10/16/19

           பறையிசை

திசையெட்டும் கொட்டி வரும் -நாம் 
திமிறி எழ ஒலி  தெறிக்கும் !
தீரமிங்கே எழுந்து நிற்கும் -உன்னிசை கேட்டால் 
கோழைக்கும் வீரம் பிறக்கும் !
பண்டைய தமிழரின் வீர முழக்கம் நீ ,
பாங்காய் இசைக்கப்படும் 
எமது பண்பாட்டு சின்னமும் நீ !-
பறையிசை இடி போல், இனியும் முழங்கட்டும் !
வாழ்க தமிழ் ! வளர்க பறையிசை!


                       பாரதத்  தாயின் பிள்ளைகள் நாம் !


தாய் மண்ணே!

முக்கால் கடலையும் ஒரு கால் நிலத்தையும் கொண்டாய்


காலம் செய்த கோலம் தெரியுமா? உனக்கு ! -இன்று

தண்ணீரை  அடைத்து வைத்து

தகிடுதத்தம் ஆடுகின்றது   மாக்கள் கூட்டம் ...

தண்ணீரை தாரை வார்க்க

தாரை தாரையாய் கண்ணீர்  அங்கே !

ஊரெல்லாம் வெள்ளம் வந்து ஓராண்டு ஆகவில்லை ...

ஓடும் நீரை உருப்படி செய்ய ஒரு

 ஏரி , குளம் விடவும் இல்லை இங்கே !-இப்படியாய்

மாடியை கட்டி மண்ணாய் போன உன்  மக்கள் -அண்டை

மாநிலத்தோடு தண்ணீர் போராட்டம்

 செய்வதென்ன பெருங்கொடுமை!- அன்னையே

நீ பொங்கி வந்தால் என்ன செய்யும்

 தண்ணீர் அடைக்கும் கூட்டம் -இன்று

தராத தண்ணீர் என்றும் வேண்டாம் என்றால்

எங்கு செல்வர் மக்களைக்  காக்க ?

இமயம் முதல் குமாரி வரை

இருப்பதெல்லாம் உன் பிள்ளைகள்  !

அண்டை வீட்டாரெல்லாம்  இன்று

கூடி நின்று பார்க்கின்றனர் !...

சொந்த வீட்டுக்குள் உன் மக்களுக்கென்ன

பிரிவினைப்  போராட்டம் ?

ஒன்றுபட்டு பிரிவினை அகற்றி !

ஒற்றுமையால்  உயர்ந்து காட்டி

உன் பிள்ளைகள் நாங்களெல்லாம்

என்று சொல்லும் காலம் என்று ?

அமைதியாய்க்  காத்து நிற்கும் அன்னையே !

உன்னோடுக்  காத்து நிற்கும்

கயமையில்லாக் கூட்டம் இங்கே....

காலத்தின்  மேல் பழியைப்  போட்டு

கடந்து செல்கின்றோம்  நல்  வழி நோக்கி !!



அப்துல் கலாம் என்னும் அறிய மனிதர் !


  1.           

           அப்துல் கலாம் என்னும் அறிய மனிதர் !

     அன்பினால் அகிலத்தை ஆளும் அதிசயமே -நீ
     அணுவைப் பிளக்கும் போது
      நாங்கள் அறியவில்லை -எங்கள்
     ஆழ்  மனதில்  அமரப் போவது நீ என்று.!!

      2020 இல் உன் பாரதத்தைக்  காண
      கனவு கண்டாயோ !
      காலன்  மிகவும் கல் நெஞ்சக் காரன்
      உன்னைக்  கணப் பொழுதில்
      கரைத்து விட்டான் காற்றோடு!

      அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை
      நீ விண்ணுலகிற்கு  போகும் முன்னே -  உன்னைப் போல்
      பல நூறு அப்துல் கலாம்களை
      உருவாக்கி விட்டாய் எனவும்!
      அவர்கள் உன் கனவை  நோக்கி
      ஓடிக் கொண்டிருகிறார்கள் எனவும்!

      உமக்கு கோபமே வராதாம்
      உம்மோடு பழகியவர் சொன்னார் !
      அந்த ஆண்டவனே -
      ஆத்திரத்தில் அண்டத்தையே
       ஆட வைக்கையில் -அடடா ...!!
       உம்மை மட்டும் எந்த
       சூத்திரத்தைக் கொண்டய்யா
      படைத்தான் அவன் ?!!!

       அதனால்தானோ  உன்னை
       ஆண்டவானுக்கும் மேல்  -நம்
       அன்னை தேசம் வணங்குகின்றது ?!!!
        உம் பூவுடளுக்குதானய்யா உறக்கம்
        உமக்குத்  தெரியுமா???-நீர்
        பூவுலகில் விதைத்த விதைகளெல்லாம்
        முளைக்க ஆரம்பித்து விட்டன
        அன்னை தேசத்தின்
       அதிசயப் புதல்வனே !
        அன்பின் ,அடக்கத்தின்
        ஆதிப் பொருளே !
         உமது கனவுகளை  இனி
        எமது கண்களில்  காணுவோம்  !
        உமது ஆசைகளை இனி
        எமது நெஞ்சத்தில் சுமப்போம் !
        உம்மைப் போல் பிற நலம் கருதி
        வாழ முற்படுவோம் !
         தாய் மண்ணே வணக்கம் !
       

         
       

     
   


     


 





வீறு கொண்டு எழுந்து நிற்கும் தமிழா !

தரணிஎல்லாம் நோக்க  நின்றாய் !
தாய் மண்ணின் வீரத்தை மீட்க வந்தாய் !
திக்கெட்டும் தெறிக்க நிற்கும் தமிழா
தீக்கனல் திசை எரிக்க  வா   !

வீரத்தின் விளைநிலத்தில்
வீசி எறிந்த  விதை நீ !
வீறு கொண்டு எழுவாய் என 
வீணருக்கு தெரியவில்லை போலும் !
மாறு வேடம் பூண்ட மனிதக் களைகள் -அவர்கள் 
மாபெரும் தமிழர்  முன் 
மண்டியிடும்  நாள் அருகில்  !

வீறு கொண்டு எழுந்து நிற்கும் தமிழா !

தோள் கொடுக்க தோழர் உண்டு -இன்று 
அற வாள் எடுத்து வென்று வா நன்று !

சட்டமெல்லாம் சரித்திரத்திற்கு அப்பால் 
மட்டமான மனிதர் சிலர் செய்யும் 
மதி கெட்ட திட்டமெல்லாம் 
மாபெரும் மாநிலத்தின் மக்களிடம் இனி எதற்கு !

வீறு கொண்டு எழுந்து நிற்கும் தமிழா !

ஏறு தழுவி ஏற்றம் கண்ட நம்  கூட்டம் 
வீறு கொண்டு எழுந்ததிங்கே பாரீர் !
போரடித்து களம் நிறைத்த என் தமிழன் -இன்று 
போர்களத்தில் உழலுகின்றான் பாரீர் !

ஏறும் ,உழவும்  எங்கள் வாழ்க்கை
எதிர்த்து நிற்கும் கூட்டத்தை
வெல்வதே வேட்கை !

நாடு கடல் தாண்டி வந்த  தமிழர் நாங்கள்!
நாடி நின்ற போதுமிங்கே தமிழர் நாங்கள் !
வீரம் உண்டு! வேட்கை உண்டு !பகைவா
உன்னை வேரறுக்கும் போரைக் கொண்டோம் பகைவா !
வீழ்வதெங்கள் பழக்கமில்லை-உம்மை
வெல்லும் தூரம் தொலைவில் இல்லை  !



   

மனிதம்

                                                                             மனிதம்
மனிதா!

ஆதியிலே நீ இருந்தக்  காலம் நினைப்பாயோ ?
ஆறறிவும் ,ஐந்தறிவும்  அங்கமாய் திரிந்ததென்ன !
ஆடு,மாடு, கோழிகளுடன்  அடக்கமாய் வாழ்ந்ததென்ன !
பாதியிலே உனக்கு வந்த சோதனைதான் சாதி என்பேன் !
சாதி வந்த பிறகு நீயும்
சத்தியமாய் மனிதனல்ல !

உயர்ச்  சாதி குருதி இங்கு
சிவப்பாய் இருக்குமெனில் 
உன் சாதி அல்லானும்
செங்குருதி கொண்டவனே !-அதனை 
வெட்டி பார்த்தே உமக்கு  ஐயம் அகற்ற வேண்டி
பார் முழுதும் வெட்டியும் ,குத்தியும்
 பற்பல பாதகங்கள் நடத்துகிறாய்!

சாதி என்று வந்துவிட்டால்
பிள்ளையும் பிணக்காகிறார் !
நீதியை நீ  கொஞ்சமும் நினைந்தாயோ ?
கீழ்சாதியில் நீ பிறந்திருந்தால்
உன்  கதியும்  இதுதானே ?
புரிந்து நீயும் அமைதி கொள்!
மனிதனிடத்தில் அன்பு கொள்!
பகைவருக்கும் பரிவு காட்டு !
பணமிருந்தால் பகிர்ந்து கொடு !
மனம் மட்டுமே இருந்தால்
மகிழ்ந்து  இரு, மரிக்கும் வரை !
பதவி படைத்தவனும்,பணம்  படைத்தவனும் ,
கொண்டாடும் சாதி இது !
மனம் மட்டுமே படைத்த
 இல்லாதவன் பார்ப்பதில்லை!
மனிதா!
மனிதம் மட்டுமே -உன்னை
மனிதனாய் வாழ விடும்!
மனிதனாய் நில் !
மாநிலத்தை வெல் !



தமிழர்க் கூட்டம் !


தமிழோடு பிறந்து வந்த தமிழர்க் கூட்டம் -இது 

தமிழுக்காய் விழுந்து படும் மறவர்க் கூட்டம் !

தரணியெங்கும் தழைத்தோங்கும் தாய்த்தமிழே -உன்னை 

தலை குனிந்து வணங்கி நிற்கும் தமிழர்க் கூட்டம் !

தேசம் பல தேடி ஓடும் நதிகள்  நாங்கள் -எனினும் 

தெள்ளுத் தமிழ்க்  கடலில் சேரும் தமிழர் நாங்கள் !

நீதிக்கும், நேர்மைக்கும் பஞ்சமில்லை -இங்கு 

வீரமும் ,தீரமும் குறையவில்லை 

கொடையும் ,கொள்கையும் மறக்கவில்லை -இன்னும் 

பண்பும் ,பாசமும் மறையவில்லை 

ஆடைகள் சில ,பல மாறினாலும் -எங்களுள் 

ஆதியும் ,அந்தமும் அழியவில்லை 

தமிழோடு பிறந்து வந்த தமிழர்க் கூட்டம் -இது 

தமிழுக்காய் விழுந்து படும் மறவர்க் கூட்டம் !


நாவில் பல மொழிகளிங்கே நர்த்தனமாடும் -ஆனால் 

நாடியிலே தாய்த்தமிழின் குருதியே ஓடும் !

திரை கடல் ஓடியே திரவியம் தேடிய தீரன் -இவன் 

திக்கெங்கும் தமிழ் மணக்க திரவுகோளிட்ட வீரன் .

தமிழினையே காற்றாக்கி மூச்சிழுக்கும் தமிழன் -இவன் 

தமிழுக்காய் மூச்சிழுத்து தமிழ் வளர்க்கும் தமிழன் .

தமிழோடு பிறந்து வந்த தமிழர்க் கூட்டம் -இது 

தமிழுக்காய் விழுந்து படும் மறவர்க் கூட்டம் !


எத்திசையும் தமிழ் மணக்க எழுச்சி கொண்ட தமிழா 

என்றென்றும்  தமிழோடு துணிந்து நடை பயில்வாய்!

தொன்மையும் ,வளமையும் கொண்டிருக்கும் தமிழா 

தொய்வின்றி நீ  நின்று தமிழனாய் வாழ்வாய் !

ஒன்றிணைந்து உறுதிபட தமிழோடு வாழ்வோம்  -நாம் 

தமிழராய் நானிலத்தில் தலை நிமிர்ந்து மிளிர்வோம் .

தமிழோடு பிறந்து வந்த தமிழர்க் கூட்டம் -இது 

தமிழுக்காய் விழுந்து படும் மறவர்க் கூட்டம் !
                   



விழுதுகளில்லா ஆலமரங்கள் !

விழுதில்லா ஆலமரங்கள் !
ஒளியில்லா முழுநிலவுகள் !
அமைதியாய் ஆழ் மனதோடு
அழுதுக் கொண்டிருக்கும் ஆண்டவர்கள் !
கருவறையில் சுமக்கையிலே
கனவும் கூடக்  கண்டிறாள் -உன்
கல்யாணப் பந்தலிலே கூட
கற்பனையும் செய்திறாள் !
கட்டிகொண்டவள் மாற்றிவிட்டாள்  என்ற
 கடைநிலை கருத்துக்கு அர்த்தம் இல்லை
உன்னை பெற்றெடுத்தவர்  உனக்கல்லவோ
பெரியவராய்த்  தெரியவேண்டும் !
முத்தாய் மூன்று பிள்ளைகள்
சொத்தெல்லாம் அவர்கள்   பார்வையில்
 சொற்பமகி போக -
சிற்பமாய் செதுக்கினார்கள்
சிறுகல் அவர்களையும் !
பணம் சினமென்ற பேயிற்கு  முன்னே
மனம் குணம் எல்லாம் ஒளிந்து கொள்ளும்  காலமிது  !
அப்பனிடம் ஒன்றுமில்லை
ஆண்டியவன் அருகில் நின்றால்
பெர்பெரிய மனிதர் நம்மால்
நிற்பதற்கும் கூசுமல்லோ?
இப்படியும் மகன் நினைத்தான்
நிர்கதியாய்  விட்டு சென்றான் !
மாதமானால்
சொற்பமாய் பணங்கள் கொஞ்சம்
நிர்கதியற்ற  நடைப் பிணங்களுக்கு !
பெற்ற தாய் கொடுத்த தாய் பாலுக்கிங்கே
உற்ற விலையும்  அவன் கொடுத்தே விட்டானாம்
இனி ஒன்றும்கொடுப்பதற்கில்லை
என்னிடம் ஒன்றும்
எடுப்பதற்கில்லை என்கின்றரணன்  !
பெருஞ்சுமைகள் தங்கைகள்
விரும்பி நானும் பேசினால்
விலை கொடுக்க வேண்டி வரும்
ஆடி என்பர்,சீமந்தம் என்பர்,சீர் என்பர்,முறை என்பர்
நல்லதோர் முடிவு
உனக்கும் எனக்கும் ஒன்றுமில்லை இனி !
அன்று கதறி அழும்  தங்கையவள்
கண்ணீர் துடைத்து கையிலே சுமந்த அண்ணனுக்கு
காலம் உருண்டு காசு பையை நிறைத்தவுடன்
நடிகையாய் தெரிகிறாள் !
மரியாதை தரவில்லையாம்
குற்றங்கள் பல நிரூபிக்க பட்டதில்
 தண்டனை
பேச வேண்டாம் என்பதே!
தாயுமவள் புலம்புகின்றாள்
தாய்ப் பாலுக்கிங்கே
விலைக் கொடுத்த
தனயனவன்  என்பிள்ளை
தரணியிலே இப்படியோர்
 தங்கமகன் பிறந்ததில்லை !
முத்தாய்  மூன்றைப் பெற்றேன்
ஜான் பிள்ளை இது - என்
ஆண் பிள்ளை என்றே திளைத்தேன்
 இட்ட முட்டையை கோழி பார்ப்பதற்கு முன்
கோமகனின் தாட்டிலிட்டேன்
கோழியின் சாபமோ இது?
இப்படி ஓயாமல் காரணம்  தேடினாள்,
தங்கமகன் தமை மறந்து போனதற்கு !
மற்ற இரண்டும் ஆணாயிருக்க கூடாதா
அந்திமாக் காலம் அவஸ்தை இல்லையே !
ஒன்றை பெற்றதற்கே ஓலமிட்டு அழுகையிலே
மற்றிரண்டும் உனக்கெதற்கு ஒப்பாரியை  பெருக்கிடவோ ?
மாதா ,பிதா ,குரு ,தெய்வம்
மறந்தனன்  மானுடன் இங்கே !
பெற்றவனெல்லாம் பித்தனடி -இங்கு சில
பிள்ளைகளெல்லாம்  எத்தனடி !
சொத்தெல்லாம் பிள்ளை என்றாய்  -இன்று
வெற்றாய் இருக்கும் அப்பா
வேண்டாம் என்கிறது அப்பிள்ளை !
பொழுதெல்லாம் கடவுள் முன்னே
கடைசி காலம் கண்முன் தெரிவதற்குள்ளே,
சேர வேண்டும் மகன் தம்முடன்
கோரிக்கை மட்டும் இது ஒன்றே !
வேண்டுகிறேன் நானும் இங்கே
பிள்ளைகளே புரிந்திருங்கள்
வீட்டிலே தெய்வங்கள் இருக்க
கோவிலுக்கு நீங்களும்  சென்றால்
நன்றாய் உற்றுப் பாருங்கள்
கடவுள் உங்களைப்  பார்த்து
கை கொட்டி சிரிப்பார் !-நீ
உண்ணும் போதோ உறங்கும் போதோ
எண்ணும் போதோ எழுதும் போதோ
விழும் போதோ எழும் போதோ
தப்பி தவறி எப்போதேனும்
உங்கள்  உணர்வில் - உங்களை
உலகிற்கு அளித்தவர் வந்தார் எனில்
உணர்ந்துக் கொள்ளுங்கள் -அவர்கள் இப்போது
விழுதுகளில்லா ஆலமரங்கள்!!!!!!!!!



























கள்ளமில்லா மொட்டுகளின் கண்ணீர் காவியம்

                               கள்ளமில்லா மொட்டுகளின் கண்ணீர் காவியம்

கண்ணேக்  கண்மணியே
கட்டிக்கரும்பே  என
காணா  தேசத்தில் இருக்கும்
தாய்க் கண்ணீர் வடிக்கிறேனடி !

கண்ணாய் வளர்த்த தாயவள்
கதறும் காட்சி கண்முன் வருகுதடி !
அழகிய மலரே உன்னை அலற வைத்த
காமுகனை நஞ்சென  சொல்லேனடி
அவன் நஞ்சை உமிழும் நச்சுப் பாம்படி !
குப்புற படுத்தாலும் அழுகைக்
குமுறிக்  கொண்டு வருகுதடி !
எப்படி மிரண்டிருப்பாய் ,கதறியிருப்பாய்  ,கத்தியிருப்பாய்
இப்படி பட்டியல் போட்டாலும் கூட
இப்பாருலகம் அவர்களைப்  பாராமல் போகுமடி !

பொத்தி பொத்தி
 பொம்மையோடு பொம்மையாய்
வைத்திருந்த புதையலே!
உன்னைத்  தெருநாய் கடித்ததென்று
கண்ணைத்  துடை!

உலகமெனும் தோட்டத்தில்
உதித்து வந்த மொட்டுகள் நீங்கள் !
அழகாய் அம்மா கை பிடித்து
ஆர்வமாய் அழகு நடை போட்டு
வேண்டியதை அப்பாவிடம் கேட்டு
 வேண்டாமென்றால் வேதனை காட்டி
தாத்தாவுடன்  போய் வங்கி வந்து
பாட்டியிடம் காட்டிப்  பெருமை படும்
கள்ளமில்லாக் குழந்தைகள்  நீங்கள் !

 கீழே விழுந்தால்,அழுவதும் -உடன்
மேலே போகும் காத்தாடிப் பார்த்து
சிரித்து  எழுவதும்,
அம்மாவைக்  கட்டியணைத்தபடி
அப்பாவும் நோகாமல் அவருக்கும்
ஒரு கால் தந்தபடி தூங்கும்
அழகுச் சிற்பங்கள் நீங்கள் !

நல்லவர்களுக்கு அப்பாற்பட்ட
ஆண்களே உங்களுக்கு ஒரு கேள்வி
உங்களைப் பார்த்தால்
அவர்களுக்கு  அப்பாவாகவும்
தாத்தாவாகவும் ,அண்ணனாகவும் ,மாமாவாகவும்
தான் தெரிகிறீர்கள் -உங்களுக்கு
எந்தக் கோணத்திலுமே
குழந்தையாக ,தங்கையாக,பேத்தியாக
தெரிவதில்லையா அவர்கள் ?

இளம் மொட்டுக்களை
 கசக்கிபோடும் நீங்களெல்லாம்
ஓரறிவுக் கூட  இல்லா சதைப்பிண்டங்கள்

இறைவன் என்றொருவன்
இங்கே இருந்தால் நீங்களெல்லாம்
இல்லாமல் போக வேண்டும் !
கடவுள் என்றொருவன்
இங்கே இருந்தால் நீங்களெல்லாம்
காணாமல் போக வேண்டும் !
நீதி என்றொன்று இங்கே இருந்தால்
 நீங்களெல்லாம் நிர்மூலமாக வேண்டும் !

இவையெல்லாம்,
ஒரு தாயின் சாபம் மட்டுமல்ல - மாறாக
கள்ளமில்லா மொட்டுகளுக்காக
வரையப்பட்ட
கண்ணீர்க் காவியம் !!








அன்புள்ள அப்பா .

அன்புள்ள அப்பா .

நெஞ்சுக்குள் உங்கள்  நினைவுகள் பல
நீக்க முடியா நினைவுச் சருகுகளாய் !
முன்னே கால் பதிக்கும் அத்தனை அடியும்-மனதுக்குள்  
உங்களோடு  கைகோர்த்துக்கொண்டே!

ஐயிரண்டு மாதங்கள் கருவில் சுமக்கவில்லை -உங்கள் 
மனதிலல்லவா சுமந்தீர் !

அழும் பொழுதெல்லாம் அரவணைத்தீர் !
விழும் பொழுதெல்லாம் மனம் துடித்தீர்!

கரம் பிடித்து உலகம் காட்டினீர்!-எனக்கு
சுரம் என்றால் தூக்கம் விரட்டினீர் !

அகலாத  ஆயிரம்  நினைவுகள்!

 பொய்யாய் தூங்குவேன்
நீங்கள் கொஞ்ச வேண்டுமென!

ஓடி ஒளிந்து கொள்வேன்
என்னை  வாரி அணைக்க வேண்டுமென!-இடைவிடா 
வேலையிலும்  வாடாமல் 
பள்ளிக்குக் கொண்டுவிடும்
உங்கள்  பொறுமை,
எனக்கென வரும்போதுதான் தெரிகிறது
 உங்கள் அருமை!

உங்களால் மட்டுமே முடியும்!,
அப்பா அப்பா என ஆயிரம் முறை கூப்பிட்டாலும்
ம்... போட!

எனது உலகில்
ஆயிரம் திட்டினாலும் அடுத்த நொடி அணைப்பது
நீங்கள் மட்டுமே!
பிரியும் பொழுதெல்லாம்
மனமில்லை  பிரிவதற்கு
ஆனாலும் பிரிகிறேன் அசைபோட
அடிமனதில் ஆயிரம்  நினைவுகள்
உள்ள நம்பிக்கையில்!
நித்தம் நித்தம் நினைத்துக் கொள்கிறேன்
அடுத்த  பிறப்பு  அவசியம் !  
அதிலும் அப்பாவாக நீங்கள் வருவதாயிருந்தால்!





அன்று,

வெள்ளையரை  வெளியேற்ற  
வேட்கை கொண்டு எழுந்தோம்
வீரத்தின் விளைநிலத்தில்
வெற்றிகனிகள் பறித்தோம்

இன்றோ,

கொள்ளையர்கள் நம்மில்
கொக்கரித்தத்  திரிகின்றனர்!
நம் உணவை தின்று நம்மை
உண்ணாவிரதம் இருக்கச்  செய்கின்றனர் .

ஒருபுறம்,

தம்மை  இம்சித்து
அகிம்சை வளர்க்கும் அன்ன ஹசாரேக்கள்!

தத்தளிக்கும் மனிதநேயம்
தலை தூக்கும் தனிமனித விமர்சனம்
அடக்கிப்  பார்க்கும் அதிகாரங்கள்
அசைத்துப்  பார்க்கும் அதிகாரிகள்-கை
கொட்டி சிரிக்கும் பெருந்தலைகள்-இவையெல்லாம்
தொடக் கூட முடியவில்லை
தொடங்கியது தர்ம யுத்தம் !

மறுபுறம் ,

 பணந்தின்னிக்  கூட்டமவை
இனம் அறியா ஈசலவை
அன்பில்லா உயிர்கள் அவை
 பண்பில்லா விஷ பயிர்கள் அவை
நீட்டி முழக்கி கொடுத்த
 நீள விளக்கமெல்லாம் -நம்
 செவியை நோக்கிக் கூட
வர மறுத்து
நொடியிலே பொசுங்கியது !
மூன்று வேலை உன்று வந்து
முடித்துக் கொள் உண்ணாவிரதம்-என
மூக்கால் அழுது நின்று
முடியாமல் முழிபிதுங்கும்
முதல் மரியாதை ஆத்மாக்களே!
கேட்டதை கொடுத்து விட்டால்
 கூண்டோடு கைலாசம் என
குமுறி நிற்கும் கூட்டங்களே!  

 நாணயத்திற்கு எத்தனை  பக்கம் என
நாணமில்லாமல் கேட்கும்
நல்லவர்கள் நீங்கள்!
நல்ல சட்டம் கொண்டு வர
நாட்டு சட்டம் இடம் தராது எனக் கூறும்
வல்லவர்கள் நீங்கள்!

உள்ளதைச்  சுரண்டும்
ஊழல் பெருச்சாளிகள்!
உழைப்பவரை உருக்கும்
லஞ்சத்தின் லட்சாதிபதிகள்!
இவரெல்லாம் ,
வளர்ந்தது நம்மால்
வாழ்வது நம்மால்
லஞ்சம் கொடுத்த நாமும்
வெட்கித்தான் ஆக வேண்டும் !

போனது போகட்டும் ,
இனி ஒரு  புரட்சி செய்வோம் ,
நேர்மை தழைக்கச்  செய்வோம்,
 நாணயம் துளிர்க்க செய்வோம்,
உண்ணாமல் உருகிக்  கிடப்போருக்கு
ஊக்கமாய் இருப்போம்-தனி
தாக்கத்தைக் கொணர்வோம்!
கத்தியின்றி ரத்தமின்றி
அகிம்சையிலே ஜெயிப்போம் !
கரை படிந்த கைகளுக்கு
கண்டனத்தை வைப்போம் !
உணமையை வளர்ப்போம்!-அதுவரை
ஊணுறக்கம் மறப்போம் !

வாழ்க இந்தியா !வளர்க இந்தியன் நேர்மை!













  




முதுவேனிர்க்கால முகில்கள்

முதுவேனிற் கால  முகில்கள் 

            வணக்கம் வசந்தமலர் அன்பர்களே ! பனி காலம் நம்மை வாட்டி எடுக்கும் போதெல்லாம் நம் நினைவிலே வந்து நின்றுவிட்டு போன கோடைதான் இப்பொது நாம்மோடு உறவாடிக் கொண்டுள்ளது .இந்த வெய்யிலின் கத கதப்போடு  நமது சங்ககாலக்  கோடையை பற்றி பார்க்கலாம் வாருங்கள்!
                    சங்ககாலத்தில் கோடைக்காலம் என்பது முதுவேனிற்  காலம் என வழங்கப்பட்டு வந்தது ,தொல்காப்பியர், காலத்தை பெரும்பொழுது என்றும் சிறுபொழுது என்றும் இரண்டாக வகைப்படுத்தி கூறியுள்ளார் ,இதனை


‘‘பெரும்பொழுதென்றா சிறுபொழுதென்றா


இரண்டு கூற்றத் தியம்பிய பொழுதே’’

என்று நம்பியகப்பொருள் நூற்பா மொழிகிறது

                    ஒரு ஆண்டுக்குப் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. இவை இரண்டிரண்டு மாதங்களாகப் பகுக்கப்பட்டு பெரும்பொழுது என்று சொல்லப்படும். அவையாவன , கார்காலம் ,கூதிர்க் காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம் ,இளவேனிற்காலம்,முதுவேனிற்காலம் என ஆறு வகைப்படும் .சிறுபொழுது என்பது ஒரு நாளை ஆறு பிரிவுகளாகப் பிரித்துக் கணக்கிடப்படும் காலமாகும். இது வைகறை,விடியல்,நண்பகல்,எற்பாடு, (பிற்பகல்) ,மாலை,யாமம் (நள்ளிரவு),எனப் பிரிக்கப்படும்.



சித்திரை, வைகாசி - இளவேனில்

ஆனி, ஆடி - முதுவேனில்

ஆவணி, புரட்டாசி - கார்காலம்

ஐப்பசி, கார;த்திகை - கூதிர்காலம்

மார்கழி, தை - முன்பனிக்காலம்

மாசி, பங்குனி - பின்பனிக்காலம்

என அறுவகைப் பருவமாகப் பகுத்துக் கூறுகின்றனர்.

"நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே "

பொருள்:

நடுவு நிலைத் திணையாகிய  பாலையாவது நண்பகற்பொழுது
வேனிர்க் காலத்தோடு புணர்ந்து நின்ற வழிக் கருதிய
நெறியை உடைத்து .

              இத்தகைய இனிமையான முதுவேனிர்க் காலத்தில் நமது பழந்தமிழகமும்,தமிழர்களும் எவ்வாறெல்லாம் வாழ்ந்தனர் என்பதை நமது இலக்கியங்கள் நமக்கு பறை சாற்றுபவையாக இருந்து வருகின்றது .இந்த முதுவேனிர்க் கால முகில்கள் கார் முகில்கலாக பல சமயம் இருந்து நம்மை குளிர்விக்க வேண்டுமென்ற ஆசையுடன் இக்கட்டுரையை முடிக்கிறேன்.

கொடுத்து வைத்த பிறவியடா நீ !

கொடுத்து வைத்த பிறவியடா நீ !
கவலை வருகிறதா? துடைத்தெறி,
கண்ணீர் வருகிறதா? சிரிக்கப்  பழகு, 
கோபம் வருகிறதா? குளிர்ந்து விடு ,
சிறிய வாழ்க்கை இது 
சினம் கொள்ளும் நேரத்தை
சிந்திக்க செலவிடு ,
பயம் கொள்ளும் நேரத்தை
பக்திக்காக செலவிடு ,
வாழ்க்கை சிறியது வாழ்ந்து பார்!

அதிகமாய் பேசுகிறவனிடம்
அமைதியாய் இருந்து விடு.
அடக்கமாய் பேசுகிறவனிடம்
இணக்கமாய் நடந்துக் கொள்.
அறிவாய் பேசுகிறவனிடம்
ஆர்வமாய் கற்றுக் கொள்!

கோபங்கள் ,தாபங்கள்
குரோதம் ,பழி
கர்வம் ,கயமை
நீயாய் கற்றுக் கொண்டது .
சரி பார்த்துக் கொள்
சான்றோரின் சரித்திரத்தில்
சரியில்லை என தெரியும் போது
முடிந்து விடும் வாழ்க்கை!

எனவே ,
வானிலே ஓடும் மேகமாய் இராதே
கலைத்து விடும் காற்று!
நீரிலே தோன்றும் நீர்குமிழியாய் இராதே
முடிந்துவிடும் வாழ்க்கை !

நிலவாய் இரு,
வளரலாம் ,தேயலாம்.
சூரியனாய் இரு,
உதிக்கலாம் ,மறையலாம்.

செடியிலிருந்து உதிரும்
பூக்கள் அழுவதில்லை
இருந்தவரை மனம் வீசிய பெருமையிலே !
பூவாய் இருந்து விடு
பூவுலகை வென்றுவிடு-ஏனெனில்
நீ கொடுத்து வைத்த பிறவியடா !






                                                    அம்மா நான் பேசுகிறேன்!(ஆட்டிசம் குழந்தைகளுக்கு சமர்ப்பணம்)


அம்மா நீ அழுதிடாதே !
அங்கம் வருத்தி புலம்பிடாதே !
ஆண்டவன் உனக்களித்த
அனிச்சை மலர் நான்!
வானின்று இறங்கி வந்த
வண்ண விண்மீன்  நான்!
வாடாமல் தினம் சிரிக்கும்
வாச  மலரும் நான்!
தேவதை நான் பிறந்த கணம்
பூரித்துப்  போனாய் ,
புது மலராய் எனை எடுத்து
புல்லரித்து நின்றாய் ,
தவழ்ந்து நானும் நடந்திடவே
தவாமாய் கிடந்தாய் ,
தத்தி  நானும் நடக்கையிலே
தடம் தாங்கினாய் ,

பூத்துக் குலுங்கும்
புதுமலராய் !
புல்லினில் படுத்துறங்கும்
பனித்துளியாய் !
மணல் தொட்டு ஓடி வரும்
வெண் அலையாய் !
ஆழியிலே அமிழ்ந்தெடுத்த
அழகிய முத்தாய் !
அணு அணுவாய் என்னை ரசித்து
ஆனந்தம் அடைந்தாய் !

பூமிக்கே நீ தந்த
தேவதை நான் !
சோதனைகள் பல தருவேன்
சொக்க வைக்கும் அழகியும்  நான்!
                   சிற்பமாய் வந்து நின்றேன்
                   உயிர் கொடுப்பதுன் பொறுப்பு !
                   பிறை நிலவாய் உனக்குதித்தேன்
                   முழுமையாக்கு உன் பொறுப்பு !
                 
பூக்களிடை மொட்டாய்  நானிருக்க
பூக்கும் நாள் தூரமில்லை
புன்னகை செய்திடு  !
வானிலிருக்கும்  இவ்விண்மீன்
ஒளிரும் நாள் தொலைவில் இல்லை
விழிகள் பூத்திரு !
                                            அம்மா..... அமுதூட்டு !
                                            அம்மா .....அள்ளியெடு !
                                            அம்மா ......அணைத்துக் கொள் !
                                            கன்னத்தில் முத்தமிடு !
                                            கனிவாய் பல கதை சொல்லு !
                                            இன்னும் பல வார்த்தையெல்லாம்
                                            சொல்லும் நாள் தூரமில்லை !
ஏங்கி நிற்கும் என் அம்மா
ஏக்கம் தீர்ப்பான் இறைவன் அவன்!
அந்த நாளும் விரைவில் வரும்-அது வரை
 அம்மா நீ அழுதிடாதே !!!!




                 


8/22/19

                                                           பல்லைக்  காணோம்!

உலகத்திலேயே எனக்கு இப்போ பெரிய பயம் பேயோ,பிசாசோ ,என் வீட்டுக்காரோ இல்லை ,சில பொண்ணுங்க சொல்றது  போல கரப்பான் பூச்சி ,பல்லி ......ரொம்ப யோசிக்காதீங்க செய்திய  கேட்டா அடிக்க வந்தாலும் வருவீங்க !  என்னோட ஒரே  பயம் பல் வைத்தியர்  தான் ! என் பொண்ணு ஒவ்வொரு முறை பல் வைத்தியரிடம் போகும் போதும் ஒரே பயம் தான்.. அட அவளுக்கு இல்லங்க  எனக்குதான் !!
அவ அருகிலேயே நின்னு பார்ப்பேன் மருத்துவர் ஊசிய எடுத்தாரோ ! அந்த நிமிடம் நான் நின்ற இடத்தை காற்று தான் நிரப்பி கொண்டு இருக்கும் !இதோட ஐந்து, ஆறு முறை மருத்துவர் கிட்ட  போயாச்சு ,அவ புண்ணியத்துல கணவர் பல்லும் சரி பார்க்க பட்டாச்சு ,அடுத்து என் மகன் ஐயோ வேண்டாங்க அவன் பல் என்ன மாதிரியே, எதுவும் பிரச்சனை இல்லைனு சொன்ன அடுத்த நிமிஷம் அம்மா எனக்கும் வேணும்னு  மருத்துவர்  முன்னாடியே ஒரே போடா போட்டுட்டு குடு குடு குடுன்னு ஓடி போய் நாற்காலியில் அமர்ந்தது என்ன பார்த்து சிரிச்சான் !!
அட பாவி லாலிபாப் தரலடா அவங்க என மனசு சொல்ல ,மருத்துவர் "இவன் உங்கள போல இல்லங்க அப்பா போல திடமா இருக்கான் "என்றதும் ,மனதிற்குள்  கருவிக் கொண்டு ஆமாம் என்றேன் ! வேற வழி !!

இவ்வளவையும் ஏழு கடல் ஏழு மலை கடந்தது போல கடந்து வந்த எனக்கு வந்தது பெரிய சோதனை !!
வாயில எத வச்சாலும் எரிச்சல் ,இப்போவது கொஞ்சம் பேசறது  குறையும்னு வீட்டுக்காரர் மகிழ்ச்சியா இருந்தாலும் என் தொல்லை  தாங்காம மருத்துவரிடம் போயாச்சு! வழக்கம் போல அவர் என்ன ஆச்சுன்னு எல்லா கதையும் கேட்டுட்டு மருந்து எழுதுறப்பவே ,ஒரு வேளை அதா இருக்குமோ? டாக்டர் ,இல்ல இதா இருக்குமோ? என நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்,அவர் மெதுவா நிமிர்ந்து  பார்த்து எதுனாலன்னு சரியா தெரியலைம்மா!  ஏதா இருந்தாலும் இந்த மருந்தை 5 நாளைக்கு குடிங்க அப்புறம்... என்று அவர் சொன்ன வார்த்தையை கேட்ட எனக்கு மயக்கமே வந்திரும்  போல இருந்தது...ஆமாங்க, நீங்க நினைக்கிறது சரி தான் ...எதுக்கும் போய் பல் மருத்துவரை பாருங்க என்றாரே ,எனக்கு இடி மின்னல் மழை எல்லாம் ஒரே நேரத்தில் மனசுக்குள்ள வந்துருச்சு ,நம்ம வீட்டுல எல்லாருக்கும் நம்ம விஷயம் தெரிஞ்சு நண்டு ,சிண்டு எல்லாம் நம்மள பார்த்து சிரிக்குது என்ன செய்யறது ?,அடுத்த நாள் மருத்துவரை பார்க்க கிளம்பியாச்சு !!

ஊருக்கு திருவிழா பார்க்க போறது மாதிரி குடும்பமே போய்  இறங்கியாச்சு ,பரிட்சையில் படிக்காத பேப்பர் வந்தா ஒரு பயம் வருமே அத விட இது அதிகமா  தெரிஞ்சது,காத்திருக்கயிலேயே பல்லுல ஊசி போட்ட வழிக்குமாடா ?னு கேட்டா என் பொண்ணு அப்புறம்? எனக்கு போடும்போதெல்லாம் பார்த்திருந்தாத்தானே ,என அலுத்து கொண்டாள் !பின்  ரொம்ப வலிக்கும்மா என  சொல்ல ,என் முக மாறுதலை பார்க்க கணவருக்கே சகிக்கலை போல,அட சும்மா காட்ட தான் வந்திருக்கோம் ஊசி எல்லாம் இல்லை சும்மா இரு என்றார் !
என்ன இருந்தாலும் வீட்டுக்காரர் வீட்டுக்காரர் தானே,இந்த பிள்ளைங்க கிடக்கு என அவளை அலட்சியமாய் பார்க்க அவ தொலைபேசிக்குள்ளே தலையை விட்டு வெகு  நேரம் ஆச்சு போல!

கடைசியா மருத்துவர் என் முறை வந்தவுடனே சிரிச்ச சிரிப்பிலேயே, நல்லா  மாட்டிக்கிட்ட போல
என சொல்வது தெரிந்தது ...மருத்துவ உதவியாளர் உயரமான இருக்கையில் உட்கார வைத்து ஒரு சாய் சாய்த்து விட்டார் ,நமக்கு நம்ம ஊர் ராட்டினத்தில் ஊட்காருவதே பேய் பயம்,இதுவும் அதை போல தான் இருந்தது,வாயை நன்றாக திறக்க சொல்லி துணிக்கு போடும் கிளிப் மாதிரி வாய்க்குள்ள வச்சு கடிக்க சொல்லவும் ,ஏற்கனவே வாயெல்லாம் வலி இதில இது வேற என எண்ணிய எனக்கு கண்களில் நீரே வந்து விட்டது ,மிகவும் சிரமப்பட்டு எல்லா படமும் எடுத்தாயிற்று ,அடுத்த 5 நிமிடம் மாறி ,மாறி மருத்துவரும் உதவியாளரும் பேசிக்கொள்கிறார்கள் ,எனக்கு ஒரே குழப்பம் பல்லை தானே எக்ஸ்ரே எடுத்தாங்க இதில என்னப்பா ?என்று ,மருத்துவர் கேட்டார் உங்களுக்கு 31 பால்தான் இருக்கு விஸ்டம் டூத் எடுத்தீங்களா இதுக்கு முன்னாடி என்று ? இல்லங்க பிறந்ததிலிருந்து இதுதான் முதல் முறை பல் மருத்துவரிடம் நான் வருவது என்றேன்...நல்ல யோசிச்சு பாருங்க சிறு வயதில் எதாவது எடுத்தாங்களா?இல்ல டாக்டர் என்றேன்…

திரும்பவும் அவர்கள் இருவரும் கூடி பேசிக்கொண்டார்கள் ...ஆச்சர்யமா இருக்கே மீதி 3 அறிவு  பல்லும் உள்ள இருக்கு இனி அவை வளரும் ஆனா ? இந்த பல்லை மட்டும் காணோம் என்றார் ….
சும்மாவே நம்ம வீட்ல எல்லாரும் நம்ம அறிவை மெச்சுவாங்க  !! இதுல ஒரு விஸ்டம் டூத் இல்லனதும் எனக்கு சிரிப்பை அடக்க முடியலை ...அதோடு மருத்துவர் நான் இதுவரை 31 பல்லோடு ஒருத்தரை பார்த்ததில்லை ,...அதுவும் விஸ்டம் டூத் இல்லாமல் என்றார் !!! இதைக் குறிப்பதற்கு எங்கள் அட்டவணையில் ஒரு இடமே இல்லை எனவும் சொன்னார் !!! கடைசியில முப்பது வயசுக்கு மேலதான் ஒரு பல்லு  இல்லனு தெரிஞ்சுருக்கு என எண்ணும்போது  வரும் சிரிப்பை அடக்கி கொள்ள வேண்டியதாக இருந்தது ...எல்லாம் முடிஞ்சு ஒரு பல்லை காணோம்னு கண்டுபிடிச்சதுக்கு இவ்ளோ பெரிய தொகையா ?என எண்ணிக்கொண்டே கொடுத்து விட்டுவெளியே வந்து அடக்கி  வைத்த சிரிப்பெல்லாம் சிரித்தாயிற்று ….  இதுதாங்க இந்த பல்லை காணோம் கதை…





                                               கன்னுக்குட்டி - பிரதீபா பிரேம் .

ஆரவாரமில்லாத ஐப்பசி மழை ! நிற்காமல் தூவி கொண்டுதான் இருந்தது நான்கு நாட்களாக! மழைச்  சாரலில் , போர்த்திய கம்பளிக்குள் கலை மடக்கிக்  கொண்டு தூங்கும் தூக்கம் அடடா!!அம்முக்குட்டி கனவுலகில் மிதந்து கொண்டிருந்தாள்! தூறலின் இடையிலும் தனது கரத்தை நீட்டும் கதிரவனை அதட்டி விட்டு !!!

இரண்டு  நாளா இந்த மாடு படர பாடு தாங்க முடியல இன்னிக்கும் வேலைய கட்டிகிட்டு அழாம கொஞ்சம் மாட்டு டாக்டர வர சொல்லிட்டு போங்க ,அவரு பொண்டாட்டிய நேத்து பாத்தேன் வீட்டுல  மாடு ரொம்ப சொணங்கி இருக்கு அவர வந்துட்டு போக  சொல்லுங்கனேன் ,சொன்னாளோ? இல்லையோ? மகராசி ! அம்மா தாமரையின் சத்தம் இது !!!!         

காலையில காபிய கொடு நை ..நை ..நைன்னு  ஆரம்பிக்காத என்று திரு  சற்று குரலை உயர்த்த !

காபி மட்டும் எங்கிட்டு வரும் ? வேல ஒன்னு சொன்னா  கேக்கிறது  இல்ல !!!,தாமரை  சற்று கவலை தோய்ந்த தொனியில் தான் கூறினாள் .

ஆரம்பிக்காத கட்டாயம் இன்னிக்கு வர சொல்றேன் போதுமா ? என்று பேச்சிற்கு முற்று புள்ளி வைத்தார் திரு .

 தூக்க கலக்கத்தை  அம்மா, அப்பாக்கு கொடுத்த அர்ச்சனையிலே கலைத்தாள் அம்மு !போர்வையை உதறிவிட்டு ஓடினாள் கொட்டகைக்கு.. வெளியில் தூறல் நின்ற பாடில்லை ,மழைச்  சாரல் படாமல் இருக்க அம்மா சாக்கு கட்டி கொண்டிருந்தாள் கொட்டகையில், நிறைமதமாய் நிற்கும் மாடு,இனம் புரியாத வலியில் பாவமாய்  பார்த்தது!!

முகத்தின் அருகே  சென்று தடவிக் கொடுத்தேன் , மாடு வலியில் விட்ட பெரு மூச்சால் என் கை கதகதத்தது,இங்க என்ன அம்மு பண்ற ? ஸ்கூலுக்கு கிளம்பனும் போயி பல்ல விலக்கு,

அம்மா எப்பம்மா கன்னுக்குட்டி பிறக்கும்?

இன்னைக்கு. இல்லைனா நாளைக்கு பிறந்துரும்,

கன்னுக்குட்டி நல்லா ரோஸ் கலர்ல இருக்கனும்  அப்படித்தான்  கனவெல்லாம் கண்டேன் சரியா ? சொல்லி கொண்டே பள்ளிக்கு கிளம்பினேன்.
 ஸ்கூலுக்கு நேரம் ஆச்சு சீக்கிரம் சாப்பாடு கொடுங்க இல்லனா... வேண்டாம் அம்மு கத்தி கொண்டே கொட்டகை பக்கம் பார்வையை வீசினாள் ,

வலி மிகுந்த பார்வையுடன் பாசமாய் பார்த்தது மாடு அவளை ,பதிலுக்கு அவளும் சிரித்து  வைத்தாள் , அதற்கு புரியும் என்பது தெரிந்து ...

பறக்காத, இட்லி எடுத்திருக்கேன் , கொஞ்சம் ஆறட்டும்  அம்மா சொல்லி கொண்டே ஊட்ட  வந்தாள்...

வெளியில் சைக்கில் சத்தம் அப்பாவும், டாக்டரும்...... அம்மா தட்டை வைத்துவிட்டு வாங்க ,வாங்க என்று சொல்லிக்கொண்டே வாசலுக்கு  போய்விட்டாள்,இட்லியை  விழுங்கி தண்ணியை குடித்தாள் அம்மு ,டாக்டர் மாட்டின் வயிறை அமுக்கி பார்த்து கொண்டிருப்பது நாடு அறையின் சன்னல் வழியே நன்றாய் தெரிந்தது .

அம்மா டாட்டா ,அப்பா டாட்டா சொல்லிவிட்டு தோல்பையை மாட்டிக்கொண்டாள் ...

படலை மூடிட்டு போ..... ஆடு மாடு வந்துரும்  உள்ள.... ....அம்மா கத்தினாள், கொட்டகையில் இருந்து.

வழக்கம் போல வகுப்புகள் முடிந்தது, அதுவரை மறந்திருந்த கன்றுக்குட்டியின் நினைவு மீண்டும் தலை தூக்கியது தோழிகளுக்கு
விடை  கொடுத்து விட்டு விடு விடு வென நடையயைக் கட்டினாள்  ....

இரவு அதே எதிர்பார்ப்புடன் கரைந்தது!
 மிகவும் சன்னமான குரல் அருகே ஒலித்துக்  கொண்டே இருந்தது !
வயிற்றில் கன்னுகுட்டி இல்லை !!! சுற்றி பார்த்துட்டேன் தோட்டத்தை ...
எங்கேயும் காணோம் !!!ஒருவேளை நாய் கீய் .....இழுத்தது அம்மாவின் குரல் !!
படாரென்று இயந்திரம் போல் எழுந்து போர்வையையை உதறித்தள்ளி
கண்ணை கண்ணை கசக்கி கொண்டே ஓடினாள் ...கொட்டகைக்கு அம்மு  !

இருவரும் அவளை ஒரு  நிமிடம் திரும்பி பார்த்து விட்டு மீண்டும் தேட  துவங்கினார்கள் ....பாதி  புரிந்தவளாய் அம்மாவிடம் சென்று எங்கே போச்சு? கண்ணு குட்டி என்றாள்  ....தேடி பார்றா ...இப்போதான் நாங்களும் எழுந்தோம் ,என்றாள் அம்மா ....

நல்ல குளிர் ,இன்னும் சூரியன் கண்ணை கசக்கி கொண்டுதான் இருந்தது முழுவதும் தூக்கம் கலையாமல்  ....இருந்த அரை குறை வெளிச்சத்தில் தோட்டத்தின் அருகில் இருந்த சிறு அறையின் ஓரத்தில் சென்று எட்டி பார்த்தாள்  அம்மு ...வெள்ளையாய்  சுவர் ஓர பள்ளத்தில்  எதோ தெரிய...அப்பா விளக்க இங்க கொண்டு வாங்க எனக் காத்திக் கொண்டே ஆயிரம் சாமியை வேண்டிக் கொண்டாள் ... கட்டாயம் பிங்க் கன்னு குட்டியாதான்  இருக்கணும் !!!!

விளக்கு வெளிச்சத்தில் அது கன்று  குட்டி தான் என முடிவு செய்து ,
மெதுவாக அதற்கு அடி  படாமல் பள்ளத்திலிருந்து மீட்டார் அப்பா !!!நடக்க முடியாம தடுமாறி நடந்து இருட்டில் இங்க வந்து விழுந்துருச்சு போல எனச் சொல்லி கொண்டே கன்று  குட்டியை  மாட்டின் அருகே கொண்டு வந்து போட்டு அதன் கால்களில் உள்ள குழம்பை நீக்க முற்பட்டார் .....அம்மா மாட்டின் சினை  பையை ஒரு சாக்கில் கட்டி வைத்து விட்டு ...கொதித்து கொண்டிருந்த வெந்நீரை வெது வெதுப்பாக்கி மாட்டின் பின் புறத்தை கழுவிக் கொண்டிருந்தாள் அதற்கு வலிக்காமல் மெதுவாக ....

பிள்ளையை  பார்த்த மகிழ்ச்சியில் மாடு சுற்றி சுற்றி நடந்தது ,பிரசவித்த  வலியயை மீறி .....அதனை விட கன்று குட்டியின் இளஞ்ச்  சிவப்பு
கலந்த வெள்ளை நிறத்தைக் கண்டு கனவு நினைவானதை எண்ணி அதன் மேல் சாய்ந்து  கொண்டு கொஞ்சி கொண்டிருந்தாள் அம்மு......

அதற்குள் அம்மா கன்றை ஊட்ட விட்டு ..அது குடித்தது போக மீதி சீம்பாலை
காய்ச்சி விட்டு கூப்பிட்டாள் ...இதைக்  குடிச்சுட்டு அப்பாவோட போய் இந்த சாக்கை  ஆல  மரத்தில் கட்டிட்டு வா, என்றாள் .மனம் முழுதும் மகிழ்ச்சியோடு அப்பாவின் பின்னல் அமர்ந்து சாக்கை கையில் பிடித்துக்    கொண்டு அமர்ந்தாள் அம்மு ....  ஆற்றங்கரையின்  ஆலமரம்  நோக்கி அப்பாவின் வண்டி பயணப்பட்டது ..இளம் வாடை காற்றை கிழித்து கொண்டு....

கதையை எழுதி முடித்து விட்டு ...வலை தளத்தில்  செய்தியை படிக்க திறந்தேன் ..."தமிழகத்தில்  பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டை தடுக்கக் கோரி வலியுறுத்தல் "..தலைப்பு செய்தியை  பார்த்து சிரித்துக் கொண்டேன் ....நமது குடும்பத்தில் மாடுகளும் ஒன்று என தெரியாதவர்கள் ....நமது பாரம்பரியம் புரியாதவர்கள்  என .......


ice bell

ஐஸ்  பெல் !
                           விடுமுறை முழுவதும் இந்தமுறை தாத்தா வீடுதான்.கொல்லைபுறத்தில் கொய்யாப்பழம் பறித்துக் கொண்டிருந்தேன் ,தூரத்தில் ஐஸ் பெல் அடிக்கும் ஓசை அப்படியே  போட்டுவிட்டு
வீட்டைச்சுற்றி நான் ஓடி வருவதற்கும் ஐஸ் வண்டி தாத்தா வீட்டு வாசலுக்கு  வருவதற்கும் சரியாக இருந்தது ,ஐஸ் நில்லுங்க.... என்று சொல்லிவிட்டு  ஒரே தாவலாக வீட்டுக்குள் ஓடினேன் காசு எடுக்க ,தாத்தா கட்டிலில்  படுத்திருந்தார்,
காசு கேட்டால் சில்லறை இல்லையடி என்பார் ,மெதுவாக ஆணியில் மாட்டியிருந்த சட்டைப்பையில் கையை விட்டேன்இரண்டு இரண்டு ரூபாய் நாணயம் கையில் சிரித்தது.2 க்ரேப் ஐஸ் ,2 மில்க் ஐஸ் என நான்கையும் கையில் பிடிக்க முடியாமல் பிடித்து வந்து டம்ளரில் போட்டுக் கொண்டேன்.நான் மனதிற்குள் வேண்டியபடியே மாமா ,சித்தி அனைவரும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்... தாத்தாவைத் தவிர .டிவி பார்க்க வேண்டும் யோசித்துக்கொண்டே மெதுவாக நாடு அறைக்குச் சென்று கட்டிலுக்கு பின்னால் அமர்ந்துக் கொண்டேன்.என்னடி கைல ?என்றார் தாத்தா ,ஒண்ணுமில்ல  ஐஸ் என்றேன் மெதுவாக,எத்தனை ?என்றார் ,ஏற்கனவே 2 சாப்பிட்டு  விட்ட  மகிழ்ச்சியில் 4 என்றேன்,மேலும் நல்லா இல்ல தாத்தா ....எனச்  சேர்த்துக் கொண்டேன் .பரவாயில்ல ஒண்ணு   கொடு என்றார் அதட்டலாக ,மனதிற்குள் திட்டியபடியே வேகமாக பால் ஐஸை பாதி சப்பிவிட்டு நீட்டினேன் ,ஏது காசு ?என்றார் உங்கள தூக்கத்தில  தொல்ல பண்ண வேணான்னு நானே எடுத்துக்கிட்டேன்  என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக அடுப்படிக்கு(சமையலறை) ஓடி சாப்பாடு ஆச்சா ?என்றேன் அம்மாச்சியிடம்....  சனிக்கிழமை  வாய்ல போட்றாத விரதம் என்று கத்தினாள் அம்மாச்சி .மீண்டும் பெல் சத்தம் இந்தமுறை வேறுமாதிரி  ஒலித்தது ,திடுக்கிட்டு கண்விழித்தேன் காரில், மடியில் நழுவிய பாப்பாவை தூக்கி கையில் அணைத்துக்கொண்டேன் ,இரவு முழுதும் குழந்தையோடு கண்விழித்தது ,காலையிலிருந்து அழுதது என அசதியில் தூங்கிப்போனேன் என எண்ணிக் கொண்டேன் .தெருக்குள் வந்து விட்டோம் 10 நிமிடமா  கார் நகரல எல்லாம் நம்ம வீட்டுக்குத்தான் போறாங்க போல என்றார் வீட்டுக்காரர் ,இறுதியாக வீட்டு  வாசலுக்கு வந்தாயிற்று பாப்பாவை  அவர் கையில் கொடுத்துவிட்டு ஓடினேன் நாடு அறைக்கு,,, தாத்தா படுத்திருந்தார் இந்தமுறை  ஐஸ் பெட்டியில் ,என்னைப்  பார்த்ததும் அம்மு வந்திருக்கா ,பேத்தி வந்துருக்கா... என ஒரே அழுகை ஓலம் ,ஆனால் எனக்கு மட்டும் கேட்டது  தூரத்தில் ஒலிக்கும்  ஐஸ் பெல் சத்தம் தாத்தாவை  பார்த்தேன் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தார் ஐஸில் ,ஆணியில் மாட்டியிருந்த தாத்தாவின் சட்டையும் என்னையே ஏக்கமாக பார்ப்பது போல்
இருந்தது எனக்கு !



புத்தகமேந்தவேண்டிய கைகள் !


                                                  புத்தகமேந்தவேண்டிய கைகள் !


மிதந்து கொண்டிருக்கும் மேகக் கூட்டங்களையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும் ஹன்சினியிடம்  என்னடா என்ன யோசிக்கிற என்று கேட்டதும் சற்றே என் பக்கம் பார்வையை திருப்பி ஒண்ணுமில்லம்மா நம்ம ஊர் எப்படி  இருக்கும் ? எல்லாரும் எப்படி இருப்பாங்க ? என்னோட ஸ்கூட்டர் எல்லாம் நான் ரொம்ப மிஸ் செய்வேன்ல  ? அங்க கார் இருக்குமா ? அவள் ஒரு கேள்விக்கு பதில் சொல்லுவதற்கு முன்பே அத்தனை  கேள்விகளும் வந்து விழுந்தது ,இங்க  எப்படி இருக்கோ... அதே போலதண்டா அங்கேயும் ,சரி சீட்   பெல்ட்ட  போட சிம்பல் வருது பாரு என சொல்லிவிட்டு அவள் கையில் பசுல்ஸ் அண்ட் மேசஸ் புக்கை கொடுத்துவிட்டு நானும் மிதக்கும் வான்மெத்தையின்  மேல் கண்ணை பதித்தேன் ,கடைசியாக கைகுழந்தையாக  ஹன்சினி இருக்கும் பொழுது இந்தியா வந்தது 4 வருடங்கள் உருண்டோடிற்று நம் நாடு ,நம் வீடு , என்று நினைக்கும் போதே புல்லரிக்கிறது என நினைத்துக்கொண்டே எனக்கு அருகில் வந்த பணிப் பெண்ணையும் கவனிக்க  தவறவில்லை நான் ,1 நான் வெஜ் மீல்சும் 1 வெஜ்  மீல்சும் சொல்லி வாங்கிக்கொண்டேன் ,இருந்த பசியில் உள்ளே போயிற்று வேகமாக   , இங்கே செவிக்கு உணவிடுவதற்கு முன்பே வயிற்றுக்கு  ஈயப்பட்டாயிற்று  என எண்ணிக்கொண்டே  பாரதியின் கவிதைகள் புத்தகத்தை  கையிலெடுத்தேன் , நீங்க தமிழா? என ஒரு குரல் கேட்டது நிமிர்ந்து பார்த்தால் 65 வயது இருக்கும் அந்த அம்மா கண்களில் நான் என்ன சொல்ல போகிறேன் என்ற ஆர்வம் மிகுந்தது ...ஆமாம்மா என்றேன் ,நீங்க பிரான்க்பார்ட் வழியா சென்னை போறிங்களா?  என்றார் அடுத்ததாக ஆமாம்மா என்றேன் ,அப்படி ஒரு பிரகாசம் அவர் விழிகளில் நாங்களும் தான்மா... சென்னை போற வரைக்கும் கொஞ்சம் உதவி பண்ணுங்க என்றவரிடம் கண்டிப்பா நானே கூட்டி போய் விடறேன் வெளில வரைக்கும் கவலைபடாதீங்க என்றேன்.சரிம்மா நான் போய் இனி நிம்மதியா தூங்குவேன் என்றார்.அவரை பார்க்கும் போதே மனது வலித்தது நம் அம்மாவும் இப்படி தானே ஒன்றுமே தெரியாமல் நம் பிரசவத்திற்கு வந்திருப்பாள் எவ்வளவு துன்பப்பட்டிருப்பாள் மொழி புரியாமல், வழி புரியாமல், நினைக்கையிலே கண்கள் ததும்பியது.என்ன செய்தாலும் பெற்றவருக்கு நாம் ஈடே செய்யமுடியாது கடைசி காலமாவது அவர்களிடம் போய் விட வேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டேன்.ஒரு வழியாக நாங்கள் சென்னை  ஏர்போர்ட்டிற்கு  வெளியில்  வந்தோம்... ஆம் அந்த அம்மாவுடன் தான்  , வீடு செல்லும் வழியெல்லாம் மாறிப் போய்  இருந்தது ,அடுத்த நாளே ஊரில் நடக்கும் நிகழ்ச்சிக்காக உடைகள் வாங்க செல்லும் வரை இந்தக் கதைக்கான கரு கிடைக்கவில்லை ,கடைக்கு வெளியே என் மகள் வயதே ஆன குழந்தை அக்கா ...... இத வாங்கிக்கங்க அக்கா 1 ஸ்டிக்கர் அட்டை வாங்கிக்கங்க..... இன்னும் சாப்பிடவே இல்லை என்று சொல்ல சொல்ல எனக்கு இந்த சமுதாயத்தையும் இந்த பிஞ்சுக் குழந்தையை பெற்றவரையும் நினைத்து  ஆத்திரமாக வந்தது, அம்மா.... பாவம் அந்த பாப்பா,  நீங்க ரியல்லி  பேட் ஒண்ணுமே ஹெல்ப் பண்ல அவளுக்கு, அவ ஏன் சாப்பிடல ,ஏன் இந்த டிரஸ் போட்ருக்கா ? அவங்க அம்மா எங்க ?ஹன்சினி  கேட்கும்போதே அழ ஆரம்பித்து விட்டாள் ,எனக்கு என்ன  சமாதனம்  சொல்வதென்றே  தெரியவில்லை,இந்த சமுதாயம் இப்படியே ஊறிப்போய் கிடக்கிறது இதனை மாற்ற என்ன செய்யலாம் ?இந்த வகையான பெற்றோரை எப்படி மாற்றலாம் ?இப்படி நினைத்துக் கொண்டே காரில் ஏறிக்  கொண்டேன் . அந்தக் குழந்தையிடம் வாங்கிய போனி ஸ்டிக்கரை  ஆசையாக கட்டிக்கொண்டு வந்தாள்  இவள்  ,எப்படியொரு உலகம் இது ,இதே போல் அம்மா அப்பாவுடன் விளையாட வேண்டிய குழந்தை அது   இப்படி தெருவில் விட்டார்களே !!அரசியல்,மனிதம்,கல்வி எதுவுமே இவைகளை மாற்றாதா?
இப்படி எண்ணிக் கொண்டே வீடு வந்தேன் ,மறு நாள் குழந்தையோடு வெளியே வரவே பயம்தான் ஏனெனில் அவள் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை ,ஆனால் அவள் விடுவதாக இல்லை ,அபர்ட்மெண்டை  விட்டு வெளியிலே வந்ததும் இரண்டு சிறுவர்கள் ஓடி வந்தார்கள் அக்கா ,அக்கா  பாப்பாக்கு புக் வாங்கிக்கங்க 2 புக் 20ரூபாதான் என்றான்  ஒருவன், சரி கொடு என்று 20 ரூபாயை கொடுத்து திரும்புவதற்குள் அக்கா ,அக்கா  நான் 10 ரூபாய்க்கு தரேன் வங்கிக்க.... என்றான் இன்னொருவன்  ,எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை நான் புத்தகம் வாங்கியவனை கூப்பிட்டு தம்பி பொய் சொல்லாம சொல்லு புத்தகம் என்ன விலை ?என்றேன்... அக்கா இல்லக்கா....நான் சாப்பிடவே இல்லக்கா ,ஒரு புக்கும் விக்கலைக்கா அதான் என்று தலையை சொறிந்தவனை  திட்டுவதற்கோ ,கோபப்படுவதற்கோ  மனம் வராமல் போய்  சாப்பிடு  முதல்ல என்றேன் ,தேங்க்ஸ் க்கா என்றவாறே ஒரு அழகிய சிரிப்பை உதிர்த்து விட்டு சென்றான்.

எல்லாவற்றையும் பார்த்துவிட்டு பாப்பா ..அம்மா ஏன்மா அந்த அண்ணா பொய் சொன்னான்?, ஏன் இவங்களுக்கெல்லாம் சாப்பாடு இல்லை  ?என்றாள் வறுமை,சுயநலம் கொண்ட சமுதாயம் நாம இவங்களுக்கு எதாவது பண்ணனும் பாப்பா என்று கூறிவிட்டு நகர்ந்தேன்  .இதோ ஒரு வருடம் கடந்தே போயிற்று தவிக்கும் பிஞ்சுக் குழந்தைகளின் தாயகத்தை  விட்டு கடல் கடந்து வந்தாயிற்று சொல்லப் போனால் நானும்  அந்த சுயநல சமுதாயத்தில் ஒரு அங்கம் தான் என மனது இடித்துரைக்கிறது , அப்போதெல்லாம் கடவுள் முன் நின்று எனக்கும் ஒரு சக்தியை கொடு அவர்களை வெளிச்சத்திற்கு  கொண்டு வர என வேண்டிக் கொண்டு இருக்க மட்டுமே முடிகிறது  , விரைவில் அந்த பிஞ்சுக்  கரங்கள் பாடப்புத்தகத்தை  தாம் படிப்பதற்கு மட்டுமே ஏந்த ....அரசும் ,பெற்றோரும் உதவுவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருங்கள் என்னுடன் நீங்களும் !!

பள்ளிக்கூடம்


                                                    பள்ளிக்கூடம்!

இந்த வாரம் முழுக்க தொலைபேசியில் என்னோட ஹாட் டாபிக்
   "ஆமாம் வர்ற திங்கள் கிழமை தான் ஸ்கூல் ,அவகிட்ட ஸ்கூல் பத்தி  எல்லாம் சொல்லிருக்கோம்  ,பாப்பாவும் ஸ்கூல் போகணும் ,போகணும்னு சொல்லிட்டே இருக்கா " .என இதே புராணமாக பாடிக் கொண்டிருந்தேன் ,குட்டிம்மா வழக்கம் போல எதையோ ஆராய்ச்சி பண்ணிட்டு வந்து சமர்த்தா என் பக்கத்தில நின்னா ,அம்மா யாரு போன்ல ?என்றாள் "ப்ரியா ஆன்ட்டி மா... என்று சொல்லிவிட்டு,   ஓகே பிரியா பசி வந்துட்டு போல பாப்பாக்கு  நான் அப்புறம் பேசறேன் என இணைப்பை துண்டித்து விட்டு சமையலில் கவனமானேன் .

    அம்மா என் வயிறு பசிக்குது சொல்லுதும்மா என்ற அந்த பிஞ்சு குழந்தையை வாரி அணைத்துக்கொண்டு இன்னும் 5 நிமிசம்தாண்டா கண்ணு என சாப்பாடு கொடுப்பதற்குள்  காலையே கட்டிக்கொண்டு வந்தாள்  குழந்தை .

           பாப்பாவிற்கு பள்ளிக்கு கொடுக்க வேண்டியதெல்லாம் வாங்குவதிலேயே இந்த வாரஇறுதிநாட்கள் பறந்து போயிற்று,திங்கள் கிழமைக் காலை வேகமாக அவளை எழுப்பி ,பல்துலக்கி பாலைக்கொடுத்தேன் , உட்கார்ந்து கொண்டே தூங்க ஆரம்பித்த குழந்தையை பாவமாக பார்த்து விட்டு தொலைக்காட்சியில் அவளுக்கு பிடித்த பொம்மை படத்தை போட்டேன் ,ஒருவழியாக கிளப்பி விட்டு
 இந்தியாவிற்கு பேச தொலைபேசியை எடுத்து 2  தாத்தா ,பாட்டியிடமும் ஆசிர்வாதம் வங்கி முடித்து, காரில்போய் அமர்ந்துக் கொண்டோம் .

           இவளுடைய பள்ளியில் சொன்ன வழக்கப்படி முதல் நாள் விளையாட்டு மைதானத்தில் விட்டுவிட்டு  வந்துவிடவேண்டும் என்பதால் உள்ளே சென்று விளையாடு பாப்பா என கூறி நின்றேன் ,எல்லா குழந்தையும் அம்மா,அப்பா போனவுடன் அழுவதை பார்க்கவே மனம் கசிந்தது.
                 ஆசிரியை வந்து " யு  கேன்  லீவ் வி வில் டேக் கேர் " என்றவுடன் மெதுவாக நகர தொடங்கினேன்,இதுவரை சமர்த்தாக நின்று கொண்டிருந்த பாப்பா காலைக் கட்டிக்கொண்டு அம்மா போகாத நானும் வரேன் என கதற ஆரம்பித்தாள் ,நானும் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு இல்லடா கண்ணா
  பாரு எவ்ள பிரண்ட்ஸ் உனக்கு ஜாலியா விளையாடு தங்கம் என கூறுகையிலே என் குரலும் தளுதளுத்தது ,அவளை வலுக்கட்டாயமாக
 விலக்கி விட்டு நகருகையிலே எனக்கும் அழுகை வெடித்தது ,ஓடி வந்து
   காரில்ஏறிக்கொண்டு தேம்பி அழுத என்னை பார்த்துக் கொண்டே கதறிக் கொண்டிருந்தாள்  குழந்தை.வீடு வந்தும் மனதில்லை, அம்மாக்கு பேசி அழ ஆரம்பித்துவிட்டேன் குழந்த ரொம்ப அலறாம்மா என.
       
  அழுது முடித்தவுடன் அம்மா சொன்னாள் ,நீ முதல்ல பள்ளிக்கூடம் போனப்ப
உனக்கு ஐந்து வயசு ,அப்பவே நீ ரொம்ப அழுத ,பாரு இவ்வளவு வயசு ஆகியும் அழற  அவளுக்கு இரண்டரை வயசுதான் அவ  என்ன பண்ணுவா?.ஆடி ,ஓடி விளையாட வேண்டிய வயசு இது, இன்னும் கொஞ்ச வருஷம் ஆனா நீயே நினச்சா கூட அவ உன்கூட இருக்க மாட்டா ...,ஆனா என்ன பண்றது இப்ப உள்ள காலத்திற்கு நாமலும் மாறனுமே என ஆறுதல் கூறினாள்  .
               
                   இப்போ மனது கொஞ்சம்  லேசாக இருந்தது ,அம்மா சொன்னதின் அர்த்தம் எனக்கு புரியாமல் இல்லை ஆனாலும் மனது ரொம்பவே பாரமாக இருந்தது ,கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன் மணி பன்னிரண்டு
அடித்ததுபசி வந்திருக்குமே ,என்ன பண்ணுவாளோ ,அவசரமா இருந்தா சொல்லுவாளா? டயபர்  வேற போடலையே என ஆயிரம் கேள்விகள் மண்டையைக் குடைந்தது . எனக்கு வீட்டில் நிற்க முடியவில்லை,வாங்க எப்ப வரீங்க ? என நான் செய்த தொல்லையில் அரைமணியில் வந்து சேர்ந்தார் கணவர் ,இருவருமாய் புறப்பட்டு பள்ளியில் கார்கள் நின்ற வரிசையில் சேர்ந்துக் கொண்டோம் ,எங்கள் என்னைப்   பார்த்ததும் பாபாவைத் தூக்கி வந்தார்கள் ,அவர்களுடைய கட்டுபாடுகளெல்லாம் மறந்து கார் கதவைத்தி திறந்துக் கொண்டு ஓடிப் போய்  பிள்ளையை கேட்டேன்,அந்த ஆசிரியையோ
"ப்ளீஸ் வி வில் புட் ஹேர் இன் கார் சீட் " என கொடுக்க மறுத்து விட்டார் ,மனதிற்குள் கருவியபடியே வந்து சீட்டில் அமர்ந்துக் கொண்டேன்,குழந்தை அழுதுக்  கொண்டே கட்டிக் கொண்டாள்  ,எவ்ள சொல்லி கூட்டிட்டு வந்தேன் இறங்காத அவங்களே  வருவாங்கன்னு ....போனியே என்ன ஆச்சு என அவர் கத்தியதெல்லாம்  நாங்கள் கொஞ்சிக் கொண்டதில்  எங்கள் காதில் ஏறவே இல்லை!


pillai mugam

                                           பிள்ளை  முகம்
                   
                    வழக்கம் போல வெள்ளிக்கிழமை மாலை 3  மணிக்கெல்லாம்
அலுவலகத்திலிருந்து புறப்பட்டு  அவசர அவசரமாக ஆட்டோ பிடித்து
எனது தங்கும்விடுதிக்கு ஓடினேன் ,ஆயத்தமாக வைத்திருந்த எனது பெட்டியை தூக்கிக் கொண்டு குறுக்கு வழியைப் பிடித்து ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்கும்  எனது புகை வண்டி கிளம்ப போகும் செய்தி ஒலிபெருக்கியில் வருவதற்கும் சரியாக இருந்தது,ஓடிச் சென்று மகளிர்க்கான பெட்டியைப் பார்த்தேன் நிற்க கூட இடமில்லை ,வேறு வழியில்லாமல் பொது பெட்டியில்   ஏறும்போதே  வண்டி நகர தொடங்கிற்று,இறுதி  நேரத்தில் அடித்து பிடித்து ஏறும் என்னை பெட்டியில் இருந்த அனைவரும் ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்து விட்டு அவரவர் வேலையில்
ஆழ்ந்து விட்டனர்.எவ்வளவு நேரம்தான் நிற்பது எங்காவது சிறிது இடம் கிடைக்குமா? என கண்கள் அலைந்துக்கொண்டிருக்கையில் எனக்கு எதிரே உள்ள வரிசையில் ஒரு அம்மா தனது குழந்தைகளை உட்கார வைத்திருந்தார்,சிறிது நகர்ந்தால் நானும் அமரலாம் என நான் எண்ணுவதை பார்வையிலேயே உணர்ந்த புண்ணியவதி பிள்ளைகளை இன்னும் நகர்த்தி உட்கார வைத்து முழு இடத்தையும் அடைத்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள் ....இன்னும் 5  மணி நேரப் பயணமாதலால் நிற்பது சரிபட்டு வராது  என எண்ணிக் கொண்டே என் பையை கீழே வைத்து அதில் மெத்தென்று அமர்ந்து கொண்டு  தனி சிம்மாசனத்தில் அமர்ந்த பெருமிதத்தோடு அனைவரையும் நோக்கி பார்வையை செலுத்தினேன்,பிள்ளையை நகர்த்த மறுத்த தாய் எனது சிம்மாசனத்தை  பார்த்து பொறாமையில் சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்டார்.
வண்டி சென்னை எக்மோரிலிருந்து ,மதுரை போய்க் கொண்டிருந்தது.
தாம்பரம் வரை நான் என் கையில் இருந்த பாரதியார் கவிதையில் ஆழ்ந்து  விட்டேன் ,தாம்பரம் வந்ததும் சிம்மாசனத்தை விட்டு கட்டாயம் எழ வேண்டும் ,இல்லெயெனில் வழியில் நந்தி போல் அமர்ந்ததற்கு தேநீர் விற்பவரிடமெல்லாம் அர்ச்சனை வாங்கியாக வேண்டும்.ஒரு வழியாக தாம்பரம் தாண்டியது நான் மீண்டும்  என் ஆசனத்தை அமர்வதற்கு  சரி பண்ணிக் கொண்டிருந்தேன் ,மானசீகமாக நான் வாழ்த்திய அந்த தாய் என்னை அழைத்தாள் இங்க வந்து உட்காந்துகங்க என மெல்லிய புன்னகையுடன்.... புரியாத புதிராய் நன்றி என ஆங்கிலத்தில்(தேங்க்ஸ்) உரைத்துவிட்டு அமர்ந்துக் கொண்டேன்,அவர் மடியில் அமர்ந்திருந்த 2  வயதுக் குழந்தை கையால் என்னை  தடவியது,பூக்கள் கூட தோற்றுத்தான் போகும் குழந்தையின் மெல்லிய வருடல் முன் என
கவித்துவமாக மனதுக்குள் எண்ணிக் கொண்டேன்,சற்றே என் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் ஒவொருவராக பேசத் தொடங்கினர்,எல்லோர் அறிமுகப் படலமும் முடிந்தது ஒரே கேள்விக் கணையுடன் எல்லோரும் என்னை பார்பதாகத்  தோன்றியது எனக்கு ,நான் தஞ்சாவூர் அரியலூர்ல இறங்கனும்  என்றேன் .பிறகு  வந்த அணைத்து கணைகளுக்கும் பதில்  கொடுக்க வேண்டியதாய் போனது வேறு கதை .எனக்கு எதிரே மதுரை என்று சொன்ன மனிதர் ராணுவ உடை அணிந்திருந்தார் ,எனக்கு ஒரே ஆர்வம் யாரவது அவரை கேள்வி கேட்க மாட்டார்களா? என,இறுதியாக
 ஒரு வயதானவர் கேட்டார் ஏம்பா
மிலிட்டரியா ?இப்ப என்ன லீவா? என்றார்.  ஆமாம் என்றார் அந்த மனிதர்.மேலும் 5 வருடத்திற்கு பிறகு  போகிறேன் என்றார் அவர் ,தனது சட்டை பையிலிருந்து ஒரு குழந்தையின்  புகைப்படத்தை காட்டினார் என் பெண் என்றார்.அழகா இருக்கு இப்போ  பிறந்திருக்கா என்றேன் நான் .,சிரித்துக் கொண்டே சொன்னார் எனக்கும் அப்படிதான் இருக்கு இப்போ  பிறந்தது போல் என சொல்ல ..அனைவரும் அவரையே பார்த்தோம் , ஆமாம் பிறந்த அன்னைக்கு பார்த்தேன் இபோ 5  வயசு, மனமெல்லாம் அவள் நினைவுதான் என்றார்  அலுங்காமல்.ஒரு  நிமிடம் அனைவரும் அவரை பாசத்தோடு பார்த்தோம் .5 வருஷம் பொறுத்துட்டீங்க  இன்னும் 5 மணி நேரம்தான் என்றேன் நான்,சிரித்துக் கொண்டார்.வாரம், வாரம் தொலை பேசியில் அப்பா அப்பா என மூச்சுக்கு முந்நூறு தடவை பேசுவாள் ,அவளை பார்ப்பதை நினைக்கவே அப்படி இருக்கிறது எனக் கூறி மனிதர் எங்களையும் சிலிர்க்க வைத்தார்.எல்லாம் பேசி முடிப்பதற்குள் எனக்கு அரியலூர் வந்து விட்டது.எல்லோருக்கும் விடை  சொல்லிவிட்டு  புறப்படஆயத்தப்பட்டேன்... என் அருகில் அமர்ந்திருந்த தாய் சொன்னார் எனக்கும் பாரதியார் கவிதைனா  ரொம்ப பிடிக்கும் என ,நான் மனதுக்குள் பாரதிக்கு நன்றி கூறிக்கொண்டேன் அவர் புண்ணியத்தில் இடம் கிடைத்ததற்கு .
பின் அந்த பிள்ளையை பார்த்த அப்பா எப்படி மகிழ்வார் என எண்ணிக் கொண்டே தஞ்சாவூர் பேருந்தை பிடித்தேன் . இந்த முறை அம்மா ,அப்பாவிடம் கூறாமல் செல்லும் ரகசியப் பயணமாதலால் அவர்களைக் காண ஒவ்வொரு  நொடியும் யுகமாக கழிந்தது  .ஒருவழியாக வீட்டுக்கு வருகையில் மணி இரவு 9 .30  ஆகி இருந்தது ,மெதுவாக வாசற்கதவை திறந்துக் கொண்டு ,அழைப்பு மணியை அழுத்தி விட்டு ஒளிந்துக் கொண்டேன் .அப்பத்தான் வந்தார் சட்டென்று எதிரே வந்து நின்ற என்னைக்  கண்டதும் என்னடா குட்டி? சொல்லாம கொள்ளாம,எப்படி டா  தனியா வந்த பஸ்லேர்ந்து இறங்கி?  என்று சொல்லிக் கொண்டே
 அணைத்துக் கொண்டார், வார்த்தை எழாமல் .மாதம் 2  முறை பார்க்கும் அப்பாவின் பூரிப்பே இப்படி என்றால் அந்தக்  குழந்தையின் தகப்பனின் நிலையை  எண்ணிக் கொண்டு ,அப்பாவைக் கொஞ்சி கொண்டே, வீட்டினுள் இருக்கும் அம்மாவைத் தேடிப் போனேன் .இது  போல் எத்தனை அப்பக்களோ எல்லையில் நமக்காக சொந்த பந்தத்தை எல்லாம்  விட்டு விட்டு என மனதுக்குள் எண்ணம் அலையாய் எழுந்து ஓய்ந்தது . 

3/1/19

இது ஒரு குட்டி கதை 9 வருடங்களுக்கு முன்பு எழுதியது !! காலம் தன் காலில் சக்கரத்தைக் கட்டிக்  கொண்டு தான் ஓடுகின்றது....
                     
                 ஹலோ அம்மா !

அசந்துப்  போய் அமர்ந்தேன்
அத்தானின் அலுவலக ஆயத்தம் முடித்து
தொலைபேசி எடுபதற்குள் 
மெல்லியதோர் சிணுங்கல்
இன்றைய காலை முடிந்தது  என
எட்டி பார்த்தேன்!
இல்லை அம்மா இளைப்பாறிக் கொள் - என
தலையனையை அணைத்தாள் குழந்தை
எண்களைத் தட்டினேன்!
ஹல்லோ ....
அம்மா நான்தான்
மீண்டும் ஹல்லோ.....
நான்தான்
சரியா கேட்கலடி அமெரிக்காலேர்ந்து ....
அடக்க முடியா சிரிப்பு எனக்கு 
கேட்குதா?
விட்டு விட்டு...
வைங்க திரும்ப கூப்பிடறேன் !
ஹலோ
ஹல்ல்லோஒ.......
ஏம்மா கேக்குதா?
அதற்குள் அம்மா என்றாள் பாப்பா
இதோ வரேண்டா  கண்ணா
இப்போக்  கேக்குதுடி சொல்லு என்றாள் அம்மா
 நாளைக்குப்  பேசறேன்மா என்றேன் 
வழக்கம்போல !





மீண்டும் ஒரு அகிம்சை அண்ணல் !

மீண்டும்  ஒரு  அகிம்சை  அண்ணல் ! 

              நம் பாரத  நாடு சுதந்திரம் பெற்று 64  நன்கு ஆண்டுகள் ஆகிய நிலையில் நமது அனைத்து மக்களும் அடிப்படை  வசதிகளையாவது
பெற்றுள்ளார்களா என்றால் நாம் அனைவரும் இல்லை
 என்றே மெளனமாக தலை அசைப்போம்.அதைத்  தவிர நமக்கு வேறு வழியில்லை, ஏனெனில்  தனி மனித சுதந்திரம் இங்கு அவ்வளவு மதிக்கப்படுகிறது. வளர்ச்சித்  திட்டங்கள் கீழ்த்  தட்டு மக்களை சென்று சேராமல் ஊழலும் ,  லஞ்சமும் பெருகிவிட்டது.இத்தகைய நிலையில் நமது உணர்ச்சிகளுகெல்லாம் வடிவம் கொடுக்க தனது  முதுமையையும் பொருட்படுத்தாது ஒரு அகிம்சா  சக்தி போராட துவங்கி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
           
         ஆம்  நான் கூறுவது நமது நாட்டின் ஊழலை  நினைத்து நாம்
 மனதளவில் குமுறிக்  கொண்டிருக்கும் வேலையில் அதனை  துணிவுடன் எதிர்த்து தன் கொள்கையை முன் வய்த்த  அண்ணா அசாரேவைப் பற்றித்தான் .இந்த மாபெரும் அகிம்சை சக்தி 1938  ஆம் ஆண்டு சூன் மதம் பிறந்தார்.இவர் ஒரு சமூக சேவகராக  மகாராட்டிரத்தின் ராலேகாவ் சித்தி எனும் சிற்றூரில் ஆற்றிய பணியால் வெளிஉலகுக்கு தெரிந்தார்.இவரது சமூகப்  பணிகளுக்காக   இந்திய அரசு மிகச்  சிறந்த விருதான பத்ம பூசனை 1992  இல்  வழங்கியது குறுப்பிடத்தக்கது.
             
               இத்தகைய சிறப்பு மிக்க அண்ணா அசாரே அவர்கள் தற்போது
 ஊழலுக்கெதிராக  அரசு தயாரித்துள்ள லோக்பால் சட்டத்தை வலுமிக்கதாக மாற்றி
 அமைக்க வேண்டும் என போராடி வந்தார்.லோக்பால் சட்டத்தில் அணைத்து பிரதிநிதிகளும் 
அரசு சார்புள்ளவர்களாய்  இருப்பதால் எந்த அளவுக்கு இதனால் மக்களுக்கு
 நன்மை இருக்கும் என்ற ஐய வெளிப்பாட்டின் விளைவாகத்தான் 
இதனை எதிர்க்கிறார் அண்ணா அசாரே ,இதற்காகமுன்னாள்
உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே , உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் ஆகியோருடன் ஊழளுக்கெதிரான  இந்தியா  என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஜன் லோக்பால் மசோதா என்ற சட்டவரைவுத் திருத்த குழு ஒன்றை  அமைத்தனர் .
              இது அரசு தயாரித்துள்ள லோக்பால் சட்டவரைவுத்  திருத்தக்  குழுவை   விட வலுவானதாக  உள்ளது. இதன்படி 50  விழுக்காடு பொதுமக்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கு பெற வேண்டும் எனவும் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது .இதனை இந்திய அரசு மறுத்த
 நிலையில் அன்ன அசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்து  ஏப்ரல் 5  ஆம் தேதி ஜன் மந்தரில் அதை நடத்தியும் காட்டினார்.
               பல தலைவர்களும் உண்ணாவிரதத்தை கைவிட  கோரினாலும் அன்ன அசாரே தன் முடிவிலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை.மக்களின் பேராதரவுடன் 4  நாட்கள் முடிந்த நிலையில் காங்கிரசின் தலைவர் சோனியா காந்தியின் பெரும் முயற்சியால் அரசு நமது அன்ன அசாரேவின் கருத்துக்களை ஏற்றுக்  கொண்டு அவர்க் கூறியபடி  சட்ட வரைவு
திருத்தக்  குழு அமைக்க ஒப்பு கொண்டது.
              
                   இத்தகைய பெரும் வெற்றியை தனது அகிம்சை முறையால் பெற்ற அசாரேவும்,அவரது ஆதரவாளர்களும் ஏப்ரல் 8 ஆம் தேதி உண்ணாவிரதத்தை முடித்தனர் .இந்தியா மக்களுக்கு  இதுவே உண்மையான வெற்றி என அசாரே  கூறினார் .இந்த வெற்றியை மக்கள்  கொண்டாடியும்  நம் அசாரேவின் விடாமுயற்சியை பாராட்டியும் வருகிறனர்.


     சட்டவரைவுத்  திருத்தக்  குழுவின்  சாராம்சம் பின்வருமாறு:  (செய்தி:தட்ஸ் தமிழ்)
      
அரசு சார்பாக பங்கேர்ப்பவர்கள்


நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி,


உள்துறை அமைச்சர் ப சிதம்பரம்,

சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி,

மனிதவள மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் மற்றும்

நீர்வளத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.

பொதுமக்களின் பிரதிநிதிகள்:

சமூக சேவகர் அன்னா அசாரே


நீதிபதி சந்தோஷ் ஹெக்டே,

சட்டநிபுணர் சாந்தி பூஷன்

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும்

அரவிந்த் கேஜ்ரிவால்


லோக்பால் சட்டத் திருத்தக் குழு தலைவர்: பிரணாப் முகர்ஜி


இணைத் தலைவர் : சாந்தி பூஷன்

அமைப்பாளர்: வீரப்ப மொய்லி

               ஜூன் 30 ஆம் தேதிக்குள் இந்தக் குழு தன் அறிக்கையை சமர்ப்பிக்கும் .
இத்தகைய மாபெரும் வெற்றியை வசந்த மலருடன் சேர்ந்து நீங்களும்
 கொண்டாடுங்கள்.
 வாழ்க அகிம்சை ! வாழ்க இந்தியா! வளர்க  அன்ன அசாரேவின் சேவைகள் !




                            

   
                                    

அது ஒரு பொன்மாலைப் பொழுது!


அது ஒரு பொன்மாலைப் பொழுது
                     வணக்கம் அன்பார்ந்த வாசகர்களே !  "சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்
  செய்வீர்  " என்று சொன்ன பாரதி மட்டும் மே 1 ஆம் நாள்  அட்லாண்டஜார்ஜியா டெக் இல்  இருந்திருந்தால்  அளவில்லா உவகைக்
 கொண்டிருந்திருப்பான்  ,அத்தகைய வண்ணம் அருமையானத்  தமிழ்ப் பாடல்களை திருமதி.சோபனா  விக்னேஷ் அவர்கள் பாடினார்.
இந்த மே தினத்தை நாம் கண்ட இசை விழா மிக இனிமையானதாக மாற்றியது என எண்ணுகிறேன்,விழாவிற்கு வந்த அனைவரும்
 மிகச் சிறந்த தமிழிசையில் திளைத்திருந்திருப்பார்கள்  என்பதில் கடுகளவேனும் ஐயமில்லை.
  முதலில் பாடிய சோபனா  விக்னேஷின்  பாடல்களால் அரங்கமே தமிழிசையில்  நனைந்தது ,
அவர் பாடிய 'அசைந்தாடும் மயிலொன்று  கண்டால்' பாடல், கேட்ட  அனைவரது  உள்ளத்தையும் கவர்ந்திழுப்பதாக
  இருந்தது.'துன்பம் நேர்கையில் யாழெடுத்து  நீ  இன்பம்  சேர்க்க மாட்டாயா?' என்று பாடி நம்மை இன்பக் கடலில்
சிறிது நேரம் திளைக்க வைத்தார் ,காற்றோடு கலந்து வந்த அவரது  'காற்றினிலே வரும் கீதம்'   நம்மை மெய் மறக்கச் செய்தது ,
மேலும் பிரம்மம்  ஒன்றுதான் பாடலை வேறு மொழிகளிலேயே அதிகம்  கேட்ட நமக்கு அதன் தமிழாக்கம் புது உத்வேகத்தைக்
 கொடுத்தது ,அதனைத் தொடர்ந்து அவர் பாடிய குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா பாடலிலும் அவர் எந்தக் குறையும்
வைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
                  அவர் பாடிய பின் ,அட்லாண்டா தமிழ்சங்கம் சார்பாக டாக்டர் .பத்மினி அவர்கள் சோபனா  விக்னேஷிற்கு
தமிழ் இசை வாணி என்ற பட்டதைக் கொடுத்துக் கௌரவித்தார்.திருமதி சோபனா விக்னேஷைத்   தொடர்ந்து வந்த
ஜெர்சி ரிதம்ஸ் குழுவினர் மிக அருமையான இசை மூலம் நம் மனதைக் கொள்ளைக் கொண்டனர். வெய்யில் படப்
 பாடல் நம்மையெல்லாம்  நம் சிறு வயதிற்கே கொண்டு சென்றது என்று சொன்னால் அது மிகையாகாது ! சுவர்ணா மற்றும்
அனிதாவின் "ஒரு கிளி உருகுது" பாடல் நம் உள்ளத்தை   உருக வைப்பதாக  அமைந்தது  ,
மேலும் பல பாடல்களைக்  குழந்தைகளும் பெரியவர்களும் எழுந்து ஆடக் கூடிய வகையில் பாடி
அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தினர் ஜெர்சி ரிதம்ஸ்  குழுவினர் .மேலும் நமது அட்லாண்டா  மக்களின்
 ரசிப்புத் தன்மை ஜெர்சி ரிதம்ஸ் குழுவினரை  வியக்க வைப்பதாக  அமைந்தது என்பது  "இப்படிப்பட்ட ரசிகர்களை
நாங்கள் இதற்கு முன் கண்டதில்லை அருமை" என்று அவர்கள்  கூறியதிலிருந்து  தெள்ளத் தெளிவாக விளங்கியது.
            ஜெர்சி ரிதம்ஸ் குழுவினரைத் தொடர்ந்து பாட வந்தக் கிரிஷ் கல கலப்பாகப்  பேசி அரங்கத்தையும் மகிழ்ச்சியில்
 ஆழ்த்தினார்  ,மேலும் அனைத்து ரசிகர்களையும்  தனது  இனிமையான பாடல்களால்  கவர்ந்தார்.
                               
                                   " காணி நிலம் வேண்டும் பராசக்தி
                                     காணி நிலம் வேண்டும் " என்று அன்றே சொன்னான் பாரதி நமது இசை நிகழ்ச்சியின்
 நோக்கமும் இதேதான் 'அட்லாண்டாவில் தமிழ் மையம் '  இதனைப்  பற்றி  திரு .தங்கமணி  அவர்கள் நிகழ்ச்சியில்
 தெளிவுப்படுத்தினார்.இசை நிகழ்ச்சி நம்மையெல்லாம் மகிழ்வித்ததோடல்லாமல்,  நமது உயரிய நோக்கம் நிறைவேற
உறுதுணையாய்  முடிந்தது என்பதில் நமது அட்லாண்டா  தமிழ்ச் சங்கம் மகிழ்ச்சியடைகிறது, மேலும் இத்தகைய
 வெற்றியை அடைய உதவிய உயர்ந்த உள்ளங்களாகிய உங்களுக்கும் தமிழ்  சங்கம் நன்றியை சமர்ப்பிக்கின்றது  .
                      
                       இமை நேரமும் உன்னை மறக்க மாட்டோம்
                       எம் கடன் ஆற்றாமல் இறக்க மாட்டோம்
                       அமுதத் தமிழைத் துறக்க மாட்டோம்
                       தனக்கென வாழ்ந்தது சாவுக்கொப்பாகும்
                        தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும்
                        தமிழே உனக்கு வணக்கம் .
                                                          - பாரதிதாசனார் .

மேற்கண்ட பாரதிதாசனாரின் வாக்கிற்கேற்ப  விரைவிலேயே நமது இலக்கை  நம்  முயற்சியாலும் ,தமிழ் மக்களின்
ஒத்துழைப்பாலும்   அடைவோம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி .
                                         வாழ்க தமிழ் !வளர்க தமிழ் மொழி !


கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்!
                                                       இந்த வருடத்தின் மிகப் பிரசித்தி பெற்ற திருமணமாக ஏப்ரல் 29 ஆம் நாள் இளவரசர் வில்லியம் ,கேட்ஸ் மிடில்ட்டனின் திருமணம் நடந்து முடிந்தது.மறைந்த இளவரசி டயானா,சார்லஸ் ஆகியோரின் மகனான வில்லியமிற்கும், கேட் மிடில்ட்டனுக்கும்  புராடஸ்டன்ட் முறைப்படி மோதிரம் மாற்றி திருமணம் நடந்தது.நடந்து முடிந்த திருமணத்தால் மக்களின் வரிப்பணம் பெருமளவில் வீணடிக்கப்பட்டது என்பது பரவலான கருத்தாக லண்டனில் பேசப்பட்டது ,அதெல்லாம் ஒருபுறம் இருக்க  நமது இந்தியாவின் பழம் பெரும் திருமண முறைகளைப் பற்றி சிறிது பார்க்கலாம் வாருங்கள் !
                                                        
                                          நமது ஒட்டு மொத்த இந்தியர்கள் ஆகட்டும் ,தமிழர்கள் ஆகட்டும் திருமண பந்தத்தை இன்றளவும் மிக உன்னதமான வாழ்க்கையின்     அங்கமாகவே கருதுகின்றனர்.நம் நாட்டில்  பல பிரிவைச் சார்ந்தவர்களும் ஐக்கியமாவதற்கு முன்பாகவே  இருந்த இந்து மதத்தின் முறைப்படி 8 வகையான திருமண முறைகள்  வரையறுக்கப்பட்டுள்ளது  ,அவையாவன பிரம்மா திருமணம்,தைவா திருமணம்,அர்சா திருமணம்,பிரஜபத்திய திருமணம் ,காந்தர்வா திருமணம், அசுரா திருமணம் ,ராட்சச திருமணம்,பைசாச திருமணம் .
                             இதில் பிரம்மா திருமண முறையும்,பிரஜபத்திய முறையுமே  இன்றளவும் பெரும்பான்மையாக நடைமுறையில் உள்ளது முதல்  முறைப்படி மணமகன் வீட்டார் தனது மகனுக்கேற்ற பெண்ணை பெண் வீட்டாரின் குடும்ப பாரம்பரியத்தைக் கொண்டு தேர்ந்தெடுத்து பெண் கேட்பார்கள் ,பெண் வீட்டார் மணமகனின் கல்விதகுதிகளை ஆராய்ந்து தனது பெண்ணை கொடுக்க ஒத்துக் கொள்வர் . இரண்டாவது முறைப்படி பெண் வீட்டார் தனது பெண்ணுக்கேற்ற மணமகனைத் தேடி மணமுடிப்பார்..காந்தர்வ திருமணம் என்பது இன்றையக்  காதல் திருமணம் என்றுக் கூறப்படும் வகையைச் சேர்ந்ததாகும்.இதனைத்  தான்  நமது  சங்க  இலக்கியங்கள்  களவியல்  என்றுக்  கூறுகின்றது .எடுத்துக்காட்டாக தொல்காப்பியர்  கூறும் களவியல் பண்பாட்டைக் காண்போம் ,
                  
                   "ஒன்றே வேறே என்றிருபால் வயின் 
                    ஒன்றி யுயர்ந்த பால தாணையின்
                    ஒத்தக் கிழவனும் கிழத்தியும் காண்ப
                    மிக்கோ னாயினும் கடிவரை யின்றே"(களவியல் -௨)

திருமணத்திற்கு உரிய பருவம் எய்திய ஆணும் பெண்ணும் தாமே எதிர்ப்பட்டு
காதலித்து மணந்துக் கொண்டனர் ,இவ்வாறு மணப்பது அவரவர் விதியின் வழியே நிகழும் என்கின்றார் தொல்காப்பியர் .மற்றத் திருமண முறைகள் இன்றைய வாழ்க்கைச் சூழலுக்கு நமக்கு ஒவ்வாதவை ஆகும்.(நன்றி:வெட்டிங்.ஐலவ் இந்தியா.காம்)

                            நமது இந்தியாவின் பலப் பகுதிகளில் திருமணப் பந்தத்திற்கு
மாங்கல்யம் என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.அதே போல் திருமணத்திற்கான அடையாளமாக குங்குமம் ,மஞ்சள்,வாழை மரம் இவை எல்லாம் நமது தமிழகத்தின் வழக்கமாக உள்ளது .திருமணத்தின் போது நமது உறவினர்களெல்லாம் புதிதாக மனம்  முடிப்பவர்களை வாழ்த்துவதும், திருமண வீட்டார்  வாழ்த்தியவர்களுக்கு  நல்ல உணவிட்டு வழி அனுப்புதலும் தொன்று தொட்டே நமது பண்பாடாக இருந்து வருகின்றது.இத்தகைய திருமணங்களை ஆடம்பரமில்லாமலும், வறியோருக்கு உணவிட்டு ஆசி பெற்றும் நடத்தும் வழக்கத்தை அத்திப் பூத்தார் போல் எவரேனும் ஆங்காங்கே செய்து கொண்டுதான் உள்ளனர்.
                                                 
                            இத்தகையச்  சிறப்பு பெற்ற திருமண பந்தத்தால் தோன்றும் இல்வாழ்க்கையைப் பற்றி வள்ளுவர் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார் .
                         
                                "அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
                                பிறன்பழிப்பது  தில்லாயி னன்று" .

அறம் என்று சிறப்பித்துச்  சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும் ,அதுவும் மற்றவர் பழிக்கும் குற்றமில்லாமல் இருந்தால் மேலும் நன்மையாகும்.வள்ளுவரின் இந்த வாக்கை  பின்பற்றி வாழ்ந்தாலே நம் வாழ்க்கை இனிமையானதாக இருக்குமல்லவா!