் அடடா!!அம்முக்குட்டி கனவுலகில் மிதந்து கொண்டிருந்தாள்! தூறலின் இடையிலும் தனது கரத்தை நீட்டும் கதிரவனை அதட்டி விட்டு !!!

இரண்டு  நாளா இந்த மாடு படர பாடு தாங்க முடியல இன்னிக்கும் வேலைய கட்டிகிட்டு அழாம கொஞ்சம் மாட்டு டாக்டர வர சொல்லிட்டு போங்க ,அவரு பொண்டாட்டிய நேத்து பாத்தேன் வீட்டுல  மாடு ரொம்ப சொணங்கி இருக்கு அவர வந்துட்டு போக  சொல்லுங்கனேன் ,சொன்னாளோ? இல்லையோ? மகராசி ! அம்மா தாமரையின் சத்தம் இது !!!!         

காலையில காபிய கொடு நை ..நை ..நைன்னு  ஆரம்பிக்காத என்று திரு  சற்று குரலை உயர்த்த !

காபி மட்டும் எங்கிட்டு வரும் ? வேல ஒன்னு சொன்னா  கேக்கிறது  இல்ல !!!,தாமரை  சற்று கவலை தோய்ந்த தொனியில் தான் கூறினாள் .

ஆரம்பிக்காத கட்டாயம் இன்னிக்கு வர சொல்றேன் போதுமா ? என்று பேச்சிற்கு முற்று புள்ளி வைத்தார் திரு .

 தூக்க கலக்கத்தை  அம்மா, அப்பாக்கு கொடுத்த அர்ச்சனையிலே கலைத்தாள் அம்மு !போர்வையை உதறிவிட்டு ஓடினாள் கொட்டகைக்கு.. வெளியில் தூறல் நின்ற பாடில்லை ,மழைச்  சாரல் படாமல் இருக்க அம்மா சாக்கு கட்டி கொண்டிருந்தாள் கொட்டகையில், நிறைமதமாய் நிற்கும் மாடு,இனம் புரியாத வலியில் பாவமாய்  பார்த்தது!!

முகத்தின் அருகே  சென்று தடவிக் கொடுத்தேன் , மாடு வலியில் விட்ட பெரு மூச்சால் என் கை கதகதத்தது,இங்க என்ன அம்மு பண்ற ? ஸ்கூலுக்கு கிளம்பனும் போயி பல்ல விலக்கு,

அம்மா எப்பம்மா கன்னுக்குட்டி பிறக்கும்?

இன்னைக்கு. இல்லைனா நாளைக்கு பிறந்துரும்,

கன்னுக்குட்டி நல்லா ரோஸ் கலர்ல இருக்கனும்  அப்படித்தான்  கனவெல்லாம் கண்டேன் சரியா ? சொல்லி கொண்டே பள்ளிக்கு கிளம்பினேன்.
 ஸ்கூலுக்கு நேரம் ஆச்சு சீக்கிரம் சாப்பாடு கொடுங்க இல்லனா... வேண்டாம் அம்மு கத்தி கொண்டே கொட்டகை பக்கம் பார்வையை வீசினாள் ,

வலி மிகுந்த பார்வையுடன் பாசமாய் பார்த்தது மாடு அவளை ,பதிலுக்கு அவளும் சிரித்து  வைத்தாள் , அதற்கு புரியும் என்பது தெரிந்து ...

பறக்காத, இட்லி எடுத்திருக்கேன் , கொஞ்சம் ஆறட்டும்  அம்மா சொல்லி கொண்டே ஊட்ட  வந்தாள்...

வெளியில் சைக்கில் சத்தம் அப்பாவும், டாக்டரும்...... அம்மா தட்டை வைத்துவிட்டு வாங்க ,வாங்க என்று சொல்லிக்கொண்டே வாசலுக்கு  போய்விட்டாள்,இட்லியை  விழுங்கி தண்ணியை குடித்தாள் அம்மு ,டாக்டர் மாட்டின் வயிறை அமுக்கி பார்த்து கொண்டிருப்பது நாடு அறையின் சன்னல் வழியே நன்றாய் தெரிந்தது .

அம்மா டாட்டா ,அப்பா டாட்டா சொல்லிவிட்டு தோல்பையை மாட்டிக்கொண்டாள் ...

படலை மூடிட்டு போ..... ஆடு மாடு வந்துரும்  உள்ள.... ....அம்மா கத்தினாள், கொட்டகையில் இருந்து.

வழக்கம் போல வகுப்புகள் முடிந்தது, அதுவரை மறந்திருந்த கன்றுக்குட்டியின் நினைவு மீண்டும் தலை தூக்கியது தோழிகளுக்கு
விடை  கொடுத்து விட்டு விடு விடு வென நடையயைக் கட்டினாள்  ....

இரவு அதே எதிர்பார்ப்புடன் கரைந்தது!
 மிகவும் சன்னமான குரல் அருகே ஒலித்துக்  கொண்டே இருந்தது !
வயிற்றில் கன்னுகுட்டி இல்லை !!! சுற்றி பார்த்துட்டேன் தோட்டத்தை ...
எங்கேயும் காணோம் !!!ஒருவேளை நாய் கீய் .....இழுத்தது அம்மாவின் குரல் !!
படாரென்று இயந்திரம் போல் எழுந்து போர்வையையை உதறித்தள்ளி
கண்ணை கண்ணை கசக்கி கொண்டே ஓடினாள் ...கொட்டகைக்கு அம்மு  !

இருவரும் அவளை ஒரு  நிமிடம் திரும்பி பார்த்து விட்டு மீண்டும் தேட  துவங்கினார்கள் ....பாதி  புரிந்தவளாய் அம்மாவிடம் சென்று எங்கே போச்சு? கண்ணு குட்டி என்றாள்  ....தேடி பார்றா ...இப்போதான் நாங்களும் எழுந்தோம் ,என்றாள் அம்மா ....

நல்ல குளிர் ,இன்னும் சூரியன் கண்ணை கசக்கி கொண்டுதான் இருந்தது முழுவதும் தூக்கம் கலையாமல்  ....இருந்த அரை குறை வெளிச்சத்தில் தோட்டத்தின் அருகில் இருந்த சிறு அறையின் ஓரத்தில் சென்று எட்டி பார்த்தாள்  அம்மு ...வெள்ளையாய்  சுவர் ஓர பள்ளத்தில்  எதோ தெரிய...அப்பா விளக்க இங்க கொண்டு வாங்க எனக் காத்திக் கொண்டே ஆயிரம் சாமியை வேண்டிக் கொண்டாள் ... கட்டாயம் பிங்க் கன்னு குட்டியாதான்  இருக்கணும் !!!!

விளக்கு வெளிச்சத்தில் அது கன்று  குட்டி தான் என முடிவு செய்து ,
மெதுவாக அதற்கு அடி  படாமல் பள்ளத்திலிருந்து மீட்டார் அப்பா !!!நடக்க முடியாம தடுமாறி நடந்து இருட்டில் இங்க வந்து விழுந்துருச்சு போல எனச் சொல்லி கொண்டே கன்று  குட்டியை  மாட்டின் அருகே கொண்டு வந்து போட்டு அதன் கால்களில் உள்ள குழம்பை நீக்க முற்பட்டார் .....அம்மா மாட்டின் சினை  பையை ஒரு சாக்கில் கட்டி வைத்து விட்டு ...கொதித்து கொண்டிருந்த வெந்நீரை வெது வெதுப்பாக்கி மாட்டின் பின் புறத்தை கழுவிக் கொண்டிருந்தாள் அதற்கு வலிக்காமல் மெதுவாக ....

பிள்ளையை  பார்த்த மகிழ்ச்சியில் மாடு சுற்றி சுற்றி நடந்தது ,பிரசவித்த  வலியயை மீறி .....அதனை விட கன்று குட்டியின் இளஞ்ச்  சிவப்பு
கலந்த வெள்ளை நிறத்தைக் கண்டு கனவு நினைவானதை எண்ணி அதன் மேல் சாய்ந்து  கொண்டு கொஞ்சி கொண்டிருந்தாள் அம்மு......

அதற்குள் அம்மா கன்றை ஊட்ட விட்டு ..அது குடித்தது போக மீதி சீம்பாலை
காய்ச்சி விட்டு கூப்பிட்டாள் ...இதைக்  குடிச்சுட்டு அப்பாவோட போய் இந்த சாக்கை  ஆல  மரத்தில் கட்டிட்டு வா, என்றாள் .மனம் முழுதும் மகிழ்ச்சியோடு அப்பாவின் பின்னல் அமர்ந்து சாக்கை கையில் பிடித்துக்    கொண்டு அமர்ந்தாள் அம்மு ....  ஆற்றங்கரையின்  ஆலமரம்  நோக்கி அப்பாவின் வண்டி பயணப்பட்டது ..இளம் வாடை காற்றை கிழித்து கொண்டு....

கதையை எழுதி முடித்து விட்டு ...வலை தளத்தில்  செய்தியை படிக்க திறந்தேன் ..."தமிழகத்தில்  பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டை தடுக்கக் கோரி வலியுறுத்தல் "..தலைப்பு செய்தியை  பார்த்து சிரித்துக் கொண்டேன் ....நமது குடும்பத்தில் மாடுகளும் ஒன்று என தெரியாதவர்கள் ....நமது பாரம்பரியம் புரியாதவர்கள்  என .......


ice bell

ஐஸ்  பெல் !
                           விடுமுறை முழுவதும் இந்தமுறை தாத்தா வீடுதான்.கொல்லைபுறத்தில் கொய்யாப்பழம் பறித்துக் கொண்டிருந்தேன் ,தூரத்தில் ஐஸ் பெல் அடிக்கும் ஓசை அப்படியே  போட்டுவிட்டு
வீட்டைச்சுற்றி நான் ஓடி வருவதற்கும் ஐஸ் வண்டி தாத்தா வீட்டு வாசலுக்கு  வருவதற்கும் சரியாக இருந்தது ,ஐஸ் நில்லுங்க.... என்று சொல்லிவிட்டு  ஒரே தாவலாக வீட்டுக்குள் ஓடினேன் காசு எடுக்க ,தாத்தா கட்டிலில்  படுத்திருந்தார்,
காசு கேட்டால் சில்லறை இல்லையடி என்பார் ,மெதுவாக ஆணியில் மாட்டியிருந்த சட்டைப்பையில் கையை விட்டேன்இரண்டு இரண்டு ரூபாய் நாணயம் கையில் சிரித்தது.2 க்ரேப் ஐஸ் ,2 மில்க் ஐஸ் என நான்கையும் கையில் பிடிக்க முடியாமல் பிடித்து வந்து டம்ளரில் போட்டுக் கொண்டேன்.நான் மனதிற்குள் வேண்டியபடியே மாமா ,சித்தி அனைவரும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்... தாத்தாவைத் தவிர .டிவி பார்க்க வேண்டும் யோசித்துக்கொண்டே மெதுவாக நாடு அறைக்குச் சென்று கட்டிலுக்கு பின்னால் அமர்ந்துக் கொண்டேன்.என்னடி கைல ?என்றார் தாத்தா ,ஒண்ணுமில்ல  ஐஸ் என்றேன் மெதுவாக,எத்தனை ?என்றார் ,ஏற்கனவே 2 சாப்பிட்டு  விட்ட  மகிழ்ச்சியில் 4 என்றேன்,மேலும் நல்லா இல்ல தாத்தா ....எனச்  சேர்த்துக் கொண்டேன் .பரவாயில்ல ஒண்ணு   கொடு என்றார் அதட்டலாக ,மனதிற்குள் திட்டியபடியே வேகமாக பால் ஐஸை பாதி சப்பிவிட்டு நீட்டினேன் ,ஏது காசு ?என்றார் உங்கள தூக்கத்தில  தொல்ல பண்ண வேணான்னு நானே எடுத்துக்கிட்டேன்  என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக அடுப்படிக்கு(சமையலறை) ஓடி சாப்பாடு ஆச்சா ?என்றேன் அம்மாச்சியிடம்....  சனிக்கிழமை  வாய்ல போட்றாத விரதம் என்று கத்தினாள் அம்மாச்சி .மீண்டும் பெல் சத்தம் இந்தமுறை வேறுமாதிரி  ஒலித்தது ,திடுக்கிட்டு கண்விழித்தேன் காரில், மடியில் நழுவிய பாப்பாவை தூக்கி கையில் அணைத்துக்கொண்டேன் ,இரவு முழுதும் குழந்தையோடு கண்விழித்தது ,காலையிலிருந்து அழுதது என அசதியில் தூங்கிப்போனேன் என எண்ணிக் கொண்டேன் .தெருக்குள் வந்து விட்டோம் 10 நிமிடமா  கார் நகரல எல்லாம் நம்ம வீட்டுக்குத்தான் போறாங்க போல என்றார் வீட்டுக்காரர் ,இறுதியாக வீட்டு  வாசலுக்கு வந்தாயிற்று பாப்பாவை  அவர் கையில் கொடுத்துவிட்டு ஓடினேன் நாடு அறைக்கு,,, தாத்தா படுத்திருந்தார் இந்தமுறை  ஐஸ் பெட்டியில் ,என்னைப்  பார்த்ததும் அம்மு வந்திருக்கா ,பேத்தி வந்துருக்கா... என ஒரே அழுகை ஓலம் ,ஆனால் எனக்கு மட்டும் கேட்டது  தூரத்தில் ஒலிக்கும்  ஐஸ் பெல் சத்தம் தாத்தாவை  பார்த்தேன் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தார் ஐஸில் ,ஆணியில் மாட்டியிருந்த தாத்தாவின் சட்டையும் என்னையே ஏக்கமாக பார்ப்பது போல்
இருந்தது எனக்கு !



புத்தகமேந்தவேண்டிய கைகள் !


                                                  புத்தகமேந்தவேண்டிய கைகள் !


மிதந்து கொண்டிருக்கும் மேகக் கூட்டங்களையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும் ஹன்சினியிடம்  என்னடா என்ன யோசிக்கிற என்று கேட்டதும் சற்றே என் பக்கம் பார்வையை திருப்பி ஒண்ணுமில்லம்மா நம்ம ஊர் எப்படி  இருக்கும் ? எல்லாரும் எப்படி இருப்பாங்க ? என்னோட ஸ்கூட்டர் எல்லாம் நான் ரொம்ப மிஸ் செய்வேன்ல  ? அங்க கார் இருக்குமா ? அவள் ஒரு கேள்விக்கு பதில் சொல்லுவதற்கு முன்பே அத்தனை  கேள்விகளும் வந்து விழுந்தது ,இங்க  எப்படி இருக்கோ... அதே போலதண்டா அங்கேயும் ,சரி சீட்   பெல்ட்ட  போட சிம்பல் வருது பாரு என சொல்லிவிட்டு அவள் கையில் பசுல்ஸ் அண்ட் மேசஸ் புக்கை கொடுத்துவிட்டு நானும் மிதக்கும் வான்மெத்தையின்  மேல் கண்ணை பதித்தேன் ,கடைசியாக கைகுழந்தையாக  ஹன்சினி இருக்கும் பொழுது இந்தியா வந்தது 4 வருடங்கள் உருண்டோடிற்று நம் நாடு ,நம் வீடு , என்று நினைக்கும் போதே புல்லரிக்கிறது என நினைத்துக்கொண்டே எனக்கு அருகில் வந்த பணிப் பெண்ணையும் கவனிக்க  தவறவில்லை நான் ,1 நான் வெஜ் மீல்சும் 1 வெஜ்  மீல்சும் சொல்லி வாங்கிக்கொண்டேன் ,இருந்த பசியில் உள்ளே போயிற்று வேகமாக   , இங்கே செவிக்கு உணவிடுவதற்கு முன்பே வயிற்றுக்கு  ஈயப்பட்டாயிற்று  என எண்ணிக்கொண்டே  பாரதியின் கவிதைகள் புத்தகத்தை  கையிலெடுத்தேன் , நீங்க தமிழா? என ஒரு குரல் கேட்டது நிமிர்ந்து பார்த்தால் 65 வயது இருக்கும் அந்த அம்மா கண்களில் நான் என்ன சொல்ல போகிறேன் என்ற ஆர்வம் மிகுந்தது ...ஆமாம்மா என்றேன் ,நீங்க பிரான்க்பார்ட் வழியா சென்னை போறிங்களா?  என்றார் அடுத்ததாக ஆமாம்மா என்றேன் ,அப்படி ஒரு பிரகாசம் அவர் விழிகளில் நாங்களும் தான்மா... சென்னை போற வரைக்கும் கொஞ்சம் உதவி பண்ணுங்க என்றவரிடம் கண்டிப்பா நானே கூட்டி போய் விடறேன் வெளில வரைக்கும் கவலைபடாதீங்க என்றேன்.சரிம்மா நான் போய் இனி நிம்மதியா தூங்குவேன் என்றார்.அவரை பார்க்கும் போதே மனது வலித்தது நம் அம்மாவும் இப்படி தானே ஒன்றுமே தெரியாமல் நம் பிரசவத்திற்கு வந்திருப்பாள் எவ்வளவு துன்பப்பட்டிருப்பாள் மொழி புரியாமல், வழி புரியாமல், நினைக்கையிலே கண்கள் ததும்பியது.என்ன செய்தாலும் பெற்றவருக்கு நாம் ஈடே செய்யமுடியாது கடைசி காலமாவது அவர்களிடம் போய் விட வேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டேன்.ஒரு வழியாக நாங்கள் சென்னை  ஏர்போர்ட்டிற்கு  வெளியில்  வந்தோம்... ஆம் அந்த அம்மாவுடன் தான்  , வீடு செல்லும் வழியெல்லாம் மாறிப் போய்  இருந்தது ,அடுத்த நாளே ஊரில் நடக்கும் நிகழ்ச்சிக்காக உடைகள் வாங்க செல்லும் வரை இந்தக் கதைக்கான கரு கிடைக்கவில்லை ,கடைக்கு வெளியே என் மகள் வயதே ஆன குழந்தை அக்கா ...... இத வாங்கிக்கங்க அக்கா 1 ஸ்டிக்கர் அட்டை வாங்கிக்கங்க..... இன்னும் சாப்பிடவே இல்லை என்று சொல்ல சொல்ல எனக்கு இந்த சமுதாயத்தையும் இந்த பிஞ்சுக் குழந்தையை பெற்றவரையும் நினைத்து  ஆத்திரமாக வந்தது, அம்மா.... பாவம் அந்த பாப்பா,  நீங்க ரியல்லி  பேட் ஒண்ணுமே ஹெல்ப் பண்ல அவளுக்கு, அவ ஏன் சாப்பிடல ,ஏன் இந்த டிரஸ் போட்ருக்கா ? அவங்க அம்மா எங்க ?ஹன்சினி  கேட்கும்போதே அழ ஆரம்பித்து விட்டாள் ,எனக்கு என்ன  சமாதனம்  சொல்வதென்றே  தெரியவில்லை,இந்த சமுதாயம் இப்படியே ஊறிப்போய் கிடக்கிறது இதனை மாற்ற என்ன செய்யலாம் ?இந்த வகையான பெற்றோரை எப்படி மாற்றலாம் ?இப்படி நினைத்துக் கொண்டே காரில் ஏறிக்  கொண்டேன் . அந்தக் குழந்தையிடம் வாங்கிய போனி ஸ்டிக்கரை  ஆசையாக கட்டிக்கொண்டு வந்தாள்  இவள்  ,எப்படியொரு உலகம் இது ,இதே போல் அம்மா அப்பாவுடன் விளையாட வேண்டிய குழந்தை அது   இப்படி தெருவில் விட்டார்களே !!அரசியல்,மனிதம்,கல்வி எதுவுமே இவைகளை மாற்றாதா?
இப்படி எண்ணிக் கொண்டே வீடு வந்தேன் ,மறு நாள் குழந்தையோடு வெளியே வரவே பயம்தான் ஏனெனில் அவள் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை ,ஆனால் அவள் விடுவதாக இல்லை ,அபர்ட்மெண்டை  விட்டு வெளியிலே வந்ததும் இரண்டு சிறுவர்கள் ஓடி வந்தார்கள் அக்கா ,அக்கா  பாப்பாக்கு புக் வாங்கிக்கங்க 2 புக் 20ரூபாதான் என்றான்  ஒருவன், சரி கொடு என்று 20 ரூபாயை கொடுத்து திரும்புவதற்குள் அக்கா ,அக்கா  நான் 10 ரூபாய்க்கு தரேன் வங்கிக்க.... என்றான் இன்னொருவன்  ,எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை நான் புத்தகம் வாங்கியவனை கூப்பிட்டு தம்பி பொய் சொல்லாம சொல்லு புத்தகம் என்ன விலை ?என்றேன்... அக்கா இல்லக்கா....நான் சாப்பிடவே இல்லக்கா ,ஒரு புக்கும் விக்கலைக்கா அதான் என்று தலையை சொறிந்தவனை  திட்டுவதற்கோ ,கோபப்படுவதற்கோ  மனம் வராமல் போய்  சாப்பிடு  முதல்ல என்றேன் ,தேங்க்ஸ் க்கா என்றவாறே ஒரு அழகிய சிரிப்பை உதிர்த்து விட்டு சென்றான்.

எல்லாவற்றையும் பார்த்துவிட்டு பாப்பா ..அம்மா ஏன்மா அந்த அண்ணா பொய் சொன்னான்?, ஏன் இவங்களுக்கெல்லாம் சாப்பாடு இல்லை  ?என்றாள் வறுமை,சுயநலம் கொண்ட சமுதாயம் நாம இவங்களுக்கு எதாவது பண்ணனும் பாப்பா என்று கூறிவிட்டு நகர்ந்தேன்  .இதோ ஒரு வருடம் கடந்தே போயிற்று தவிக்கும் பிஞ்சுக் குழந்தைகளின் தாயகத்தை  விட்டு கடல் கடந்து வந்தாயிற்று சொல்லப் போனால் நானும்  அந்த சுயநல சமுதாயத்தில் ஒரு அங்கம் தான் என மனது இடித்துரைக்கிறது , அப்போதெல்லாம் கடவுள் முன் நின்று எனக்கும் ஒரு சக்தியை கொடு அவர்களை வெளிச்சத்திற்கு  கொண்டு வர என வேண்டிக் கொண்டு இருக்க மட்டுமே முடிகிறது  , விரைவில் அந்த பிஞ்சுக்  கரங்கள் பாடப்புத்தகத்தை  தாம் படிப்பதற்கு மட்டுமே ஏந்த ....அரசும் ,பெற்றோரும் உதவுவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருங்கள் என்னுடன் நீங்களும் !!

பள்ளிக்கூடம்


                                                    பள்ளிக்கூடம்!

இந்த வாரம் முழுக்க தொலைபேசியில் என்னோட ஹாட் டாபிக்
   "ஆமாம் வர்ற திங்கள் கிழமை தான் ஸ்கூல் ,அவகிட்ட ஸ்கூல் பத்தி  எல்லாம் சொல்லிருக்கோம்  ,பாப்பாவும் ஸ்கூல் போகணும் ,போகணும்னு சொல்லிட்டே இருக்கா " .என இதே புராணமாக பாடிக் கொண்டிருந்தேன் ,குட்டிம்மா வழக்கம் போல எதையோ ஆராய்ச்சி பண்ணிட்டு வந்து சமர்த்தா என் பக்கத்தில நின்னா ,அம்மா யாரு போன்ல ?என்றாள் "ப்ரியா ஆன்ட்டி மா... என்று சொல்லிவிட்டு,   ஓகே பிரியா பசி வந்துட்டு போல பாப்பாக்கு  நான் அப்புறம் பேசறேன் என இணைப்பை துண்டித்து விட்டு சமையலில் கவனமானேன் .

    அம்மா என் வயிறு பசிக்குது சொல்லுதும்மா என்ற அந்த பிஞ்சு குழந்தையை வாரி அணைத்துக்கொண்டு இன்னும் 5 நிமிசம்தாண்டா கண்ணு என சாப்பாடு கொடுப்பதற்குள்  காலையே கட்டிக்கொண்டு வந்தாள்  குழந்தை .

           பாப்பாவிற்கு பள்ளிக்கு கொடுக்க வேண்டியதெல்லாம் வாங்குவதிலேயே இந்த வாரஇறுதிநாட்கள் பறந்து போயிற்று,திங்கள் கிழமைக் காலை வேகமாக அவளை எழுப்பி ,பல்துலக்கி பாலைக்கொடுத்தேன் , உட்கார்ந்து கொண்டே தூங்க ஆரம்பித்த குழந்தையை பாவமாக பார்த்து விட்டு தொலைக்காட்சியில் அவளுக்கு பிடித்த பொம்மை படத்தை போட்டேன் ,ஒருவழியாக கிளப்பி விட்டு
 இந்தியாவிற்கு பேச தொலைபேசியை எடுத்து 2  தாத்தா ,பாட்டியிடமும் ஆசிர்வாதம் வங்கி முடித்து, காரில்போய் அமர்ந்துக் கொண்டோம் .

           இவளுடைய பள்ளியில் சொன்ன வழக்கப்படி முதல் நாள் விளையாட்டு மைதானத்தில் விட்டுவிட்டு  வந்துவிடவேண்டும் என்பதால் உள்ளே சென்று விளையாடு பாப்பா என கூறி நின்றேன் ,எல்லா குழந்தையும் அம்மா,அப்பா போனவுடன் அழுவதை பார்க்கவே மனம் கசிந்தது.
                 ஆசிரியை வந்து " யு  கேன்  லீவ் வி வில் டேக் கேர் " என்றவுடன் மெதுவாக நகர தொடங்கினேன்,இதுவரை சமர்த்தாக நின்று கொண்டிருந்த பாப்பா காலைக் கட்டிக்கொண்டு அம்மா போகாத நானும் வரேன் என கதற ஆரம்பித்தாள் ,நானும் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு இல்லடா கண்ணா
  பாரு எவ்ள பிரண்ட்ஸ் உனக்கு ஜாலியா விளையாடு தங்கம் என கூறுகையிலே என் குரலும் தளுதளுத்தது ,அவளை வலுக்கட்டாயமாக
 விலக்கி விட்டு நகருகையிலே எனக்கும் அழுகை வெடித்தது ,ஓடி வந்து
   காரில்ஏறிக்கொண்டு தேம்பி அழுத என்னை பார்த்துக் கொண்டே கதறிக் கொண்டிருந்தாள்  குழந்தை.வீடு வந்தும் மனதில்லை, அம்மாக்கு பேசி அழ ஆரம்பித்துவிட்டேன் குழந்த ரொம்ப அலறாம்மா என.
       
  அழுது முடித்தவுடன் அம்மா சொன்னாள் ,நீ முதல்ல பள்ளிக்கூடம் போனப்ப
உனக்கு ஐந்து வயசு ,அப்பவே நீ ரொம்ப அழுத ,பாரு இவ்வளவு வயசு ஆகியும் அழற  அவளுக்கு இரண்டரை வயசுதான் அவ  என்ன பண்ணுவா?.ஆடி ,ஓடி விளையாட வேண்டிய வயசு இது, இன்னும் கொஞ்ச வருஷம் ஆனா நீயே நினச்சா கூட அவ உன்கூட இருக்க மாட்டா ...,ஆனா என்ன பண்றது இப்ப உள்ள காலத்திற்கு நாமலும் மாறனுமே என ஆறுதல் கூறினாள்  .
               
                   இப்போ மனது கொஞ்சம்  லேசாக இருந்தது ,அம்மா சொன்னதின் அர்த்தம் எனக்கு புரியாமல் இல்லை ஆனாலும் மனது ரொம்பவே பாரமாக இருந்தது ,கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன் மணி பன்னிரண்டு
அடித்ததுபசி வந்திருக்குமே ,என்ன பண்ணுவாளோ ,அவசரமா இருந்தா சொல்லுவாளா? டயபர்  வேற போடலையே என ஆயிரம் கேள்விகள் மண்டையைக் குடைந்தது . எனக்கு வீட்டில் நிற்க முடியவில்லை,வாங்க எப்ப வரீங்க ? என நான் செய்த தொல்லையில் அரைமணியில் வந்து சேர்ந்தார் கணவர் ,இருவருமாய் புறப்பட்டு பள்ளியில் கார்கள் நின்ற வரிசையில் சேர்ந்துக் கொண்டோம் ,எங்கள் என்னைப்   பார்த்ததும் பாபாவைத் தூக்கி வந்தார்கள் ,அவர்களுடைய கட்டுபாடுகளெல்லாம் மறந்து கார் கதவைத்தி திறந்துக் கொண்டு ஓடிப் போய்  பிள்ளையை கேட்டேன்,அந்த ஆசிரியையோ
"ப்ளீஸ் வி வில் புட் ஹேர் இன் கார் சீட் " என கொடுக்க மறுத்து விட்டார் ,மனதிற்குள் கருவியபடியே வந்து சீட்டில் அமர்ந்துக் கொண்டேன்,குழந்தை அழுதுக்  கொண்டே கட்டிக் கொண்டாள்  ,எவ்ள சொல்லி கூட்டிட்டு வந்தேன் இறங்காத அவங்களே  வருவாங்கன்னு ....போனியே என்ன ஆச்சு என அவர் கத்தியதெல்லாம்  நாங்கள் கொஞ்சிக் கொண்டதில்  எங்கள் காதில் ஏறவே இல்லை!


pillai mugam

                                           பிள்ளை  முகம்
                   
                    வழக்கம் போல வெள்ளிக்கிழமை மாலை 3  மணிக்கெல்லாம்
அலுவலகத்திலிருந்து புறப்பட்டு  அவசர அவசரமாக ஆட்டோ பிடித்து
எனது தங்கும்விடுதிக்கு ஓடினேன் ,ஆயத்தமாக வைத்திருந்த எனது பெட்டியை தூக்கிக் கொண்டு குறுக்கு வழியைப் பிடித்து ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்கும்  எனது புகை வண்டி கிளம்ப போகும் செய்தி ஒலிபெருக்கியில் வருவதற்கும் சரியாக இருந்தது,ஓடிச் சென்று மகளிர்க்கான பெட்டியைப் பார்த்தேன் நிற்க கூட இடமில்லை ,வேறு வழியில்லாமல் பொது பெட்டியில்   ஏறும்போதே  வண்டி நகர தொடங்கிற்று,இறுதி  நேரத்தில் அடித்து பிடித்து ஏறும் என்னை பெட்டியில் இருந்த அனைவரும் ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்து விட்டு அவரவர் வேலையில்
ஆழ்ந்து விட்டனர்.எவ்வளவு நேரம்தான் நிற்பது எங்காவது சிறிது இடம் கிடைக்குமா? என கண்கள் அலைந்துக்கொண்டிருக்கையில் எனக்கு எதிரே உள்ள வரிசையில் ஒரு அம்மா தனது குழந்தைகளை உட்கார வைத்திருந்தார்,சிறிது நகர்ந்தால் நானும் அமரலாம் என நான் எண்ணுவதை பார்வையிலேயே உணர்ந்த புண்ணியவதி பிள்ளைகளை இன்னும் நகர்த்தி உட்கார வைத்து முழு இடத்தையும் அடைத்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள் ....இன்னும் 5  மணி நேரப் பயணமாதலால் நிற்பது சரிபட்டு வராது  என எண்ணிக் கொண்டே என் பையை கீழே வைத்து அதில் மெத்தென்று அமர்ந்து கொண்டு  தனி சிம்மாசனத்தில் அமர்ந்த பெருமிதத்தோடு அனைவரையும் நோக்கி பார்வையை செலுத்தினேன்,பிள்ளையை நகர்த்த மறுத்த தாய் எனது சிம்மாசனத்தை  பார்த்து பொறாமையில் சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்டார்.
வண்டி சென்னை எக்மோரிலிருந்து ,மதுரை போய்க் கொண்டிருந்தது.
தாம்பரம் வரை நான் என் கையில் இருந்த பாரதியார் கவிதையில் ஆழ்ந்து  விட்டேன் ,தாம்பரம் வந்ததும் சிம்மாசனத்தை விட்டு கட்டாயம் எழ வேண்டும் ,இல்லெயெனில் வழியில் நந்தி போல் அமர்ந்ததற்கு தேநீர் விற்பவரிடமெல்லாம் அர்ச்சனை வாங்கியாக வேண்டும்.ஒரு வழியாக தாம்பரம் தாண்டியது நான் மீண்டும்  என் ஆசனத்தை அமர்வதற்கு  சரி பண்ணிக் கொண்டிருந்தேன் ,மானசீகமாக நான் வாழ்த்திய அந்த தாய் என்னை அழைத்தாள் இங்க வந்து உட்காந்துகங்க என மெல்லிய புன்னகையுடன்.... புரியாத புதிராய் நன்றி என ஆங்கிலத்தில்(தேங்க்ஸ்) உரைத்துவிட்டு அமர்ந்துக் கொண்டேன்,அவர் மடியில் அமர்ந்திருந்த 2  வயதுக் குழந்தை கையால் என்னை  தடவியது,பூக்கள் கூட தோற்றுத்தான் போகும் குழந்தையின் மெல்லிய வருடல் முன் என
கவித்துவமாக மனதுக்குள் எண்ணிக் கொண்டேன்,சற்றே என் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் ஒவொருவராக பேசத் தொடங்கினர்,எல்லோர் அறிமுகப் படலமும் முடிந்தது ஒரே கேள்விக் கணையுடன் எல்லோரும் என்னை பார்பதாகத்  தோன்றியது எனக்கு ,நான் தஞ்சாவூர் அரியலூர்ல இறங்கனும்  என்றேன் .பிறகு  வந்த அணைத்து கணைகளுக்கும் பதில்  கொடுக்க வேண்டியதாய் போனது வேறு கதை .எனக்கு எதிரே மதுரை என்று சொன்ன மனிதர் ராணுவ உடை அணிந்திருந்தார் ,எனக்கு ஒரே ஆர்வம் யாரவது அவரை கேள்வி கேட்க மாட்டார்களா? என,இறுதியாக
 ஒரு வயதானவர் கேட்டார் ஏம்பா
மிலிட்டரியா ?இப்ப என்ன லீவா? என்றார்.  ஆமாம் என்றார் அந்த மனிதர்.மேலும் 5 வருடத்திற்கு பிறகு  போகிறேன் என்றார் அவர் ,தனது சட்டை பையிலிருந்து ஒரு குழந்தையின்  புகைப்படத்தை காட்டினார் என் பெண் என்றார்.அழகா இருக்கு இப்போ  பிறந்திருக்கா என்றேன் நான் .,சிரித்துக் கொண்டே சொன்னார் எனக்கும் அப்படிதான் இருக்கு இப்போ  பிறந்தது போல் என சொல்ல ..அனைவரும் அவரையே பார்த்தோம் , ஆமாம் பிறந்த அன்னைக்கு பார்த்தேன் இபோ 5  வயசு, மனமெல்லாம் அவள் நினைவுதான் என்றார்  அலுங்காமல்.ஒரு  நிமிடம் அனைவரும் அவரை பாசத்தோடு பார்த்தோம் .5 வருஷம் பொறுத்துட்டீங்க  இன்னும் 5 மணி நேரம்தான் என்றேன் நான்,சிரித்துக் கொண்டார்.வாரம், வாரம் தொலை பேசியில் அப்பா அப்பா என மூச்சுக்கு முந்நூறு தடவை பேசுவாள் ,அவளை பார்ப்பதை நினைக்கவே அப்படி இருக்கிறது எனக் கூறி மனிதர் எங்களையும் சிலிர்க்க வைத்தார்.எல்லாம் பேசி முடிப்பதற்குள் எனக்கு அரியலூர் வந்து விட்டது.எல்லோருக்கும் விடை  சொல்லிவிட்டு  புறப்படஆயத்தப்பட்டேன்... என் அருகில் அமர்ந்திருந்த தாய் சொன்னார் எனக்கும் பாரதியார் கவிதைனா  ரொம்ப பிடிக்கும் என ,நான் மனதுக்குள் பாரதிக்கு நன்றி கூறிக்கொண்டேன் அவர் புண்ணியத்தில் இடம் கிடைத்ததற்கு .
பின் அந்த பிள்ளையை பார்த்த அப்பா எப்படி மகிழ்வார் என எண்ணிக் கொண்டே தஞ்சாவூர் பேருந்தை பிடித்தேன் . இந்த முறை அம்மா ,அப்பாவிடம் கூறாமல் செல்லும் ரகசியப் பயணமாதலால் அவர்களைக் காண ஒவ்வொரு  நொடியும் யுகமாக கழிந்தது  .ஒருவழியாக வீட்டுக்கு வருகையில் மணி இரவு 9 .30  ஆகி இருந்தது ,மெதுவாக வாசற்கதவை திறந்துக் கொண்டு ,அழைப்பு மணியை அழுத்தி விட்டு ஒளிந்துக் கொண்டேன் .அப்பத்தான் வந்தார் சட்டென்று எதிரே வந்து நின்ற என்னைக்  கண்டதும் என்னடா குட்டி? சொல்லாம கொள்ளாம,எப்படி டா  தனியா வந்த பஸ்லேர்ந்து இறங்கி?  என்று சொல்லிக் கொண்டே
 அணைத்துக் கொண்டார், வார்த்தை எழாமல் .மாதம் 2  முறை பார்க்கும் அப்பாவின் பூரிப்பே இப்படி என்றால் அந்தக்  குழந்தையின் தகப்பனின் நிலையை  எண்ணிக் கொண்டு ,அப்பாவைக் கொஞ்சி கொண்டே, வீட்டினுள் இருக்கும் அம்மாவைத் தேடிப் போனேன் .இது  போல் எத்தனை அப்பக்களோ எல்லையில் நமக்காக சொந்த பந்தத்தை எல்லாம்  விட்டு விட்டு என மனதுக்குள் எண்ணம் அலையாய் எழுந்து ஓய்ந்தது .