10/16/19

           பறையிசை

திசையெட்டும் கொட்டி வரும் -நாம் 
திமிறி எழ ஒலி  தெறிக்கும் !
தீரமிங்கே எழுந்து நிற்கும் -உன்னிசை கேட்டால் 
கோழைக்கும் வீரம் பிறக்கும் !
பண்டைய தமிழரின் வீர முழக்கம் நீ ,
பாங்காய் இசைக்கப்படும் 
எமது பண்பாட்டு சின்னமும் நீ !-
பறையிசை இடி போல், இனியும் முழங்கட்டும் !
வாழ்க தமிழ் ! வளர்க பறையிசை!


                       பாரதத்  தாயின் பிள்ளைகள் நாம் !


தாய் மண்ணே!

முக்கால் கடலையும் ஒரு கால் நிலத்தையும் கொண்டாய்


காலம் செய்த கோலம் தெரியுமா? உனக்கு ! -இன்று

தண்ணீரை  அடைத்து வைத்து

தகிடுதத்தம் ஆடுகின்றது   மாக்கள் கூட்டம் ...

தண்ணீரை தாரை வார்க்க

தாரை தாரையாய் கண்ணீர்  அங்கே !

ஊரெல்லாம் வெள்ளம் வந்து ஓராண்டு ஆகவில்லை ...

ஓடும் நீரை உருப்படி செய்ய ஒரு

 ஏரி , குளம் விடவும் இல்லை இங்கே !-இப்படியாய்

மாடியை கட்டி மண்ணாய் போன உன்  மக்கள் -அண்டை

மாநிலத்தோடு தண்ணீர் போராட்டம்

 செய்வதென்ன பெருங்கொடுமை!- அன்னையே

நீ பொங்கி வந்தால் என்ன செய்யும்

 தண்ணீர் அடைக்கும் கூட்டம் -இன்று

தராத தண்ணீர் என்றும் வேண்டாம் என்றால்

எங்கு செல்வர் மக்களைக்  காக்க ?

இமயம் முதல் குமாரி வரை

இருப்பதெல்லாம் உன் பிள்ளைகள்  !

அண்டை வீட்டாரெல்லாம்  இன்று

கூடி நின்று பார்க்கின்றனர் !...

சொந்த வீட்டுக்குள் உன் மக்களுக்கென்ன

பிரிவினைப்  போராட்டம் ?

ஒன்றுபட்டு பிரிவினை அகற்றி !

ஒற்றுமையால்  உயர்ந்து காட்டி

உன் பிள்ளைகள் நாங்களெல்லாம்

என்று சொல்லும் காலம் என்று ?

அமைதியாய்க்  காத்து நிற்கும் அன்னையே !

உன்னோடுக்  காத்து நிற்கும்

கயமையில்லாக் கூட்டம் இங்கே....

காலத்தின்  மேல் பழியைப்  போட்டு

கடந்து செல்கின்றோம்  நல்  வழி நோக்கி !!



அப்துல் கலாம் என்னும் அறிய மனிதர் !


  1.           

           அப்துல் கலாம் என்னும் அறிய மனிதர் !

     அன்பினால் அகிலத்தை ஆளும் அதிசயமே -நீ
     அணுவைப் பிளக்கும் போது
      நாங்கள் அறியவில்லை -எங்கள்
     ஆழ்  மனதில்  அமரப் போவது நீ என்று.!!

      2020 இல் உன் பாரதத்தைக்  காண
      கனவு கண்டாயோ !
      காலன்  மிகவும் கல் நெஞ்சக் காரன்
      உன்னைக்  கணப் பொழுதில்
      கரைத்து விட்டான் காற்றோடு!

      அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை
      நீ விண்ணுலகிற்கு  போகும் முன்னே -  உன்னைப் போல்
      பல நூறு அப்துல் கலாம்களை
      உருவாக்கி விட்டாய் எனவும்!
      அவர்கள் உன் கனவை  நோக்கி
      ஓடிக் கொண்டிருகிறார்கள் எனவும்!

      உமக்கு கோபமே வராதாம்
      உம்மோடு பழகியவர் சொன்னார் !
      அந்த ஆண்டவனே -
      ஆத்திரத்தில் அண்டத்தையே
       ஆட வைக்கையில் -அடடா ...!!
       உம்மை மட்டும் எந்த
       சூத்திரத்தைக் கொண்டய்யா
      படைத்தான் அவன் ?!!!

       அதனால்தானோ  உன்னை
       ஆண்டவானுக்கும் மேல்  -நம்
       அன்னை தேசம் வணங்குகின்றது ?!!!
        உம் பூவுடளுக்குதானய்யா உறக்கம்
        உமக்குத்  தெரியுமா???-நீர்
        பூவுலகில் விதைத்த விதைகளெல்லாம்
        முளைக்க ஆரம்பித்து விட்டன
        அன்னை தேசத்தின்
       அதிசயப் புதல்வனே !
        அன்பின் ,அடக்கத்தின்
        ஆதிப் பொருளே !
         உமது கனவுகளை  இனி
        எமது கண்களில்  காணுவோம்  !
        உமது ஆசைகளை இனி
        எமது நெஞ்சத்தில் சுமப்போம் !
        உம்மைப் போல் பிற நலம் கருதி
        வாழ முற்படுவோம் !
         தாய் மண்ணே வணக்கம் !
       

         
       

     
   


     


 





வீறு கொண்டு எழுந்து நிற்கும் தமிழா !

தரணிஎல்லாம் நோக்க  நின்றாய் !
தாய் மண்ணின் வீரத்தை மீட்க வந்தாய் !
திக்கெட்டும் தெறிக்க நிற்கும் தமிழா
தீக்கனல் திசை எரிக்க  வா   !

வீரத்தின் விளைநிலத்தில்
வீசி எறிந்த  விதை நீ !
வீறு கொண்டு எழுவாய் என 
வீணருக்கு தெரியவில்லை போலும் !
மாறு வேடம் பூண்ட மனிதக் களைகள் -அவர்கள் 
மாபெரும் தமிழர்  முன் 
மண்டியிடும்  நாள் அருகில்  !

வீறு கொண்டு எழுந்து நிற்கும் தமிழா !

தோள் கொடுக்க தோழர் உண்டு -இன்று 
அற வாள் எடுத்து வென்று வா நன்று !

சட்டமெல்லாம் சரித்திரத்திற்கு அப்பால் 
மட்டமான மனிதர் சிலர் செய்யும் 
மதி கெட்ட திட்டமெல்லாம் 
மாபெரும் மாநிலத்தின் மக்களிடம் இனி எதற்கு !

வீறு கொண்டு எழுந்து நிற்கும் தமிழா !

ஏறு தழுவி ஏற்றம் கண்ட நம்  கூட்டம் 
வீறு கொண்டு எழுந்ததிங்கே பாரீர் !
போரடித்து களம் நிறைத்த என் தமிழன் -இன்று 
போர்களத்தில் உழலுகின்றான் பாரீர் !

ஏறும் ,உழவும்  எங்கள் வாழ்க்கை
எதிர்த்து நிற்கும் கூட்டத்தை
வெல்வதே வேட்கை !

நாடு கடல் தாண்டி வந்த  தமிழர் நாங்கள்!
நாடி நின்ற போதுமிங்கே தமிழர் நாங்கள் !
வீரம் உண்டு! வேட்கை உண்டு !பகைவா
உன்னை வேரறுக்கும் போரைக் கொண்டோம் பகைவா !
வீழ்வதெங்கள் பழக்கமில்லை-உம்மை
வெல்லும் தூரம் தொலைவில் இல்லை  !



   

மனிதம்

                                                                             மனிதம்
மனிதா!

ஆதியிலே நீ இருந்தக்  காலம் நினைப்பாயோ ?
ஆறறிவும் ,ஐந்தறிவும்  அங்கமாய் திரிந்ததென்ன !
ஆடு,மாடு, கோழிகளுடன்  அடக்கமாய் வாழ்ந்ததென்ன !
பாதியிலே உனக்கு வந்த சோதனைதான் சாதி என்பேன் !
சாதி வந்த பிறகு நீயும்
சத்தியமாய் மனிதனல்ல !

உயர்ச்  சாதி குருதி இங்கு
சிவப்பாய் இருக்குமெனில் 
உன் சாதி அல்லானும்
செங்குருதி கொண்டவனே !-அதனை 
வெட்டி பார்த்தே உமக்கு  ஐயம் அகற்ற வேண்டி
பார் முழுதும் வெட்டியும் ,குத்தியும்
 பற்பல பாதகங்கள் நடத்துகிறாய்!

சாதி என்று வந்துவிட்டால்
பிள்ளையும் பிணக்காகிறார் !
நீதியை நீ  கொஞ்சமும் நினைந்தாயோ ?
கீழ்சாதியில் நீ பிறந்திருந்தால்
உன்  கதியும்  இதுதானே ?
புரிந்து நீயும் அமைதி கொள்!
மனிதனிடத்தில் அன்பு கொள்!
பகைவருக்கும் பரிவு காட்டு !
பணமிருந்தால் பகிர்ந்து கொடு !
மனம் மட்டுமே இருந்தால்
மகிழ்ந்து  இரு, மரிக்கும் வரை !
பதவி படைத்தவனும்,பணம்  படைத்தவனும் ,
கொண்டாடும் சாதி இது !
மனம் மட்டுமே படைத்த
 இல்லாதவன் பார்ப்பதில்லை!
மனிதா!
மனிதம் மட்டுமே -உன்னை
மனிதனாய் வாழ விடும்!
மனிதனாய் நில் !
மாநிலத்தை வெல் !



தமிழர்க் கூட்டம் !


தமிழோடு பிறந்து வந்த தமிழர்க் கூட்டம் -இது 

தமிழுக்காய் விழுந்து படும் மறவர்க் கூட்டம் !

தரணியெங்கும் தழைத்தோங்கும் தாய்த்தமிழே -உன்னை 

தலை குனிந்து வணங்கி நிற்கும் தமிழர்க் கூட்டம் !

தேசம் பல தேடி ஓடும் நதிகள்  நாங்கள் -எனினும் 

தெள்ளுத் தமிழ்க்  கடலில் சேரும் தமிழர் நாங்கள் !

நீதிக்கும், நேர்மைக்கும் பஞ்சமில்லை -இங்கு 

வீரமும் ,தீரமும் குறையவில்லை 

கொடையும் ,கொள்கையும் மறக்கவில்லை -இன்னும் 

பண்பும் ,பாசமும் மறையவில்லை 

ஆடைகள் சில ,பல மாறினாலும் -எங்களுள் 

ஆதியும் ,அந்தமும் அழியவில்லை 

தமிழோடு பிறந்து வந்த தமிழர்க் கூட்டம் -இது 

தமிழுக்காய் விழுந்து படும் மறவர்க் கூட்டம் !


நாவில் பல மொழிகளிங்கே நர்த்தனமாடும் -ஆனால் 

நாடியிலே தாய்த்தமிழின் குருதியே ஓடும் !

திரை கடல் ஓடியே திரவியம் தேடிய தீரன் -இவன் 

திக்கெங்கும் தமிழ் மணக்க திரவுகோளிட்ட வீரன் .

தமிழினையே காற்றாக்கி மூச்சிழுக்கும் தமிழன் -இவன் 

தமிழுக்காய் மூச்சிழுத்து தமிழ் வளர்க்கும் தமிழன் .

தமிழோடு பிறந்து வந்த தமிழர்க் கூட்டம் -இது 

தமிழுக்காய் விழுந்து படும் மறவர்க் கூட்டம் !


எத்திசையும் தமிழ் மணக்க எழுச்சி கொண்ட தமிழா 

என்றென்றும்  தமிழோடு துணிந்து நடை பயில்வாய்!

தொன்மையும் ,வளமையும் கொண்டிருக்கும் தமிழா 

தொய்வின்றி நீ  நின்று தமிழனாய் வாழ்வாய் !

ஒன்றிணைந்து உறுதிபட தமிழோடு வாழ்வோம்  -நாம் 

தமிழராய் நானிலத்தில் தலை நிமிர்ந்து மிளிர்வோம் .

தமிழோடு பிறந்து வந்த தமிழர்க் கூட்டம் -இது 

தமிழுக்காய் விழுந்து படும் மறவர்க் கூட்டம் !
                   



விழுதுகளில்லா ஆலமரங்கள் !

விழுதில்லா ஆலமரங்கள் !
ஒளியில்லா முழுநிலவுகள் !
அமைதியாய் ஆழ் மனதோடு
அழுதுக் கொண்டிருக்கும் ஆண்டவர்கள் !
கருவறையில் சுமக்கையிலே
கனவும் கூடக்  கண்டிறாள் -உன்
கல்யாணப் பந்தலிலே கூட
கற்பனையும் செய்திறாள் !
கட்டிகொண்டவள் மாற்றிவிட்டாள்  என்ற
 கடைநிலை கருத்துக்கு அர்த்தம் இல்லை
உன்னை பெற்றெடுத்தவர்  உனக்கல்லவோ
பெரியவராய்த்  தெரியவேண்டும் !
முத்தாய் மூன்று பிள்ளைகள்
சொத்தெல்லாம் அவர்கள்   பார்வையில்
 சொற்பமகி போக -
சிற்பமாய் செதுக்கினார்கள்
சிறுகல் அவர்களையும் !
பணம் சினமென்ற பேயிற்கு  முன்னே
மனம் குணம் எல்லாம் ஒளிந்து கொள்ளும்  காலமிது  !
அப்பனிடம் ஒன்றுமில்லை
ஆண்டியவன் அருகில் நின்றால்
பெர்பெரிய மனிதர் நம்மால்
நிற்பதற்கும் கூசுமல்லோ?
இப்படியும் மகன் நினைத்தான்
நிர்கதியாய்  விட்டு சென்றான் !
மாதமானால்
சொற்பமாய் பணங்கள் கொஞ்சம்
நிர்கதியற்ற  நடைப் பிணங்களுக்கு !
பெற்ற தாய் கொடுத்த தாய் பாலுக்கிங்கே
உற்ற விலையும்  அவன் கொடுத்தே விட்டானாம்
இனி ஒன்றும்கொடுப்பதற்கில்லை
என்னிடம் ஒன்றும்
எடுப்பதற்கில்லை என்கின்றரணன்  !
பெருஞ்சுமைகள் தங்கைகள்
விரும்பி நானும் பேசினால்
விலை கொடுக்க வேண்டி வரும்
ஆடி என்பர்,சீமந்தம் என்பர்,சீர் என்பர்,முறை என்பர்
நல்லதோர் முடிவு
உனக்கும் எனக்கும் ஒன்றுமில்லை இனி !
அன்று கதறி அழும்  தங்கையவள்
கண்ணீர் துடைத்து கையிலே சுமந்த அண்ணனுக்கு
காலம் உருண்டு காசு பையை நிறைத்தவுடன்
நடிகையாய் தெரிகிறாள் !
மரியாதை தரவில்லையாம்
குற்றங்கள் பல நிரூபிக்க பட்டதில்
 தண்டனை
பேச வேண்டாம் என்பதே!
தாயுமவள் புலம்புகின்றாள்
தாய்ப் பாலுக்கிங்கே
விலைக் கொடுத்த
தனயனவன்  என்பிள்ளை
தரணியிலே இப்படியோர்
 தங்கமகன் பிறந்ததில்லை !
முத்தாய்  மூன்றைப் பெற்றேன்
ஜான் பிள்ளை இது - என்
ஆண் பிள்ளை என்றே திளைத்தேன்
 இட்ட முட்டையை கோழி பார்ப்பதற்கு முன்
கோமகனின் தாட்டிலிட்டேன்
கோழியின் சாபமோ இது?
இப்படி ஓயாமல் காரணம்  தேடினாள்,
தங்கமகன் தமை மறந்து போனதற்கு !
மற்ற இரண்டும் ஆணாயிருக்க கூடாதா
அந்திமாக் காலம் அவஸ்தை இல்லையே !
ஒன்றை பெற்றதற்கே ஓலமிட்டு அழுகையிலே
மற்றிரண்டும் உனக்கெதற்கு ஒப்பாரியை  பெருக்கிடவோ ?
மாதா ,பிதா ,குரு ,தெய்வம்
மறந்தனன்  மானுடன் இங்கே !
பெற்றவனெல்லாம் பித்தனடி -இங்கு சில
பிள்ளைகளெல்லாம்  எத்தனடி !
சொத்தெல்லாம் பிள்ளை என்றாய்  -இன்று
வெற்றாய் இருக்கும் அப்பா
வேண்டாம் என்கிறது அப்பிள்ளை !
பொழுதெல்லாம் கடவுள் முன்னே
கடைசி காலம் கண்முன் தெரிவதற்குள்ளே,
சேர வேண்டும் மகன் தம்முடன்
கோரிக்கை மட்டும் இது ஒன்றே !
வேண்டுகிறேன் நானும் இங்கே
பிள்ளைகளே புரிந்திருங்கள்
வீட்டிலே தெய்வங்கள் இருக்க
கோவிலுக்கு நீங்களும்  சென்றால்
நன்றாய் உற்றுப் பாருங்கள்
கடவுள் உங்களைப்  பார்த்து
கை கொட்டி சிரிப்பார் !-நீ
உண்ணும் போதோ உறங்கும் போதோ
எண்ணும் போதோ எழுதும் போதோ
விழும் போதோ எழும் போதோ
தப்பி தவறி எப்போதேனும்
உங்கள்  உணர்வில் - உங்களை
உலகிற்கு அளித்தவர் வந்தார் எனில்
உணர்ந்துக் கொள்ளுங்கள் -அவர்கள் இப்போது
விழுதுகளில்லா ஆலமரங்கள்!!!!!!!!!



























கள்ளமில்லா மொட்டுகளின் கண்ணீர் காவியம்

                               கள்ளமில்லா மொட்டுகளின் கண்ணீர் காவியம்

கண்ணேக்  கண்மணியே
கட்டிக்கரும்பே  என
காணா  தேசத்தில் இருக்கும்
தாய்க் கண்ணீர் வடிக்கிறேனடி !

கண்ணாய் வளர்த்த தாயவள்
கதறும் காட்சி கண்முன் வருகுதடி !
அழகிய மலரே உன்னை அலற வைத்த
காமுகனை நஞ்சென  சொல்லேனடி
அவன் நஞ்சை உமிழும் நச்சுப் பாம்படி !
குப்புற படுத்தாலும் அழுகைக்
குமுறிக்  கொண்டு வருகுதடி !
எப்படி மிரண்டிருப்பாய் ,கதறியிருப்பாய்  ,கத்தியிருப்பாய்
இப்படி பட்டியல் போட்டாலும் கூட
இப்பாருலகம் அவர்களைப்  பாராமல் போகுமடி !

பொத்தி பொத்தி
 பொம்மையோடு பொம்மையாய்
வைத்திருந்த புதையலே!
உன்னைத்  தெருநாய் கடித்ததென்று
கண்ணைத்  துடை!

உலகமெனும் தோட்டத்தில்
உதித்து வந்த மொட்டுகள் நீங்கள் !
அழகாய் அம்மா கை பிடித்து
ஆர்வமாய் அழகு நடை போட்டு
வேண்டியதை அப்பாவிடம் கேட்டு
 வேண்டாமென்றால் வேதனை காட்டி
தாத்தாவுடன்  போய் வங்கி வந்து
பாட்டியிடம் காட்டிப்  பெருமை படும்
கள்ளமில்லாக் குழந்தைகள்  நீங்கள் !

 கீழே விழுந்தால்,அழுவதும் -உடன்
மேலே போகும் காத்தாடிப் பார்த்து
சிரித்து  எழுவதும்,
அம்மாவைக்  கட்டியணைத்தபடி
அப்பாவும் நோகாமல் அவருக்கும்
ஒரு கால் தந்தபடி தூங்கும்
அழகுச் சிற்பங்கள் நீங்கள் !

நல்லவர்களுக்கு அப்பாற்பட்ட
ஆண்களே உங்களுக்கு ஒரு கேள்வி
உங்களைப் பார்த்தால்
அவர்களுக்கு  அப்பாவாகவும்
தாத்தாவாகவும் ,அண்ணனாகவும் ,மாமாவாகவும்
தான் தெரிகிறீர்கள் -உங்களுக்கு
எந்தக் கோணத்திலுமே
குழந்தையாக ,தங்கையாக,பேத்தியாக
தெரிவதில்லையா அவர்கள் ?

இளம் மொட்டுக்களை
 கசக்கிபோடும் நீங்களெல்லாம்
ஓரறிவுக் கூட  இல்லா சதைப்பிண்டங்கள்

இறைவன் என்றொருவன்
இங்கே இருந்தால் நீங்களெல்லாம்
இல்லாமல் போக வேண்டும் !
கடவுள் என்றொருவன்
இங்கே இருந்தால் நீங்களெல்லாம்
காணாமல் போக வேண்டும் !
நீதி என்றொன்று இங்கே இருந்தால்
 நீங்களெல்லாம் நிர்மூலமாக வேண்டும் !

இவையெல்லாம்,
ஒரு தாயின் சாபம் மட்டுமல்ல - மாறாக
கள்ளமில்லா மொட்டுகளுக்காக
வரையப்பட்ட
கண்ணீர்க் காவியம் !!








அன்புள்ள அப்பா .

அன்புள்ள அப்பா .

நெஞ்சுக்குள் உங்கள்  நினைவுகள் பல
நீக்க முடியா நினைவுச் சருகுகளாய் !
முன்னே கால் பதிக்கும் அத்தனை அடியும்-மனதுக்குள்  
உங்களோடு  கைகோர்த்துக்கொண்டே!

ஐயிரண்டு மாதங்கள் கருவில் சுமக்கவில்லை -உங்கள் 
மனதிலல்லவா சுமந்தீர் !

அழும் பொழுதெல்லாம் அரவணைத்தீர் !
விழும் பொழுதெல்லாம் மனம் துடித்தீர்!

கரம் பிடித்து உலகம் காட்டினீர்!-எனக்கு
சுரம் என்றால் தூக்கம் விரட்டினீர் !

அகலாத  ஆயிரம்  நினைவுகள்!

 பொய்யாய் தூங்குவேன்
நீங்கள் கொஞ்ச வேண்டுமென!

ஓடி ஒளிந்து கொள்வேன்
என்னை  வாரி அணைக்க வேண்டுமென!-இடைவிடா 
வேலையிலும்  வாடாமல் 
பள்ளிக்குக் கொண்டுவிடும்
உங்கள்  பொறுமை,
எனக்கென வரும்போதுதான் தெரிகிறது
 உங்கள் அருமை!

உங்களால் மட்டுமே முடியும்!,
அப்பா அப்பா என ஆயிரம் முறை கூப்பிட்டாலும்
ம்... போட!

எனது உலகில்
ஆயிரம் திட்டினாலும் அடுத்த நொடி அணைப்பது
நீங்கள் மட்டுமே!
பிரியும் பொழுதெல்லாம்
மனமில்லை  பிரிவதற்கு
ஆனாலும் பிரிகிறேன் அசைபோட
அடிமனதில் ஆயிரம்  நினைவுகள்
உள்ள நம்பிக்கையில்!
நித்தம் நித்தம் நினைத்துக் கொள்கிறேன்
அடுத்த  பிறப்பு  அவசியம் !  
அதிலும் அப்பாவாக நீங்கள் வருவதாயிருந்தால்!





அன்று,

வெள்ளையரை  வெளியேற்ற  
வேட்கை கொண்டு எழுந்தோம்
வீரத்தின் விளைநிலத்தில்
வெற்றிகனிகள் பறித்தோம்

இன்றோ,

கொள்ளையர்கள் நம்மில்
கொக்கரித்தத்  திரிகின்றனர்!
நம் உணவை தின்று நம்மை
உண்ணாவிரதம் இருக்கச்  செய்கின்றனர் .

ஒருபுறம்,

தம்மை  இம்சித்து
அகிம்சை வளர்க்கும் அன்ன ஹசாரேக்கள்!

தத்தளிக்கும் மனிதநேயம்
தலை தூக்கும் தனிமனித விமர்சனம்
அடக்கிப்  பார்க்கும் அதிகாரங்கள்
அசைத்துப்  பார்க்கும் அதிகாரிகள்-கை
கொட்டி சிரிக்கும் பெருந்தலைகள்-இவையெல்லாம்
தொடக் கூட முடியவில்லை
தொடங்கியது தர்ம யுத்தம் !

மறுபுறம் ,

 பணந்தின்னிக்  கூட்டமவை
இனம் அறியா ஈசலவை
அன்பில்லா உயிர்கள் அவை
 பண்பில்லா விஷ பயிர்கள் அவை
நீட்டி முழக்கி கொடுத்த
 நீள விளக்கமெல்லாம் -நம்
 செவியை நோக்கிக் கூட
வர மறுத்து
நொடியிலே பொசுங்கியது !
மூன்று வேலை உன்று வந்து
முடித்துக் கொள் உண்ணாவிரதம்-என
மூக்கால் அழுது நின்று
முடியாமல் முழிபிதுங்கும்
முதல் மரியாதை ஆத்மாக்களே!
கேட்டதை கொடுத்து விட்டால்
 கூண்டோடு கைலாசம் என
குமுறி நிற்கும் கூட்டங்களே!  

 நாணயத்திற்கு எத்தனை  பக்கம் என
நாணமில்லாமல் கேட்கும்
நல்லவர்கள் நீங்கள்!
நல்ல சட்டம் கொண்டு வர
நாட்டு சட்டம் இடம் தராது எனக் கூறும்
வல்லவர்கள் நீங்கள்!

உள்ளதைச்  சுரண்டும்
ஊழல் பெருச்சாளிகள்!
உழைப்பவரை உருக்கும்
லஞ்சத்தின் லட்சாதிபதிகள்!
இவரெல்லாம் ,
வளர்ந்தது நம்மால்
வாழ்வது நம்மால்
லஞ்சம் கொடுத்த நாமும்
வெட்கித்தான் ஆக வேண்டும் !

போனது போகட்டும் ,
இனி ஒரு  புரட்சி செய்வோம் ,
நேர்மை தழைக்கச்  செய்வோம்,
 நாணயம் துளிர்க்க செய்வோம்,
உண்ணாமல் உருகிக்  கிடப்போருக்கு
ஊக்கமாய் இருப்போம்-தனி
தாக்கத்தைக் கொணர்வோம்!
கத்தியின்றி ரத்தமின்றி
அகிம்சையிலே ஜெயிப்போம் !
கரை படிந்த கைகளுக்கு
கண்டனத்தை வைப்போம் !
உணமையை வளர்ப்போம்!-அதுவரை
ஊணுறக்கம் மறப்போம் !

வாழ்க இந்தியா !வளர்க இந்தியன் நேர்மை!













  




முதுவேனிர்க்கால முகில்கள்

முதுவேனிற் கால  முகில்கள் 

            வணக்கம் வசந்தமலர் அன்பர்களே ! பனி காலம் நம்மை வாட்டி எடுக்கும் போதெல்லாம் நம் நினைவிலே வந்து நின்றுவிட்டு போன கோடைதான் இப்பொது நாம்மோடு உறவாடிக் கொண்டுள்ளது .இந்த வெய்யிலின் கத கதப்போடு  நமது சங்ககாலக்  கோடையை பற்றி பார்க்கலாம் வாருங்கள்!
                    சங்ககாலத்தில் கோடைக்காலம் என்பது முதுவேனிற்  காலம் என வழங்கப்பட்டு வந்தது ,தொல்காப்பியர், காலத்தை பெரும்பொழுது என்றும் சிறுபொழுது என்றும் இரண்டாக வகைப்படுத்தி கூறியுள்ளார் ,இதனை


‘‘பெரும்பொழுதென்றா சிறுபொழுதென்றா


இரண்டு கூற்றத் தியம்பிய பொழுதே’’

என்று நம்பியகப்பொருள் நூற்பா மொழிகிறது

                    ஒரு ஆண்டுக்குப் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. இவை இரண்டிரண்டு மாதங்களாகப் பகுக்கப்பட்டு பெரும்பொழுது என்று சொல்லப்படும். அவையாவன , கார்காலம் ,கூதிர்க் காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம் ,இளவேனிற்காலம்,முதுவேனிற்காலம் என ஆறு வகைப்படும் .சிறுபொழுது என்பது ஒரு நாளை ஆறு பிரிவுகளாகப் பிரித்துக் கணக்கிடப்படும் காலமாகும். இது வைகறை,விடியல்,நண்பகல்,எற்பாடு, (பிற்பகல்) ,மாலை,யாமம் (நள்ளிரவு),எனப் பிரிக்கப்படும்.



சித்திரை, வைகாசி - இளவேனில்

ஆனி, ஆடி - முதுவேனில்

ஆவணி, புரட்டாசி - கார்காலம்

ஐப்பசி, கார;த்திகை - கூதிர்காலம்

மார்கழி, தை - முன்பனிக்காலம்

மாசி, பங்குனி - பின்பனிக்காலம்

என அறுவகைப் பருவமாகப் பகுத்துக் கூறுகின்றனர்.

"நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே "

பொருள்:

நடுவு நிலைத் திணையாகிய  பாலையாவது நண்பகற்பொழுது
வேனிர்க் காலத்தோடு புணர்ந்து நின்ற வழிக் கருதிய
நெறியை உடைத்து .

              இத்தகைய இனிமையான முதுவேனிர்க் காலத்தில் நமது பழந்தமிழகமும்,தமிழர்களும் எவ்வாறெல்லாம் வாழ்ந்தனர் என்பதை நமது இலக்கியங்கள் நமக்கு பறை சாற்றுபவையாக இருந்து வருகின்றது .இந்த முதுவேனிர்க் கால முகில்கள் கார் முகில்கலாக பல சமயம் இருந்து நம்மை குளிர்விக்க வேண்டுமென்ற ஆசையுடன் இக்கட்டுரையை முடிக்கிறேன்.

கொடுத்து வைத்த பிறவியடா நீ !

கொடுத்து வைத்த பிறவியடா நீ !
கவலை வருகிறதா? துடைத்தெறி,
கண்ணீர் வருகிறதா? சிரிக்கப்  பழகு, 
கோபம் வருகிறதா? குளிர்ந்து விடு ,
சிறிய வாழ்க்கை இது 
சினம் கொள்ளும் நேரத்தை
சிந்திக்க செலவிடு ,
பயம் கொள்ளும் நேரத்தை
பக்திக்காக செலவிடு ,
வாழ்க்கை சிறியது வாழ்ந்து பார்!

அதிகமாய் பேசுகிறவனிடம்
அமைதியாய் இருந்து விடு.
அடக்கமாய் பேசுகிறவனிடம்
இணக்கமாய் நடந்துக் கொள்.
அறிவாய் பேசுகிறவனிடம்
ஆர்வமாய் கற்றுக் கொள்!

கோபங்கள் ,தாபங்கள்
குரோதம் ,பழி
கர்வம் ,கயமை
நீயாய் கற்றுக் கொண்டது .
சரி பார்த்துக் கொள்
சான்றோரின் சரித்திரத்தில்
சரியில்லை என தெரியும் போது
முடிந்து விடும் வாழ்க்கை!

எனவே ,
வானிலே ஓடும் மேகமாய் இராதே
கலைத்து விடும் காற்று!
நீரிலே தோன்றும் நீர்குமிழியாய் இராதே
முடிந்துவிடும் வாழ்க்கை !

நிலவாய் இரு,
வளரலாம் ,தேயலாம்.
சூரியனாய் இரு,
உதிக்கலாம் ,மறையலாம்.

செடியிலிருந்து உதிரும்
பூக்கள் அழுவதில்லை
இருந்தவரை மனம் வீசிய பெருமையிலே !
பூவாய் இருந்து விடு
பூவுலகை வென்றுவிடு-ஏனெனில்
நீ கொடுத்து வைத்த பிறவியடா !






                                                    அம்மா நான் பேசுகிறேன்!(ஆட்டிசம் குழந்தைகளுக்கு சமர்ப்பணம்)


அம்மா நீ அழுதிடாதே !
அங்கம் வருத்தி புலம்பிடாதே !
ஆண்டவன் உனக்களித்த
அனிச்சை மலர் நான்!
வானின்று இறங்கி வந்த
வண்ண விண்மீன்  நான்!
வாடாமல் தினம் சிரிக்கும்
வாச  மலரும் நான்!
தேவதை நான் பிறந்த கணம்
பூரித்துப்  போனாய் ,
புது மலராய் எனை எடுத்து
புல்லரித்து நின்றாய் ,
தவழ்ந்து நானும் நடந்திடவே
தவாமாய் கிடந்தாய் ,
தத்தி  நானும் நடக்கையிலே
தடம் தாங்கினாய் ,

பூத்துக் குலுங்கும்
புதுமலராய் !
புல்லினில் படுத்துறங்கும்
பனித்துளியாய் !
மணல் தொட்டு ஓடி வரும்
வெண் அலையாய் !
ஆழியிலே அமிழ்ந்தெடுத்த
அழகிய முத்தாய் !
அணு அணுவாய் என்னை ரசித்து
ஆனந்தம் அடைந்தாய் !

பூமிக்கே நீ தந்த
தேவதை நான் !
சோதனைகள் பல தருவேன்
சொக்க வைக்கும் அழகியும்  நான்!
                   சிற்பமாய் வந்து நின்றேன்
                   உயிர் கொடுப்பதுன் பொறுப்பு !
                   பிறை நிலவாய் உனக்குதித்தேன்
                   முழுமையாக்கு உன் பொறுப்பு !
                 
பூக்களிடை மொட்டாய்  நானிருக்க
பூக்கும் நாள் தூரமில்லை
புன்னகை செய்திடு  !
வானிலிருக்கும்  இவ்விண்மீன்
ஒளிரும் நாள் தொலைவில் இல்லை
விழிகள் பூத்திரு !
                                            அம்மா..... அமுதூட்டு !
                                            அம்மா .....அள்ளியெடு !
                                            அம்மா ......அணைத்துக் கொள் !
                                            கன்னத்தில் முத்தமிடு !
                                            கனிவாய் பல கதை சொல்லு !
                                            இன்னும் பல வார்த்தையெல்லாம்
                                            சொல்லும் நாள் தூரமில்லை !
ஏங்கி நிற்கும் என் அம்மா
ஏக்கம் தீர்ப்பான் இறைவன் அவன்!
அந்த நாளும் விரைவில் வரும்-அது வரை
 அம்மா நீ அழுதிடாதே !!!!